அரசியல் விழுங்கிய உரிமைக் கடல்



நாம் அறிந்திருக்கும் இலங்கையைவிட, தமிழகக் கடலோடிகள் அறிந்திருக்கும் இலங்கை நெருக்கமானது. பல்லாண்டு காலமாக அவர்கள் இலங்கையோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக, இரு பக்கக் கடலோடிகளுக்குமே பக்கத்து நாடு ஒரு நாடாக இல்லை; பக்கத்து ஊராக இருந்திருக்கிறது, தொலைவில் மட்டும் அல்ல; கலாச்சார உறவிலும்.

“எங்க முன்னோருங்க சொல்லுறது இது. பல ஆயிர வருஷங் களுக்கு முன்ன இந்த நெலப்பரப்பு முழுக்க ஒண்ணாதாம் இருந்திருக்கு. அப்புறம் கடக்கோளுல ஒடைஞ்சு இலங்கை தனியாவும் இந்தியா தனியாவும் ஆயிருக்கு. எடயில உள்ள சனம் முழுக்க கடல்ல போயிருக்கு. என்னைக்கா இருந்தாலும், தாயா புள்ளையா இருந்தவங்க நம்மல்லாம்பாங்க.”
- இது நாகப்பட்டினத்தில் கேட்டது.


“இங்கெ உள்ள தெதல், ஓட்டுமா, வட்டளாப்பம், பனை ஒடியக்கூழ் இப்பிடிப் பல சாப்பாட்டு அயிட்டங்கள் இலங்கையிலேர்ந்து இங்கெ வந்து ஒட்டிக்கிட்டதுதாம். அந்தக் காலத்துல ரெண்டு பேருல யார் பெரிய ஆளுன்னு நிரூபிக்க வுட்ற சவால்ல ஒண்ணு, மன்னார் ஓட்டம். தனுஷ்கோடிலேந்து தலைமன்னார் வரைக்கும் நீந்திப் போய்ட்டு வரணும். அந்தத் தலமுறையில கடைசி மனுஷன் நீச்சல் காளி. சில வருஷங்களுக்கு முன்னாடிதான் காலமானாரு. இங்கெ உள்ளவங்களுக்கு அங்கெ ஒரு வூடு இருக்கும், அங்கெ உள்ளவங்களுக்கு இங்கெ ஒரு வூடு இருக்கும். சும்மா வந்து ஒரு வாரம் தங்கி சினிமா பாத்துட்டுப் போற வழக்கமெல்லாம் இருந்துச்சு.”
- இது ராமேசுவரத்தில் கேட்டது.

“கடல் வியாபாரத்துல எப்பவுமே நமக்குத் தனி மரியாத அங்கெ இருக்கும். நம்மூர்லேந்து போற எதுவும் தரமா இருக்கும்ண்டு நம்புவாங்க. அவங்க ஊரு சாமானையேகூடக் கேலி பேசுவாங்க. கொழும்பு மக்களோட உபசரிப்ப வேற எந்த ஊரோடயும் ஒப்பிட முடியாது.”
- இது காயல்பட்டினத்தில் கேட்டது.

“அந்தக் காலத்துல கொழும்புன்னாலே நம்ம கடக்கரயில தனி மவுசு. அது எப்படின்னா, கொஞ்சம் வசதி ஏறிப்போச்சுன்னா, ‘என் பரம்பரயெல்லாம் குடிக்கிற தண்ணியக்கூட வள்ளத்துல கொழும்புலேந்து எடுத்தாந்து குடிச்ச பரம்பரயிடா’ன்னு பேசுவாங்க பாத்தீயளா, அப்பிடி.”
- இது குமரியில் கேட்டது.

இவையெல்லாம் அந்தக் காலத்தைப் பற்றிய குரல்கள். இன்றைய நிலவரம் என்ன?

“படகுல ஏறும்போது ஆழிய நெனச்சுக் கடலம்மாவ வணங்குற நாளெல்லாம் போச்சுங்க. ‘அம்மா... தாயீ... சிலோன் நேவிக்காரன் கண்ணுல படாமக் காப்பாத்து தாயி’ன்னு வேண்டிக்கிட்டுதாம் ஏறுறோம்.”
- இது வேதாரண்யத்தில் கேட்டது.

“கண்ணுல பட்ட வாக்குல தொரத்திச் சுத்தி வளைப்பாங்க. கையத் தூக்கச் சொல்லுவாங்க. அந்தப் படகுலேந்து ஒருத்தம் இந்தப் படகுக்கு வருவாம். தேவைப்பட்ட மீனுங்களை எடுத்துப்பாம். மிச்ச சொச்ச மீனுங்கள அப்பிடியே கடல்ல வாரி வீசி எறிவான். வலய அறுத்துடுவாம். கண்ணுல பட்டது எல்லாத்துக்கும் இதுதாம் கதி. எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சதுக்கு அப்புறம் எங்கள அப்படியே முட்டிப்போடச் சொல்லுவாம். பொரடியிலயே கையில கெடக்கிறத வெச்சு இருக்குவாம். தலையில, பொரடியில, முதுவுல. நாங்க தலய தொங்கப்போட்டுக்கிட்டே இருக்கணும். தல நிமிந்தா மூஞ்சிலயே அடிப்பாம். கீழ தடுமாறி வுழுந்தா, மூஞ்சிலயே பூட்சு காலால மிதிப்பாம். மூஞ்சிலயே துப்புவாம். இஸ்டத்துக்கு அடிச்சுட்டு, படகையும் நாசம் பண்ணிட்டு, அவம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பாம்.”
- இது கோட்டைப்பட்டினத்தில் கேட்டது.

“கண்ட வாக்குல சுடுவாங்க. படகைச் சுத்திச் சுடுவாங்க. ஈரக்கொலையெல்லாம் நடுங்கும். ஒரேயொருத்தம் உள்ள வருவான். ‘ஏய், நீ அந்தக் கம்பியக் கையில எடு... நீ, இந்தக் கட்டயக் கையில எடு... ஒருத்தனுக்கொருத்தன் மாத்தி மாத்தி அடிச்சுக்குங்கடா’ம்பாம். ‘மூஞ்சில மாறி மாறித் துப்பிக்கிங்க’ம்பாம். ஏய்க்க முடியாது. ‘உனக்கு அடிக்கத் தெரியாதாடா? அடின்னா இப்பிடி அடிக்கணும்’னு ஓங்கி ஓங்கி அறைவான். இதுக்குப் பயந்துக்கிட்டே இப்பம்லாம் அவங்க வர்றது கண்ணுல பட்டாலே படகுல இருக்குற எல்லாத்தையும் நாங்களே கடல்ல வீசியெறிஞ்சுர்றது. அப்பம்லாம் எங்க வேண்டுதல ஒண்ணே ஒண்ணுதாம். ‘ஆத்தா... எங்களை அடிச்சித் துவைக்கட்டும், அப்பிடியே புடிச்சிக்கிட்டுப் போயி ஜெயிலுக்குள்ள அடைக்கட்டும், என்னா சித்திரவதை வேணும்னா செய்யட்டும், சுட்டுடணும்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு வந்துராமப் பாத்துக்கம்மா’ன்னு வேண்டிக்குவோம்.”
- இது ராமேசுவரத்தில் கேட்ட குரல்.

“இப்பிடித்தாம் சுடுவான்லாம் இல்லீங்க. பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி இங்கேருந்து போன சூசைராஜோட படகை எப்படி அடிச்சாங்க தெரியுமா? ஹெலிகாப்டர்ல பறந்து சுட்டான். ஆறு உசுரு. போச்சு. நாலு வாரம் தேடித் திரிஞ்சோம் பொணம்கூடக் கிடைக்காம. பொஞ்சாதி புள்ளைங்க பரிதவிச்சு நிக்குது. பார்க்கச் சகிக்க முடியாமத் திரும்பத் திரும்ப ஓடுறோம். கொடும. கேவலம் பொழப்புக்கு மீன் புடிக்கப்போயி, அந்நிய நாட்டுப் படைக்காரனால சாவுறதைவிட இந்த நாட்டுல கொடும, அந்தப் பொணத்தைக் கொண்டாந்து அடையாளம் காட்டுனாத்தான் அரசாங்க இழப்பீடு கெடைக்கும். இல்லாட்டி ஏழு வருசம் வரைக்கும் இழப்பீடு வாங்கக் காத்துக் கெடக்கணும். பொணத்தை மீட்டோம். அழிஞ்சு செதைஞ்ச அந்தப் பிண்டங்களப் பாத்து வூட்டுல உள்ளவங்க கதறுனது இருக்கே... நாங்க கட்டையில போறவரைக்கும் மறக்காதுங்க...”
- இது பாம்பனில் கேட்டது.

இரு நாட்டு மக்களிடையே இருந்த அழகான ஓர் உறவு எப்படி நாசமானது? 1984-ல் முனியசாமியில் தொடங்கி இலங்கை ராணுவத்தால், இதுவரை சுடப்பட்டிருக்கும் கடலோடிகள் எத்தனை பேர்? அவர்களுடைய விதவைகள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள்? அவர்களுடைய குழந்தைகளெல்லாம் எப்படி இருக்கின்றனர்? உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றின் கடலோடிகளை, ஆசியாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றின் குடிமக்கள் இப்படிக் கொல்லப்பட்டக் காரணம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் ராஜாங்க சங்கதிகள் என்னென்ன?


எது நம் எல்லை?காலங்காலமாகக் கடலோடிகள் கடலில் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை எல்லை தவறிவிடுவது. ஒருகாலம் வரைக்கும் கப்பல்களின் பயணங்களே கரையைப் பார்த்தவாறுதான் அமைந்திருந்தன, திசை தவறி எங்கோ சென்றுவிடக் கூடாது என்று. அப்படிப்பட்ட திசை தவறிய பயணம் ஒன்றுதான் இந்தியாவைச் சென்றடைய வேண்டும் என்று கிளம்பிய கொலம்பஸை அமெரிக்காவில் கொண்டு இறக்கியது. அமெரிக்கா ஒரு காலனி நாடாகி, பின் உலகின் மிகப் பெரிய நவீன காலனியாதிக்க நாடாக உருவெடுக்க வழிவகுத்தது. ஒரு கடல் கலத்தில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அடிப்படையில் நீரோட்டமும் காற்றுமே அதை இயக்குகின்றன. இந்த இயற்கையின் இயக்கத்தைத் தனதாக வரித்துக்கொள்ள மனிதன் நடத்தும் போராட்டமே அவன் கண்டறியும் தொழில்நுட்பங்கள். ஆனால், இயற்கையின் பெரும் பிள்ளையான கடல் என்னும் பிரம்மாண்டத்தின் முன் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் எம்மாத்திரம்? இதனாலேயே, பாரம்பரியக் கடலோர ஊர்களில், கடலோடிகள் மத்தியில் ஒரு மரபு உண்டு. திசை தவறி வருபவர்களுக்கு இளைப்பாற இடம் கொடுத்து, உதவிசெய்து ஊருக்கு வழியனுப்பிவைப்பது. தமிழகக் கடலோடிகள் இன்னும் ஒரு படி மேலே. ஒரு மனிதன் எந்த நாட்டிலிருந்து வந்து இங்கு கரையேறினாலும் சரி, அவனை உபசரித்து, உடல் தேற்றி, அவனுக்குப் புத்தாடை எடுத்துக்கொடுத்து, செலவுக்குப் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைப்பது தமிழகக் கடற்கரை மரபு.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. இங்கே நாம் விவாதிக்கும் எல்லைகளெல்லாம் நவீன காலத்தில் நாடுகள் வகுத்திருக்கும் எல்லைகளே தவிர, கடலோடிகள் கடலைப் பிரிக்க வகுக்கும் எல்லைகளே வேறு. அது உனக்குத் தேவையானதை நீ எடுத்துக்கொள்; எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன் என்கிற எல்லை. நாடுகள் வரையறுக்கும் எல்லைகளைவிடவும் சக்தி வாய்ந்தவை இந்த எல்லைகள். இந்தியர்கள் என்பதாலேயே ஆந்திரக் கடலோடிகளின் படகுகள் கேரளக் கடலில் வந்து மீன்பிடித்துவிட முடி யாது; தமிழக எல்லை என்பதாலேயே குமரிப் படகுகள் நாகப்பட்டினக் கடலில் வந்து மீன்பிடித்துவிட முடியாது. அவரவர் அவரவருக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டே தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதைத் தாண்டிக் கடலோடிகள் தங்கள் எல்லைகளைத் தாண்டிவிட இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, திசை தெரியாமல் அடித்துச் செல்லப்படுவது. இரண்டு, தமக்கான மீன்களைத் தேடி, தங்கள் எல்லையின் விளிம்பு வரை செல்லும்போது இன்னோர் எல்லைக்குள் சென்றுவிடுவது.

உலகெங்கும் கடலோடிகள் இந்த இரு காரணங்களாலும் இன்னொரு நாட்டு எல்லையில் இருக்கும்போது கைதுசெய்யப் படுகிறார்கள். இந்தியாவைச் சுற்றி எடுத்துக்கொண்டால், ஜப்பான் - சீனா இரு நாட்டுக் கடலோடிகள் இடையே இப்படியான கைதுகள் நடக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே கைதுகள் நடக்கின்றன. வங்கதேசம் - மியான்மர் இடையே நடக்கின்றன. ஏன், தலைமன்னார் பக்கம் போய் நம் கடலோடிகள் எப்படி மாட்டிக்கொள்கிறார்களோ, அப்படியே இலங்கைக் கடலோடிகள் கேரளப் பக்கம் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால், பிடிபடும் கடலோடிகள் வேறு எங்கும் இப்படித் தாக்கப்படுவது கிடையாது, காட்டு மிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்யப்படுவது கிடையாது, சுட்டுக்கொல்லப்படுவது கிடையாது. இலங்கை ராணுவம் மட்டும் இப்படி மோசமாக நடந்துகொள்ள என்ன காரணம்? இலங்கையின் சமூக உளவியலை வரலாற்றுபூர்வமாக விளக்கினார்கள் கடல் வணிகத்தில் இருக்கும் நம்மவர்கள். இவர்கள் பல தலைமுறைகளாக வாணிபத்துக்காக இலங்கை சென்று வருபவர்கள்.

ஆதிக் கதை

“ஆதி காலத்துல நாமெல்லாம் ஒண்ணா இருந்திருக் கோம்கிற உணர்வு நமக்கு எப்படி உண்டோ, அதேபோல அவங்களுக்கும் உண்டு. அது கலாச்சாரரீதியா நம்மை இணைக்குது. ஒரு பிணைப்பை உண்டாக்குது. அதேபோல, வரலாற்றுக் காலந்தொட்டே நம்ம மேல அவங்களுக்கு ஒரு அச்சம் உண்டு. அதுக்குக் காரணம் உண்டு. புராண காலத்துல ராவணன், வரலாற்றுக் காலத்துல ராஜராஜன், ராஜேந்திரன், ரகுநாதநாயக்கன்னு, இந்தியா ஒரு அமைப்பா உருவெடுத்தப்போ அந்த அச்சம் அதிகமாச்சு. இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடைச்சப்போ அவங்க இன்னும் பதற்றமானாங்க. அதுல நியாயம் உண்டு. ஏன்னா, இந்தியாங்கிற அமைப்பே பல நாடுகளோட தொகுப்பு. இலங்கை, தமிழ்நாட்டுப் பரப்பளவுல பாதியை மட்டுமே கொண்ட நாடு. வெறும் ரெண்டு கோடி சொச்சம் மக்கள்தொகை. இப்பிடி ஒரு குட்டி நாட்டை இவ்ளோ பக்கத்துல உள்ள எந்தப் பெரிய நாடும் விட்டுவைக்காது. போதாக்குறைக்கு ரெண்டு நாட்டுக்கும் பிணைப்பு மாரி தமிழ் பேசுற மக்கள். இதுதாம் அடிப்படைல நம்ம மேல அவங்களுக்குள்ள இருக்குற அச்சத்துக்கான அடிவேரு.

சுதந்திரத்துக்கு அப்புறம் ரெண்டு விஷயத்துல அவங்க கவனமா இருந்தாங்க. மொத விஷயம், இலங்கையோட பூர்வகுடிகளான ஈழத் தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமா ஒடுக்குறது. ரெண்டாவது விஷயம், பிற்காலத்துல இங்கே தமிழ்நாட்டுலேர்ந்து போய் தோட்டத் தொழிலுக்காக அங்கே குடியேறின மலையகத் தமிழர்களைத் தொரத்திர்றது. நேரு காலத்துலயே அவங்களை இந்தியா ஏத்துக்கணும்னு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவரு ஒப்புக்கலை. இலங்கையோட வளர்ச்சியில அவங்களோட பங்கு இருக்கு, அவங்களா இந்தியா வர விரும்பாதபட்சத்துல இது சம்பந்தமா பேச முடியாதுன்னு சொல்லிட்டார். ஆனா, நேருவோட மரணத்துக்கு அப்புறம் சாஸ்திரி காலத்தை இவங்க நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. பாகிஸ்தான்லேர்ந்து வர்ற ஒரு கோடிப் பேரை ஏத்துக்கிறீங்க. அதுல பத்துல ஒரு பங்கு ஆளுங்ககூட இங்கெ இல்ல, இவங்களையும் ஏத்துக்குங்கன்னு சொல்லி நெருக்குதல் கொடுத்தாங்க. சீனப் போர் தோல்வி பாதிப்புல இந்தியா இருந்த சமயம் அது. அப்பிடி இப்பிடின்னு சாஸ்திரிகிட்ட பேசி, கடைசியில அஞ்சே கால் லட்சம் பேரை இந்தியாவை ஏத்துக்க வெச்சிட்டாங்க. அப்புறம் இந்திரா காந்தி காலத்துல ஒரு முக்கா லட்சம் பேரை இந்தியாவை ஏத்துக்க வெச்சாங்க. சிறீமாவோ பண்டார நாயக செஞ்ச வேலை இது. அடுத்து, ஈழத் தமிழர்களைக் குறிவெச்சு நகர்த்த ஆரம்பிச்சாங்கங்கிற கதை உலகத்துக்கே தெரியும்” என்கிறார் புகாரி.

கச்சத்தீவு பறிபோன கதை
“உலகத்துலயே ரொம்ப நெருக்கமான கடல் எல்லை நமக்கு இடையில இருக்குறது. அதனால, கடல்ல தன்னோட ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கிறதுலேயும் ஆரம்பத்துலேர்ந்து அவங்க குறியா இருந்தாங்க. 1956-57-ல இந்தியா தன்னோட கடல் எல்லையைப் புதுசா வரையறுத்துச்சு. அதாவது, கடற்கரையிலேந்து 6 கடல் மைல் வரைக்கும் இந்தியா வோட கடல் எல்லையின்னும், 100 கடல் மைல் பரப்பு வரைக்கும் தனக்கு உரிமை உண்டுன்னும் அறிவிச்சுச்சு. இது நடந்த கொஞ்ச காலத்துலயே இலங்கையும் தன்னோட கடற்கரையிலேந்து 6 கடல் மைல் வரைக்கும் இலங்கையோட கடல் எல்லையின்னும், 100 கடல் மைல் பரப்பு வரைக்கும் தனக்கு உரிமை உண்டுன்னும் அறிவிச்சுச்சு. அதே மாதிரி, 1967-ல எங்க கடல் எல்லை 12 கடல் மைல்னு இந்தியா அறிவிச்சதும், 1970-ல எங்க கடல் எல்லை 12 மைல்னு இலங்கையும் அறிவிச்சுச்சு. கடலை அவங்க எவ்வளவோ முக்கியமா பார்க்குறாங்கங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்தான்.

ராமநாதபுரம் மன்னரோட ஜமீன்ல உள்ளடக்கம் கச்சத்தீவு. கடல் வளம் அந்தப் பகுதில ஜாஸ்தி. காலா காலமா, மீன்பிடிக்கிறது மட்டும் இல்லாம, முத்துக்குளி, சங்குக்குளின்னு எல்லாம் நடந்துக்கிட்டிருந்த பகுதி. அப்படிப் போகும்போது, கலத்தைக் கரையில ஒதுக்கிட்டு, தீவுல வலையை உலர்த்திட்டு, இளைப்பாறிட்டு வருவாங்க. அங்க உள்ள அந்தோனியார் கோயில் நூறு வருஷத்துக்கு முன்னாடி நம்மாளுங்க கட்டினது. ஆரம்பத்துலேர்ந்தே இலங்கை கண்ண இது உறுத்திக்கிட்டுருந்துச்சு. அந்தத் தீவால ஒண்ணும் பெரிய பிரயோஜனம் கிடையாது. ஆனா, இந்தியாவோடதுன்னு ஒப்புக்கிட்டா, அதைக் கடந்தும் நமக்குக் கடல்ல உரிமை இருக்குன்னு ஆயிடுமே. அதனாலயே பிரச்சினை பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

நம்ம அரசாங்கம் நேரு காலத்திலேர்ந்தே கச்சத்தீவு விவகாரத்தை ஒரு பொருட்டா எடுத்துக்கலை. அப்புறம் பேசிக்கலாம், பேசிக்கலாம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே போச்சு. வங்கப் போருக்குப் பின்னாடி, அவங்க சமயம் பார்த்து அடிச்சிட்டாங்க. 1973-ல இந்திரா காந்தி கொழும்புக்கு வந்தாங்க. ராஜ வரவேற்பு. சிறீமாவோ பண்டார நாயக ரொம்ப நெருக்கமான உறவை இந்திராவோட உருவாக்கிக்கிட்டாங்க. 1974-ல சிறீமாவோ பண்டார நாயக டெல்லிக்குப் போனப்போ, கச்சத்தீவோட கதை முடிஞ்சுது. அது இலங்கையோடது ஆயிட்டு. தன்னோட அரசியல் நெருக்கடியைக் காரணமாச் சொல்லி, ஒரு அரசியல் உதவியாவே கேட்டு கச்சத்தீவை வாங்கிட்டாங்க. 1974 ஒப்பந்தத்துல, தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரியக் கடலோடிகளுக்கு ஒரு பாதுகாப்பு இருந்துச்சு. தீவு மேலான அவங்களோட பாரம்பரிய உரிமைக்கு ஒரு பாதுகாப்பு இருந்துச்சு. 1976-ல போட்ட ஒப்பந்தத்துல அதுவும் போச்சு” என்கிறார் தரண்.

அந்தக் கேள்விக்கு என்ன பதில்?

“இதையெல்லாம் தாண்டி, நம்ம ஆளுங்க பக்கமும் சில தப்புங்க இருக்கு” என்று ஆரம்பித்த ஆறுமுகத்திடம் நேரடியாக அந்தக் கேள்வியைக் கேட்டேன். நாகப்பட்டினத்தில் தொடங்கி ராமேசுவரம் வரைக்கும் நான் பார்த்தவர்களிடமெல்லாம் கேட்ட கேள்வி.

“நீங்க மத்த எல்லாத்தையும் பேசறதுக்கு முன்னாடி, ஒரு கேள்விக்குப் பதில் சொல்லணும். நம்ம ஆளுங்க, நம்ம எல்லைக்குள்ள மட்டும்தான் மீன் பிடிக்கிறாங்களா இல்ல, எல்லை தாண்டியும் போறாங்களா?”

நாகப்பட்டினம் தொடங்கி ராமேசுவரம் வரைக்கும் நான் பார்த்தவர்களெல்லாம் என்ன பதிலைச் சொன்னார்களோ, அதே பதிலை எந்தத் தயக்கமும் இல்லாமல் சொன்னார் ஆறுமுகம்.

“ஆமா, எல்லயத் தாண்டியும் போறாங்க. என் மவனே போயிருக்காம். தெரியாம இல்ல, தெரிஞ்சே தான் போனாம். அவம் மட்டும் இல்ல, எல்லயத் தாண்டுற பலரும் தெரிஞ்சேதான் போறாங்க.”

“இது தப்பில்லீங்களாய்யா? நம்முடைய எல்லைக் குள்ளதானே நாம தொழில் செய்யணும்?”

“தம்பி, நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். என் மவனும் அப்பிடித்தான். பொல்லாப்பு வேணாம், நமக்கு ஒட்டுறது போறும்னு நான் நெனைக்கிறேன். எல்லைக்குள்ளேயேதான் நம்ம தொழில். இது என்னோட மனோபாவம். இதுக்கு என் வயசும் ஒரு காரணம். என் மவன், பொல்லாப்பு வந்தாலும் பரவாயில்ல, இப்ப சம்பாரிச்சாதானே புள்ளகுட்டிங்களைத் தேத்திவுட முடியும்னு நெனைக்கிறான். இது அவனோட மனோபாவம். அதுக்கு அவனோட வயசும் ஒரு காரணம்.

இங்க நீங்க குறிச்சிக்கிட வேண்டியது என்னான்னா, அவன் எல்லயத் தாண்டிப் போறதும் நான் போவாததும் எங்களோட வயசு, உடம்பு நெலம, குடும்பச் சூழ்நில இதெல்லாம்தான் காரணமே தவிர, எல்லயத் தாண்டுறது சரியா, தப்பாங்கிறதுல்ல இல்ல. ஏன்னா, இந்த எல்லயெல்லாம் அரசியல்வாதிங்களும் அதிகாரிங்களும் தங்களோட வசதிக்கேத்த வாக்குல அறிவிக்கிறது. என் பாட்டன் பூட்டன் காலத்துலேந்து மீன் பிடிச்சுக்கிட்டிருந்த எடத்துல நான் மீன் புடிக்கப் போறேன். அது தப்புன்னா, எப்பிடி ஏத்துக்க முடியும்?

நீங்க எல்ல… எல்லன்னு எதச் சொல்லவர்றீங்க? கச்சத்தீவு வரைக்கும் போறதத்தானே? என் நாட்டோட சண்ட போட்டு, கச்சத்தீவப் புடிச்சுக்கிட்டு, ‘இது இனிமே என்னோடது; நீ வரக் கூடாது’ன்னு இலங்கைக்காரன் சொன்னா நான் கேட்டுக்குவேன். சத்தியமாக் கேட்டுக்குவேன். ரெண்டு நாட்டுத் தலைவருங்களும் பேசி, அவங்களோட நட்புக்காக இந்தத் தீவ வுட்டுக்கொடுத்துட்டு, நாளயிலேந்து நீ இங்க வரக் கூடாதுன்னு சொன்னா, அது எந்த ஊரு நியாயம்யா? ஒங்களுக்குத் தெரியுமா? 1974-ல கச்சத்தீவ இலங்கைக்குக் கொடுத்தப்ப, ‘தீவுதான் அவங்களுக்குச் சொந்தம்; நீங்க வழக்கம்போல அங்கெ போவலாம், மீன் பிடிக்கலாம், தீவுல போயி எளப்பாறலாம்’னெல்லாம் அரசாங்கம் சொன்னுச்சு. 1976-ல இன்னொரு ஒப்பந்தத்தப் போட்டுக்கிட்டு, அந்த உரிமயும் உங்களுக்குக் கெடயாதுன்னுட்டு. இன்னும் அம்பது வருசம் கழிச்சு, ‘மண்டபத்தோட நம்ம எல்ல முடிஞ்சிபோச்சு; ராமேசுவரத்தை இலங்கைக்குக் கொடுத்துட்டோம்; நீ எல்ல தாண்டக் கூடாது’ன்னு அரசாங்கம் சொன்னாலும் சொல்லும். அரசாங்கம் சொல்லுறதாலயே எல்லாம் நியாமாயிடுமா?”

ஆறுமுகம் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

சட்டங்கள் எல்லாமே நியாயமானவையா?
ஆறுமுகத்தின் வார்த்தைகள் ஒரு தனிப்பட்ட மனிதனின் வெளிப்பாடு அல்ல; தாங்கள் காலங்காலமாகப் புழங்கிய ஒரு இடம், தங்களிடமிருந்து பறிக்கப்படும்போது, அதைப் பாரம்பரிய பூர்வகுடிகளின் ஆன்மா எப்படிப் பார்க்கிறது என்பதன் வெளிப்பாடு. அரசாங்கத்தின் ஏடுகளில் ஏற்றினால், நமக்கு எல்லாம் சட்டபூர்வமாகிவிடுகிறது; சட்டபூர்வமானால், எல்லாமே சரியானதாகிவிடுகிறது. ஆனால், சட்டங்களுக்கும் நியாயங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை யார் நிரப்புவது? நாம் சட்டங்களை நம்புகிறோம், அதற்குக் கட்டுப்படுகிறோம். பூர்வகுடிகளோ நியாயங்களை மட்டுமே நம்புகிறார்கள், நியாயங்களுக்கு மட்டுமே கட்டுப்படுகிறார்கள்.

ஆறுமுகம் தொடர்ந்தார்.

“என்னாடா, இவம் இப்பிடிப் பேசுறானேன்னு பாக்காதீங்க. இலங்கைக்கு இந்தத் தீவு எதுக்காவ தேவப்படுது? அவங்களோட ராஜாங்கப் பெருமைக்கு, அதிகாரத்துக்கு. நாங்க எதுக்கு அங்கெ போறம்? பொழப்புக்கு, சோத்துக்கு. இங்கெ பொழப்பு இருந்தா ஏன் அங்கெ போறோம்? இங்கெ பொழப்பு போச்சு. சுத்தமாப் போச்சு.”

