சந்தி சிரிக்கும் இந்திய மானம்

சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள்: இந்திய ராணுவத்தினர்! அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட்டு இருந்த இந்திய வீரர்கள் அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி இருக்கிறது!
 ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமையும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில் 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களிலேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்க நாடுகள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடினர். இதுவரை 54 லட்சம் பேரின் உயிரை காங்கோ போர் பறித்துள்ளது!
காங்கோ போர் பாதிப்புகளில் மிக முக்கியமானது பெண்கள் மீதான வன்முறை. உலகிலேயே பாலியல் வன்முறைகள் மலிந்த நாடு காங்கோதான். பலாத்காரம் என்பது இங்கு ஓர் ஆயுதம்.  ஒரு பெண்ணைப் பலர் சேர்ந்து சிதைப்பது அல்லது ஆயுதக் குழுக்களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைக் கொண்டு சிதைப்பது... இதன் மூலம் எதிரி சமூகத்தை நோயாளிகளாக்கி முடக்குவது என்பது காங்கோ போரின் முக்கியமான வியூகங்களில் ஒன்று. இந்தப் போர் காலகட்டத்தில் மட்டும் குறைந்தது 2 லட்சம் பெண்கள் காங்கோவில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றன ஐ.நா. சார் அமைப்புகள்.
ரத்த ஆறு கட்டுமீறி ஓடிய நிலையில், கடந்த 2003-ல் சர்வதேச தலையீடுகள் காரணமாக காங்கோவில் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, ஓர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் தொடரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படை காங்கோவுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 22,000 பேரைக் கொண்ட அந்தப் பன்னாட்டுப் படையில் 3,896 பேர் இந்திய வீரர்கள். காங்கோவில் இந்திய ராணுவம் இப்படிதான் கால் பதித்தது. ஆனால், யாரைப் பாதுகாக்கச் சென்றார்களோ அவர்களையே பதம் பார்த்து வந்து இருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் மெல்லக் கசிந்தது. ஆனால், அப்போது அமைதி காக்கும் படையும் இந்திய ராணுவமும் விஷயத்தை மூடி மறைத்தன. அமைதி காக்கும் படைக்கு வீரர்களைப் பங்களிப்பதில் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இந்தப் பின்னணியில் இந்தியாவைச் சங்கடத்துக்குள்ளாக்குவதைத் தவிர்த்தது அமைதி காக்கும் படை. ஆனால், இந்திய வீரர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், முதல்கட்ட விசாரணைக்கு அது உத்தரவிட்டது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை இந்த விசாரணை உறுதி செய்தது. இதுகுறித்து தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இவ்வளவுக்குப் பிறகும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘இந்தக் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை!’ என்று கூறிவந்த இந்திய ராணுவம் ஐ.நா. சபையின் தொடர் நெருக்குதல்களால் கடந்த மே 24&ம் தேதி இது தொடர்பாக விசாரிப்பதாக அறிவித்தது. இத்தகைய சூழலில், இந்திய வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் இந்திய ஜாடையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப் பற்றியும் செய்திகள் வெளியானதால், கையும் களவுமாகப் பிடிபட்டு இருக்கிறது இந்திய ராணுவம்!
பாலியல் குற்றச்சாட்டுகள் இந்திய ராணுவத்துக்குப் புதிதல்ல. சொல்லப்போனால், அவை நம்முடைய ராணுவத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத _ அதிகம் படிக்கப்படாத _ ஓர் அத்தியாயம். காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் ‘ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்ட’த்தைக் கேடயமாக வைத்து காலங்காலமாக அத்துமீறல்களை நடத்திவருகின்றன நம்முடைய படைகள்.
மணிப்பூரில் மனோரமா என்ற இளம்பெண் ஆயுதப் படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதையும் அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் ‘இந்திய ராணுவமே எங்களையும் பலாத்காரப்படுத்து’ என்கிற பதாகையோடு நடத்திய நிர்வாண ஆர்ப்பாட்டத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துளி நீரைப் பருகாமல் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் அடித்தளம் மனோரமா கொலைதான்!
காஷ்மீரில் நம்முடைய ஆயுதப் படைகளின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் ‘காஷ்மீர் மீடியா சர்வீஸ்’ காஷ்மீரில் மட்டும் 1989 ஜனவரியில் தொடங்கி கடந்த ஜூன் வரை 9999 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த ஜூன் மாதத்தில்கூட இரு பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஈழத்தில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இன்றைக்கும் சொல்லி அழுகிறார்கள் தமிழ்ப் பெண்கள்.
ஆனால், நம்முடைய ராணுவம் எப்போதுமே இத்தகைய குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதையே வழக்கமாகக் கொண்டு இருக்கிறது. நம்முடைய ராணுவத்தைப் பொருத்த அளவில் ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால், அது வழக்காகப் பதிவுசெய்யப்படுவது மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்போது மட்டும்தான். ராணுவத்தினரின் அத்துமீறல்களில் குறைந்தது ஒரு சதவிகிதக் குற்றங்கள்கூட பதிவுசெய்யப்படுவது இல்லை என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ஆனால், அப்படி பதிவுசெய்யப்படும் வழக்குகள் மீதும்கூட சர்ச்சைக்குரிய விசாரணைகளையே நடத்தி இருக்கிறது நம்முடைய ராணுவம். உதாரணமாக, காஷ்மீரில் 1994&ல் தொடங்கி 2010 வரை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக ராணுவம் அதிகாரபூர்வமாக விசாரணை நடத்திய வழக்குகள் 988. ‘‘இந்தப் புகார்களில் 95 சதவிகித புகார்கள் (940 வழக்குகள்) போலியானவை’’ என்று கடந்த ஆண்டு கூறினார் நம்முடைய தரைப்படைத் தளபதி வி.கே.சிங்.
ஆனால், எல்லாவற்றையும் மீறி ராணுவத்தின் தவறுகள் பல் இளிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் இந்திய ராணுவ உயர் அதிகாரியான அலோக் ரஞ்சன் தன்னுடன் நியூயார்க் விமானத்தில் பயணித்த சகப் பெண் பயணியிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டு மாட்டியபோது, வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் ‘‘பாலியல் அத்துமீறல்களை இந்திய அரசு துளியும் சகித்துக்கொள்ளாது’’ என்று முப்படைகளின் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும் சூழலை இந்திய அரசுக்கு ஏற்படுத்தியது. அடுத்த சில மாதங்களிலேயே அதைவிடவும் பெரிய அடியைத் தந்தார் ஏ.கே.நந்தா. இந்தியத் தரைப்படையின் பொறியியல் தலைவரான இவர் தன்னுடைய தொழில்நுட்பச் செயலரின் மனைவியைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறார்.
பொதுவாக ராணுவத்தினர் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும் நம்முடைய ராணுவம் முன் வைக்கும்  உடனடி பதில் இதுதான்: ‘‘இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது. இந்திய ராணுவத்தின் நன்மதிப்பைக் குலைக்கச் செய்யும் உள்நோக்கம் கொண்டது!’’
நாம் கண்டும் காணாததுபோல நடிக்கலாம். ஆனால், உலகத்துக்கு அந்தத் தேவை இல்லை. சீன ஊடகங்களும் பாகிஸ்தான் ஊடகங்களும் இந்திய ராணுவத்தின் ஒழுங்கீனங்களை விலாவரியாக எழுதி சிரிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரபூர்வ இணையதளம் இந்திய ராணுவத்தின் ஒழுக்க நெறிகளை எள்ளி நகையாடுகிறது.
இந்திய அரசு ராணுவத்தின் விவாகரங்களில் தலையிடுவது இல்லை. நம்முடைய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உண்டு: ஒருவருடைய தவறில் மற்றவர் தலையிடுவது இல்லை என்று. நம்முடைய எதிர்க்கட்சிகளும் அப்படியே. ஊடகங்களும் பொதுவாக ராணுவ விவகாரங்களில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கின்றன. குடிமக்களும் அப்படியே!
என்ன செய்வது? சுதந்திரமும் ஜனநாயகமும் அவற்றின் உண்மையான அர்த்தத்தை இழந்துவிட்ட ஒரு தேசத்தில் ஆயுதப் படைகளின் எல்லாத் தவறுகளையும் மூடி மறைக்க ‘தேசபக்தி’ என்ற ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது!
2011 ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக