துன்பம் வரும்போது சிரியுங்கள்!

ந்தச் செய்திகளைக் கொஞ்சம் அதிர்ச்சி அடையாமல் படியுங்கள்.
‘‘நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’
‘‘பொதுப் பணவீக்கம் 9.78 சதமாக உயர்வு. பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடுவது தவிர்க்க முடியாததாகிறது.’’
‘‘அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது.’’
- இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாட்டின் நிதி அமைச்சர், ‘‘நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன’’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது இப்படித்தான் சொன்னார்.

உலகிலேயே பெட்ரோலை அதிக விலைக்கு விற்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஏறத்தாழ 98 நாடுகளில் இந்தியாவைவிட பெட்ரோல் விலை குறைவு. இந்த ஆண்டில் 5-வது முறையாக, கடந்த வாரம் பெட்ரோல் விலையை உயர்த்தியது மத்திய அரசு. மத்தியத் திட்டக் குழுத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் இதுகுறித்து கருத்து கேட்டால், ‘‘இந்த விலை உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார்.
அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சுய உணர்வோடுதான் பேசுகிறார்களா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒட்டுமொத்த அரசாங்கத்தின் செயல்பாடும் சுய உணர்வு அற்ற நிலையில்தான் இருக்கிறது.
விலைவாசி உயர்வு மக்களைக் கொன்றுகொண்டு இருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற இந்த 7 ஆண்டு ஆட்சிக் காலத்தில் டீயின் விலை மட்டும் 100 சதவிகிதம் ஏறி இருக்கிறது. மக்கள் நொந்துபோய் இருக்கிறார்கள். ஆனால், அரசின் நடவடிக்கைகளோ வெறுப்பேற்றுகின்றன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று கூறி கடந்த வாரம் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 25 ரெபோ புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ் வங்கி. இதைத் தொடர்ந்து வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 18 மாதங்களில் இப்படி வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இது 12-வது முறை.
பொதுவாக, பணவீக்கம் திடீரென அதிகரிக்கும் சூழலில், அதைக் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்படும் அவசர சிகிச்சை வழிமுறை இது. நீண்ட காலப் பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வாகாது. மேலும், எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும். உதாரணமாக, தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருள்கள் விலை உயரும்போது, உற்பத்தியைப் பெருக்காமல் வட்டி விகிதத்தை அதிகரிப்பது, மக்களின் பசிக்கு எப்படித் தீர்வாகும்?
பொருளாதார மந்தநிலையில் இருக்கும் ஒரு நாடு, வட்டி விகிதத்தை இப்படித் தொடர்ந்து உயர்த்துவது முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டுகளில் இறங்குவதைக் குறைக்கும். இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் குறையும். இதன் விளைவாக உற்பத்தியில் தேக்கம் ஏற்படும். இதன் விளைவாக பொருளாதார மந்தநிலை மேலும் வலுவடையும். நம் அரசு இப்போது அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறது.
அரசு இப்போது இன்னொரு நடவடிக்கையிலும் இறங்கப்போவதாகத் தகவல்கள் கசிகின்றன. அதாவது, ரூ 4 லட்சம் கோடி கடன் வாங்கி பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இறங்குவது. அண்ணன் அமெரிக்காவின் பாணி இது. அமெரிக்கப் பொருளாதர வீழ்ச்சியைக் கடன்தான் தொடங்கிவைத்தது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் அடுத்தடுத்து வீழ்ச்சியைச் சந்திக்க இந்தப் பாதையே காரணமாக இருந்தது.
இதுபோன்ற சூழல்களில் ஓர் அரசு புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பது மிக அவசியமானது. நாடு  பொருளாதார ரீதியாக வீழ்ந்துகொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கோ அரசியலைத் தாண்டிக் கவலைப்பட நேரமே இல்லை. அது சரி, யாருக்குத்தான் நாட்டின் பொருளாதரத்தைப் பற்றி கவலைப்பட நேரம் இருக்கிறது என்கிறீர்களா?
2011 விகடன் டாட் காம்  

1 கருத்து:

  1. மிகசிறந்த புள்ளி விவரங்கள் தினமணியில் உங்களின் எழுத்தை விரும்பி படிக்கிறேன் பாராட்டுகள் தொடருங்கள் நன்றி

    பதிலளிநீக்கு