“இங்கெ கடல் வளம் அத்துப்போக யார் காரணம்? இங்கெ கடல் வளத்தை அழிச்ச அதே மீன்பிடி முறையோட அங்கெ போனா, அங்கேயும் கடல் வளம் அத்துப்போகாதா?”

“இப்போ சொல்லுறீங்களே, இத ஏத்துக்கிறேன். கடல இங்கெ அரிக்கிறது குத்தம், அங்கெ அரிக்கிறது நியாயம்னெல்லாம் இல்ல. கடல அரிக்கிறது பாவம், பெரிய பாவம். கடல அரிக்கிறவனுங்கள வுடக் கூடாது. புடி. அவம் என்ன புடிக்கிறது? நீயே புடி. நம்ம கடப்படைய வெச்சே புடி. அது மட்டு மில்ல. கடலுக்குள்ள கடத்தல் செய்யிறவம், கடல வெச்சுத் தப்புசெய்யிறவம் எல்லாத்தயும் புடி. அது நியாயம். ஆனாக்க, எல்லாம் தப்புசெய்யிறவம் இல்ல. எல்லைக்குள்ள புடிக்கிறவனெல்லாம் மேவாட்டுல புடிக்கிறவனும் இல்ல; எல்லய தாண்டிப் போறவனெல்லாம் அடிய அரிக்கிறவனும் இல்ல.

தம்பி, தமிழ்நாட்டுல மொத்தம் முப்பதாயிரத்திச் சொச்ச படகு இருக்கு. இதுல எத்தன படகு எல்லய தாண்டிப் போயி தொழில் செய்யுமின்னு நெனைக்

கிறீங்க. அதுல எத்தன படகு அடிமடிய அரிக்குமுன்னு நெனைக்கிறீங்க? நூத்துல ஒரு பங்குகூட இருக்காது. அதக்கூட நியாயமுன்னு நான் சொல்லல. ஆனா, விசயம் அது இல்லங்கிறதுக்குச் சொல்லுறன். இங்கெ நம்மாளு எப்பிடி எறாலைத் தேடிப் போறானோ, அதே மாரி அவிங்க ஆளு சூரை மீனத் தேடி நம்ம எல்லைக்குள்ள வருவான். ஆரம்ப காலத்துல இது பிரச்சினையா இல்ல. பின்னாடிதான் பிரச்சினையாச்சி.”

பின்னாளில், பிரச்சினையான கதையை ராமசாமி விவரித்தார்.

தம்பி சரக்கு
“இலங்கையில விடுதலப் புலிங்க தலையெடுக்க ஆரமிச்ச உடனேயே இங்கெ கடல்ல மீன்பிடிக்கப் போற ஒவ்வொருத்தனயும் புலின்னு நெனச்சிக் குறிவெக்க ஆரம்பிச்சுட்டான். அது அவம் மனசில அப்படியே வொறைஞ்சிக் கிடக்கு. எம்ஜிஆரு காலத்துல, விடுதலப் புலிங்களுக்குப் போவ வர்ற பாதையாவே கடல் பாதைதாம் இருந்திச்சுங்கிறது நெசம். எப்போம் ராஜீவ் காந்தியைக் கொன்னாங்களோ அப்பவே போக்குவரத்து கொறைஞ்சாச்சி. பெறகும் கொஞ்சம் பேரு டீசலு, மண்ணெண்ணெய்னு கெடச்சதைக் கடத்திக்கிட்டுதாம் இருந்தாம். கடக்கரயில ‘தம்பி சரக்கு’ன்னே ஒரு குறிச்சொல்லு உண்டு. ஆனா, இதயெல்லாம் செஞ்சவம் ரொம்பக் கொஞ்சம்.

இலங்கைக்காரன் புத்திசாலித்தனமா என்னாப் பண்ணான்னா, இங்கெருந்து கடல்ல மீன் புடிக்கப் போறவன் ஒவ்வொருத்தனும் படகுல தங்கமும் துப்பாக்கியும் பீரங்கியுமா கொண்டுபோயி விடுதலப் புலிங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கான்கிற கணக்கா கெளப்பிவுட்டான். அத நம்ம அரசாங்கத்தயே நம்பவெச்சான். அப்படியெல்லாம் கடத்தியிருந்தா ஏன், கடக்கரக் குப்பமெல்லாம் குடிசைக்குக் கூரை வேயக் காசில்லாமக் கெடக்கு? குண்டடி பட்டாலும் பரவாயில்லைன்னு நூறு எரநூறுக்காவ உசுர வுடத் துணியிறாம்? இத யோசிக்க நாதியில்ல.

ரொம்பப் பேருக்கு வெளிய தெரியாத ஒரு உண்மயச் சொல்லுறன், கேட்டுக்குங்க. புலிங்க கையில எப்போ முல்லத்தீவு போச்சோ, அப்பவே இந்தக் கடக்கர முழுக்க அவங்க கட்டுப்பாட்டுல வந்துடுச்சு. யாழ்ப்பாணத்துலேந்து திரிகோணமலை வரைக்கிம் அவங்க கையிலதாம் இருந்துச்சு. இங்கெருந்து மீன் பிடிக்கப் போன படகுங்களப் புலிங்க சுத்தி வளச்சிப் பிடிச்சிருக்காங்க. பல மொற. தண்டம் கட்டியெல்லாம் படிக மீட்டுக்கிட்டு வந்திருக்கோம். ஏன், கச்சத்தீவு நம்மளோடதுங்கிறதயே அவங்க ஏத்துக்கலயே? இதெல்லாம் இந்திய அரசாங்கத்துக்கும் தெரியிம், இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியிம். தெரிஞ்சேதாம் நம்மளக் கடத்தக்காரன்னு கத கட்டிவுட்டாம். சரி, போருக்குப் பின்னாடி விடுதலப் புலி இயக்கத்ததாம் அழிச்சிட்டியே... அப்புறமும் ஏன் எங்கள வெரட்டுற? ஏன் சுட்டுத்தள்ளுற?

தம்பி, கச்சத்தீவயும் நெடுந்தீவயும் சுத்தியுள்ள கடப் பகுதிலதாம் எறாலுங்க நெறையக் கெடைக்கும். நம்மாளுங்க அதைத் தேடித்தாம் அங்கெ போறது. ஆனா, இலங்கைக்காரனுக்கு இந்தப் பக்கம் தொழிலே கெடயாது. அங்கெ உள்ள தமிழ் ஆளுங்க கரக்கடல்ல தொழில் செஞ்சா அதிகம். பாதுகாப்பு, பந்தோபஸ்துன்னு சொல்லி அனுமதிக்க மாட்டாம். விசயம் என்னான்னா, அவம் கடக்கரயைச் சுத்திக் காசு வாங்கிக்கிட்டு சீனாக்காரனைக் கொண்டாந்து வுட்றான். இப்பம் இலங்கை தொறைமுகத்துல எங்கெ பாத்தாலும், சீனாக்காரன்தான். சீனாக்காரனைப் பூச்சாண்டி காட்டிதாம் காலாகாலமா நம்மாளுங்க தலையில அம்மி அரைக்கிறாம். இப்பவும் அதே கததான் ஓடுது.”

ராமசாமி சொன்னதில் நிறைய உண்மை இருந்தது. விசாரிக்க ஆரம்பித்தபோது, உண்மை அதைத் தாண்டியும் நீண்டது.

பெருவியாபாரப் பிசாசு நோக்கங்கள்

இங்கே கடலை சூறையாட எந்த ஏற்றுமதியும் வியாபார நோக்கங்களும் அடித்தளங்களோ, அதே ஏற்றுமதியும் வியாபார நோக்கங்களும் இலங்கை யையும் நகர்த்துகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன் இலங்கையின் கடல் உணவு உற்பத்தி 2.93 லட்சம் டன். கடந்த ஆண்டு இது 4.45 லட்சம் டன். இந்த ஆண்டின் இலக்காக இலங்கை அரசு நிர்ணயித் திருப்பது 6.25 லட்சம் டன். இலங்கையின் ஏற்றுமதி இலக்குகளும் இதேபோல நேர்க்குத்தில் நிற்கின்றன. கடலோடிகளைப் பெருவியாபாரப் பிசாசு நோக்கங்கள் தள்ளுகின்றன. அரசியல்வாதிகளுக்குக் கப்பம் தேவைப்படுகிறது. அரசாங்கங்களுக்கு அந்நியச் செலாவணி தேவைப்படுகிறது. எல்லோரும் பின்னிருந்து நடத்தும் இந்த மாய விளையாட்டில், ஏழ்மையும் வறுமையும் கூடவே பேராசையும் சேர்ந்து கடலோடிகளைப் பகடைகளாக உருட்டுகின்றன.

“ ஊர் பேர் பலகயப் பாத்திருப்பீங்க, நாடு பேர்ப் பலகயப் பாத்திருக்கீங்களா? இந்தப் பேர்ப் பலகயப் பாருங்க...”

குரல் வந்த திசையில் திரும்பினால், தெரிகிறது அந்தப் பெயர்ப் பலகை. ‘இந்தியா’எனும் பெயர்ப் பலகை. “எங்களுக்கு எல்ல தெரியலியாம். எங்களோட உரிமயெல்லாம் இதோட முடிஞ்சிருச்சாம். அரசாங்கம் எங்கள ஏமாத்தல; தன்னையே ஏமாத்திக்குது.”

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட 13 மணல் தீடைகளில் 5-வது மணல் தீடையில் இந்திய அரசு வைத்திருக்கும் அந்தப் பெயர்ப் பலகை நம்முடைய சகல வரலாற்றுத் தவறு களுக்கும் பலவீனங்களுக்கும் ஒரு மௌன சாட்சியாக நிற்கிறது, பரிதாபமாக!

ஆகஸ்ட், 2014, ‘தி இந்து’

1 கருத்து: