யார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்?



தமிழ்நாட்டில் சாதி அரசியல் சம்பந்தமாகப் பேசப்படும்போதெல்லாம், மன்னார்குடி ஞாபகம் வரும். எதையும் வாழ்வில் நேரடியாகப் பார்க்கும் களங்கள் மறக்க முடியாதவை அல்லவா! செய்தித்தாள்கள், புத்தகங்களில் நாம் படிக்கும் கதைகளும், களத்தில் யதார்த்தத்தில் நிலவும் சூழல்களும் எல்லா விஷயங்களிலும் அப்படியே பொருந்திப்போவது இல்லை. இந்தியாவில் சாதி அரசியலுக்கு இது நிறையவே பொருந்தும்.

மன்னார்குடியில் கு.பா. என்றொரு தலைவர் இருந்தார். கு.பாலகிருட்டிணன் என்பது முழுப் பெயர். திமுகக்காரர். மன்னை நாராயணசாமி காலத்துக்குப் பின், மன்னார்குடியில் கருணாநிதியின் முன்னுரிமைப் பட்டியலில் முதல் வரிசையில் இருந்தவர். கட்சியில் மூத்தவர், கடுமையாக உழைக்கக் கூடியவர், நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் இன்னல்களை எதிர்கொண்டவர் இப்படி ஏராளமான பின்னணிகள் அவருக்கு இருந்தன. முதல் நாள் பகலில் மன்னார்குடியில் கருணாநிதி கூட்டத்தில் அதிமுகவை ஆவேசமாகப் பேசும் பாலகிருட்டிணன், மறுநாள் இரவு சசிகலாவின் தம்பி திவாகரனுடன் உட்கார்ந்து உறவாடிப் பேசிக்கொண்டிருப்பார். அதிமுகவும் ஜெயலலிதாவும் அவருக்கு எதிரி. திவாகரன் அப்படி அல்ல; வேண்டப்பட்டவர்; சொந்தக்காரர்!

திமுகவின் ‘நீல நட்சத்திரப் பேச்சாளர்’களில் ஒருவரான வெற்றிகொண்டான் ஜெயலலிதா தொடர்பாகக் கடுமையாகவும் ஆபாசமாகவும் பேசிய எத்தனையோ மேடைகளில் சசிகலா தொடர்பாகப் பேச்சு வரும்போது, “பாவம், அது நம்ம வூட்டு புள்ள, ஒண்ணும் தெரியாத அப்பாவிப் புள்ளைய எல்லாத்துலேயும் சிக்கவெச்சிட்டாங்க” என்று வெளிப்படையாகச் சாதிரீதியிலான உறவில் கடப்பதை நான் நேரில் கேட்டிருக்கிறேன்.

மன்னார்குடியில் சிவா ராஜமாணிக்கம் அப்போது காங்கிரஸில் இருந்தார். தேர்தலில் அவரை எதிர்த்துத் தம் கட்சி வேட்பாளரோடு தெருத்தெருவாகப் பகலில் சுற்றும் அதிமுககாரர்கள் இரவில் தம் சாதிக்காரர்கள் வீட்டுக்கு மட்டும் போய், “ஆயிரம் இருந்தாலும் ராஜமாணிக்கம் நம்மாளு, கட்சி பார்த்து விட்டுர முடியாது” என்று மாற்றி ஓட்டு கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.
பொதுச் சமூகம் முக்குலத்தோர் என்று அகமுடையர், கள்ளர், மறவர் மூன்று சமூகங்களையும் ஒன்றாகக் குறித்தாலும், உள்ளுக்குள் அப்படி அல்ல. அகமுடையர், கள்ளர் சமூகங்கள் பெருமளவில் வசிக்கும் மன்னார்குடியில் அதிகாரப் போட்டி என்றைக்குமே இந்த இரு சமூகங்களிடையேதான் இருந்திருக்கிறது. பெரிய கோயில் திருவிழா அரசியல் முதல் திமுக, அதிமுக உள்கட்சி அரசியல், தேர்தல் அரசியல் வரை எதுவும் இதில் இன்றைக்கு வரை விதிவிலக்கு அல்ல.

ஒரு ஊர், இரு கட்சிகள் அல்லது இரு சமூகங்கள் சார்ந்த வரையறைகள் அல்ல இவை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்சியிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இப்படியான பல பல உள்கதைகளை, கிளைக் கதைகளைப் பார்க்க, கேட்க முடியும்.


இந்தியாவின் ஏனைய மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டு அரசியலும் சாதி ஆதிக்கம் கொண்டதா? இந்தக் கேள்விக்கு, ஆம் அல்லது இல்லை என்ற ஒரு வார்த்தைப் பதிலைச் சொல்லிவிட முடியாது. ஒருபுறம் சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலிருந்தே வெறும் சாதி அடிப்படையில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் இங்கே உட்கார்ந்திருந்தார் என்ற வரலாறு கிடையாது. அதிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இங்கே ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா மூவருமே சாதிய அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களால் நேசிக்கப்படுபவர்கள்; மிகச் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மறுபுறம், கீழே உள்ளூர் அரசியலில் நாளுக்கு நாள் சாதிய ஆதிக்கம் வலுவடைகிறது; பெரும்பான்மை இனங்களைச் சார்ந்தவர்களையன்றி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதாகிறது. தமிழ்நாட்டு அரசியல் இன்றைக்கு யார் கையில் இருக்கிறது என்று கேட்டால், கருணாநிதி, ஜெயலலிதா பெயர்களைச் சொல்வது சுலபமான பதில். அது உண்மையும்கூட. அதேசமயம், அது மட்டுமே உண்மை அல்ல. தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் சாதிப் பின்னணி இது தொடர்பான உண்மைகளை நாம் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 7. பொதுத் தொகுதிகள் 32. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 32 இடங்கள் அதிமுக வசம் இருக்கின்றன. பொதுத்தொகுதிகளில் அதன் பிரதிநிதிகளின் சமூகம்சார் பின்னணி இது: வன்னியர் 23.33%, கவுண்டர் 23.33%, முக்குலத்தோர் 20%, நாடார் 6.7%, நாயுடு 3.33%.

தமிழகத்தின் சட்டசபைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 46. பொதுத் தொகுதிகள் 188. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் தன் கட்சிக்காரர்களாகச் சேர்த்து நிறுத்தியிருக்கிறது அதிமுக. பொதுத் தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ள சமூகங்களின் வரிசை இது: முக்குலத்தோர் 22.3%, வன்னியர் 21.3%,  கவுண்டர் 14.9%, நாயுடு 4.8%, நாடார் 5.9%. திமுக 172 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக வேட்பாளர்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ள சமூகங்களின் வரிசை இது: வன்னியர் 18.7%, முக்குலத்தோர் 12.9%, கவுண்டர் 11.5%.  நாயுடு 8.6%, நாடார் 7.2%.

தமிழகத்தில் அதிமுக, திமுக இரு பெரிய கட்சிகளிலும் மாநிலத் தலைமை நிர்வாகிகளுக்கு அடுத்த நிலையிலுள்ள சக்தி வாய்ந்த பதவிகள் மாவட்டச் செயலர்கள். உண்மையில், இவர்களே நேரடியாகக் கட்சியை ஆள்பவர்கள்.

தமிழகத்தின் 32 மாவட்டங்களை அதிமுக 50 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கிறது. இந்த 50 மாவட்டச் செயலர்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் சமூகங்கள்: முக்குலத்தோர் 26%, வன்னியர் 18%, கவுண்டர் 14%, நாயுடு 8%. நாடார் 2%. தமிழகத்தின் 32 மாவட்டங்களை திமுக 65 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கிறது. இந்த 65 மாவட்டச் செயலர்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் சமூகங்கள்: முக்குலத்தோர் 23%, வன்னியர் 15.4%, கவுண்டர் 12.3%. நாயுடு 9.2%, நாடார் 3%.

அதிமுகவில் இஸ்லாமிய, கடலோடிச் சமூகங்களைச் சேர்ந்தவர் ஒருவர்கூட மாவட்டச் செயலர் பொறுப்பில் இல்லை. அதன் 50 மாவட்டச் செயலர்களில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரே பிரதிநிதி. திமுகவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியில் இருக்கிறார்கள். இதேபோல, இந்த வேட்பாளர் பட்டியலில் (கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து) இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேருக்கு மட்டுமே அதிமுக வாய்ப்பளித்திருக்கிறது; திமுக 14 பேருக்கு வாய்ப்பளித்திருக்கிறது. எனினும், இந்தப் பிரதிநிதித்துவம் நியாயமானது அல்ல.

அதிமுக, திமுகவில் மட்டும் அல்ல; பெரும்பாலான கட்சிகளில் மேலே குறிப்பிட்ட ஐந்து சமூகங்களும் கிட்டத்தட்ட ஐந்தில் மூன்று பங்கு வரையிலான அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கின்றன. அரசியல்வாதிகள் சொல்லும் ஓட்டுக்கணக்குபடி பார்த்தாலே, மக்கள்தொகை அடிப்படையில் ஐந்தில் மூன்று பங்கு இந்த ஐந்து சமூகங்களும் அல்லாதவர்கள் வசிக்கும் மாநிலம் இது.

ஏனைய சமூகங்களும் அவையவை பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் பிரதிநிதித்துவம் பெறுகின்றன என்றாலும், இந்தப் பிரதிநிதித்துவம் உள்ளபடி அந்தந்தச் சமூகங்களின் எண்ணிகையை ஒட்டியதாக இல்லை என்று ஒலிக்கும் குற்றச்சாட்டைப் புறக்கணிக்க முடியவில்லை. குறிப்பாக, விளிம்புநிலைச் சமூகங்கள் இதில் மோசமான புறக்கணிப்பை எதிர்கொள்கின்றன.

இடஒதுக்கீட்டுக்கு அப்பாற்பட்ட சமூகநீதி இங்கு சாத்தியம் என்று வாதிடுபவர்கள் நம்மிடையே உண்டு. தொகுதி ஒதுக்கீட்டில் தனித் தொகுதி இடஒதுக்கீடு இல்லாவிடில், ஒடுக்கப்பட்டோரின் நிலை இங்கு என்னவாக இருக்கும் என்பதற்கு, கட்சிப் பதவிகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஒரு சான்று. இஸ்லாமிய சமூகம் நாளுக்கு நாள் மைய நீரோட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து விலகுவதாகப் பேசுபவர்களும் இதற்கான நியாயத்தை நம்முடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தில் கண்டடைய முடியும். இப்படி பல சமூகங்களைக் குறிப்பிட முடியும்.

தமிழகத்தை இந்தத் தேர்தல் சமயத்தில் குறுக்கும் நெடுக்குமாக சமீபத்தில் சுற்றியதும் உள்ளூர் மக்களிடம் பேசியதும் பெரிய அனுபவம். பொதுச்சமூகமும் ஊடகங்களும் நம்புவதுபோல, சின்ன அளவில் அல்ல; பெரிய அளவில் இங்கே அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது சாதி. எனினும், தமிழ்நாட்டில் சாதியை நேரடியாக முன்னிறுத்தும் கட்சிகள் பெரிய அளவில் இதுவரை ஆதிக்கம் செலுத்தியது இல்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கான பதில் எளிமையானது. இங்கு மைய நீரோட்டக் கட்சிகளே உள்ளூர் அளவில் சாதியைப் பெரிய அளவில் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன.

சாதிசார் அரசியல் கட்சிகள் என்றால், உடனே பாமக, கொதேமக, அஇமூமுக என்று பட்டியலிடுவது நம்முடைய இயல்பு. பெரிய கட்சிகள் பல இடங்களில் இப்படியான கட்சிகளுக்கே சவால் விடுகின்றன. இதில் உச்சம் தொட்டு நிற்பது அதிமுக. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 பொதுத் தொகுதிகளிலும் அதிமுக நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் கவுண்டர்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 பொதுத் தொகுதிகளிலும் அதிமுக நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் வன்னியர்கள்.

பெரிய கட்சிகளே சாதியை இப்படிச் சுவீகரித்துக்கொள்ளும் நிலையில், சாதியை நேரடியாக முன்னிறுத்தும் கட்சிகள் பின்தள்ளப்படுகின்றன. எனினும், இப்போது காட்சிகள் மாறுகின்றன. பெரிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கீழ் நிலையில் மக்களிடம் தொடர்புகளைப் பராமரிப்பது குறைந்துவரும் சூழலில், சாதியை மட்டுமே பலமாகக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் புழங்குகிறார்கள். திருமணம், பிள்ளைகளுக்குக் காது குத்தும் வைபவம், புதுமனை புகுவிழா என்று வீட்டு விசேஷங்களும் கோயில் திருவிழாக்கள் போன்ற ஊர் விசேஷங்களும் இந்த அரசியல் ஒன்றுகூடலுக்கான தருணங்கள் ஆகின்றன. இவை நீங்கலாக உள்ளூர் சமூகங்களின் கலாச்சாரங்களையும் சாதி அரசியல் பயன்படுத்திக்கொள்கிறது. மொய் விருந்துகளுக்குப் பேர் போன அறந்தாங்கி தொகுதியில் ஒரு வேட்பாளர் பல நூறு பேர் பங்கேற்கும் கறி விருந்துகளை நடத்தி விருந்தின் முடிவில், தனக்கு வாக்களிக்கும்படி உறுதி கேட்பதாகச் சொன்னார் உள்ளூர் நண்பர்.

சாதி அடிப்படையிலான கட்சிப் பிரதிநிதிகள் இப்படி உள்ளூர் அளவில் ஆதிக்கம் பெறும்போது, போட்டி மேலும் அதிகரிக்கிறது; பெரிய கட்சிகள் மேலும் பெரும்பான்மைச் சாதிமயமாகின்றன.

தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளும் நேரடி சாதிப் பெரும்பான்மையின் கைகளில் இல்லாத நிலையில்,  வேரடி பெரும்பான்மைச் சாதியம் இன்னும் வெளிப்படையான தாக்கங்களை பொதுச்சமூகத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தவில்லை. நாளைக்குப் பிரதான கட்சிகளின் தலைமைப் பீடங்கள் மாறினால், கீழேயும் கடுமையான அதிர்வுகளை நாம் பார்க்க நேரிடலாம்.


சாதி தொடர்பாகப் பேசாமல், சாதியை ஒழிக்க முடியாது. பொதுவெளியில் சாதி ஆதிக்கத்தைப் பேசுவதைத் தவிர்ப்பதன் மூலமாக சாதி ஒழிப்பு அக்கறையை வெளிக்காட்டுவதாக பாவனைசெய்வது இந்தியப் பொதுச் சமூகத்தின் போலியான முகங்களில் ஒன்று. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அதன் வெளிப்படையான தரவுகளும் வெளியே வரும்போது, நம்முடைய அன்றாட அரசியலில் எவ்வளவு சாதிய ஆதிக்கம் ஊறியிருக்கிறது என்பது அம்பலத்துக்கு வரும். இந்திய அரசியலில் சாதி ஒழிப்புக்கான விவாதங்களை அங்கிருந்தே முழு வீச்சில் தொடங்க முடியும்!

ஏப்ரல், 2016, ‘தி இந்து’

13 கருத்துகள்:

  1. எனவே, அடிப்படை சாதி அரசியல் மட்டும்தான் வளர்கிறது என்கிறீர்கள். இது உங்கள் விருப்பமாக உள்ளது தெரிகிறது அதையே வழியாகவும் அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ளும் வகையில் ஊசி போடுவதாகவே இருக்கிறது உங்கள் கருத்து.

    பதிலளிநீக்கு
  2. எனவே, அடிப்படை சாதி அரசியல் மட்டும்தான் வளர்கிறது என்கிறீர்கள். இது உங்கள் விருப்பமாக உள்ளது தெரிகிறது அதையே வழியாகவும் அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ளும் வகையில் ஊசி போடுவதாகவே இருக்கிறது உங்கள் கருத்து.

    பதிலளிநீக்கு
  3. என்ன ஆய்வாக இருந்தாலும் மற்ற மாநிலங்களோடுமுந்தைய காலகட்டங்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.தலைமையை கூட சாதி பார்த்து உருவாக்கும் மாநிலங்குல்க்கு இடையே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.தமிழ்நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட சாதிகளில் 490 சாதிகள் குறைவான அதிகாரத்தை தான் பெற முடிந்திருக்கின்றன எனபது மக்கள் ஆட்சியின் இன்றைய தேர்தல் முறையின் குறைபாடு.ஆனால் தலைமை பொறுப்பு கர்நாடகம் போலவோ ஏன் கேரளம் போலவோ குறிப்பிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கை தரும் மிருக பலம் காரணமாக ஆட்டம் போடும் சாதிகளின்
    கையில் இல்லாததே ஒரு மிக பெரிய பாஸிடிவ தான்.

    சாதிகளின் சதவீதத்தை கூறிய நீங்கள் சாதிகளின் மக்கள் தொகை சதவீதத்தையும் கூறி இருந்தால் புரிந்து கொள்ள வசதி.தமிழ்நாட்டில் இருக்கும் நீதிபதிகளில்,மருத்துவர்களில் ,அரசு பணியாளர்களில்.ஊடகங்களில் பணி புரிபவர்களில் தங்கள் மக்கள் தொகை சதவீதத்தை விட அதிக இடத்தை அடைந்தவர்கள் யார் என்பதை மக்கள் தொகை சதவீதத்தை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் தானே தெரிந்து கொள்ள முடியும்.

    பதிலளிநீக்கு
  4. http://www.badriseshadri.in/2013/04/blog-post_26.html

    தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகம் பேர் எம் எல் ஏ ஆகிறார்கள் என்பதை குற்றமாக எண்ணினால் தவறு யார் பக்கம் உள்ளது.ஒரு தொகுதியில் மிக அதிக சதவீதத்தில் ஒரே ஒரு சாதி இருந்தால் எல்லா கட்சியிலும் பொறுப்புகள் அந்த சாதியை சேர்ந்தவரிடம் இருக்க வாய்ப்பு அதிகம்.அப்படிப்பட்ட சூழல் தான் அனைத்து ஊர்களிலும்.அப்படி இங்கு இல்லை எனபது தான் சாதி கட்சிகளின் குற்றசாட்டே .சாதி சங்கங்களின் பத்திரிக்கைகளை பார்த்தால் புள்ளி விவரத்தோடு எப்படி அவர்களின் சாதி அதிகம் இருக்கும் தொகுதிகளில் சிறுபான்மை சாதியை சார்ந்தவர்கள் திராவிடம் என்ற பெயரில் வெற்றி பெறுகிறார்கள் என்ற பொருமல் இருக்கும்.ஒரே சாதியை சார்ந்தவர் மட்டும் ஜெயத்த தொகுதிகளை தமிழகத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளில் குறிப்பிட்ட சாதி,மதத்தை சார்ந்தவர்களை தவிர வேறு யாரும் ஜெயிக்காத தொகுதிகள் அதிகம்
    வோக்களிகர்களின் கோட்டையில் தேவ கௌடாவின் ஆட்களும்,அவர் சாதிகாரர்களும் தான் ஜெயிக்க முடியும் .லின்காயத்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் அவர்கள் சாதி ஆட்கள் தான்
    ரெட்டி மட்டும் ஜெயித்த தொகுதிகள் ஆந்திரத்தில் சில டாசன் இருக்கும்.கம்மா,ராசு,காப்பு அதிக சதவீதத்தில் இருக்கும் தொகுதிகளில் வெற்றி அவர்கள் சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான்

    பதிலளிநீக்கு
  5. கம்முநிஸ்ட் கட்சியோ ,விடுதலை சிறுத்தைகளோ, நாம் தமிழரோ அதிக ,காங்கிரெஸ் ,பா ஜ க கட்சிகளோ அதிக இடங்களை பிடிக்கிறார்கள் ,ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.அப்போது சாதிகளின் சதவீதம் எப்படி இருக்கும்.

    மற்ற மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளும்,சாதிகளின் காரணமாக ஒடுக்கப்படும் சாதிகளும் என்ன சதவீதம் ,அரசியலில்,கட்சிகளில் இருக்கும் பங்கு எவ்வளவு ,என்று பார்க்கலாமா

    மேற்கு வங்காளத்தில் பட்டியல் இனத்தவர் ,பழங்குடியினர் மட்டும் 30 சதவீதம்,இஸ்லாமியர் முப்பது சதவீதத்துக்கு சற்று குறைவு.பிற்படுத்தப்பட்ட வகுப்பும் அதே அளவு தான். ஆனால் ஆட்சியில் அவர்கள் பங்கு எவ்வளவு தெரியுமா .புத்ததேப் பட்டாசார்ஜி ஆட்சியில் பிராமண எம் எல் ஏக்கள் 294 இல் 64,கயச்தாக்கள் 58.கயஸ்தா ஜ்யோதி பாசு இருக்கும் போது அவர்கள் சற்று அதிகம்..அமைச்சரவையில் 33 இல் 16 பேர் பிராமணர்கள்.பட்டியல் இனத்தை சார்ந்த மற்றும் பழங்குடியினரில் இருந்து இரண்டு துணை மந்திரி பதவிகள்.ஒவ்வொரு மாநிலமாக பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  6. சாதி அடிப்படையில் மட்டும் கணக்கீடு செய்துள்ளீர்களே ,ஏன் வர்க்க அடிப்படையில்,அதாவது இவர்களின் பொருளாதார,பணபல பின்புலன்களை ஆய்வு செய்து வெளியிட்டால் என்னவாகும்? நீங்கள் வேண்டுமென்றே சாதியத்தை தூக்கிப்பிடித்து அதனை வளர்க்க விரும்புகிரீர்கள்.அதனை ஒழிக்க விரும்பினால் நீங்கள் முதலில் வெளியே வாருங்கள்.பொருளாதார வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்து காட்டுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. கள நிலைமையை தெளிவாக எடுத்துரைக்கும் விரிவான அலசல். பாராட்டுகள்!

    ‘தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளும் நேரடி சாதிப் பெரும்பான்மையின் கைகளில் இல்லாத நிலையில், வேரடி பெரும்பான்மைச் சாதியம் இன்னும் வெளிப்படையான தாக்கங்களை பொதுச்சமூகத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தவில்லை. நாளைக்குப் பிரதான கட்சிகளின் தலைமைப் பீடங்கள் மாறினால், கீழேயும் கடுமையான அதிர்வுகளை நாம் பார்க்க நேரிடலாம்.’ - எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

    ’சாதி தொடர்பாகப் பேசாமல், சாதியை ஒழிக்க முடியாது. பொதுவெளியில் சாதி ஆதிக்கத்தைப் பேசுவதைத் தவிர்ப்பதன் மூலமாக சாதி ஒழிப்பு அக்கறையை வெளிக்காட்டுவதாக பாவனைசெய்வது இந்தியப் பொதுச் சமூகத்தின் போலியான முகங்களில் ஒன்று. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அதன் வெளிப்படையான தரவுகளும் வெளியே வரும்போது, நம்முடைய அன்றாட அரசியலில் எவ்வளவு சாதிய ஆதிக்கம் ஊறியிருக்கிறது என்பது அம்பலத்துக்கு வரும். இந்திய அரசியலில் சாதி ஒழிப்புக்கான விவாதங்களை அங்கிருந்தே முழு வீச்சில் தொடங்க முடியும்!’ - அருமை!

    பதிலளிநீக்கு
  8. Govt has to declare the census which was taken based on community. Then only we should know the presentage of dalit community in the country and also vote % of the same community. Here government itself afraid to release the census.

    பதிலளிநீக்கு
  9. அ தி மு க, தி மு க வேட்பாளர்களின் சாதி பற்றிய ஓரளவிற்கு சரியான பட்டியல். இந்த பதிவில் தரப்பட்டுள்ள சாதிகளின் சதவீதம் பற்றிய உங்கள் கணக்கு மிகவும் தவறு என்பதை வருத்ததோடு பதிவிடுகிறேன்

    https://www.facebook.com/poovannan.ganapathy/posts/1180133968665061

    அ தி மு க வில் சாதி வாரி வேட்பாளர்களின் விவரம்.தலித் -45(ஒரு பொது தொகுதி உட்பட)வன்னியர்கள்-41,முக்குலத்தோர்-33,கொங்கு வெள்ளாளர்கள்-30,நாடார்-13,முத்தரையர்-11,முதலியார் -9,நாயுடு-8,மீனவர்-3,இஸ்லாமியர்-6,உடையார்-4,கோனார்-3,நாட்டு கோட்டை செட்டி-1,ரெட்டி-1,தெலுங்கு செட்டி-6,கௌடா-4,படுகர்-2,அய்யர்-2,பிள்ளை-5,ஆசாரி-2,சௌராஷ்டிரா-1
    தி மு க கூட்டணி வேட்பாளர் விவரம்-தலித்-45(ஒரு பொது தொகுதி உட்பட ),வன்னியர்கள்-தி மு க 30,காங்கிரெஸ்-3(33),முக்குலத்தோர்-தி மு க -22,காங்கிரெஸ்-9(31),கொங்கு வெள்ளாளர்-தி மு க-16,காங்கிரெஸ்-7,நாடார்-தி மு க-10,காங்கிரெஸ்-6(16),முதலியார்- தி மு க-11,காங்கிரெஸ்-3,இஸ்லாமியர்- தி மு க கூட்டணி-15,நாயுடு-தி மு க -16,காங்கிரெஸ்-1(17)ரெட்டி-தி மு க 5,முத்தரையர்-தி மு க-4,காங்கிரெஸ்-1(5)பிள்ளை-தி மு க -4,காங்கிரெஸ்-1(5),உடையார்-தி மு க-6,சௌராஷ்டிரா-1,ஆசாரி-1,படுகர்-1,மீனவர்-2,இசை வெள்ளாளர்-2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சாதிகளின் சதவீதங்களை பின்வருமாறு கூறலாம்: வன்னியர் - 16% , பறையர் - 14% , முக்குலத்தோர் (மூன்று சாதிகளும் சேர்ந்து) - 8% , கொங்கு வேளாளர் - 6% , நாடார் - 6%, பள்ளர் - 5%, கோனார் - 5%, அனைத்து முதலியார்கள், வேளாளர்கள், சைவப் பிள்ளை உள்ளிட்ட பிள்ளை சாதிகள் சேர்த்து - 9% அருந்ததியர் - 3%, முத்தரையர் - 3%, நாயுடு - 3%, பரதவர் - 2% , ரெட்டியார் - 2%. ........ இந்த சதவீதங்கள் ஆங்கிலேயர் காலத்தில் 1891 ஆம் ஆண்டு கடைசியாக எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் புள்ளி விவரத்திலிருந்து தொகுக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் 15% இதைக் கொண்டு இன்றைய அரசியல் அரங்கில் எந்தெந்த சாதிகள் அதிக லாபம் பெற்றுவருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

      நீக்கு
  10. இந்த கட்டுரையில் எனக்கு தெரிந்து சில விடுபட்டிருக்கிறது. அதிமுகவில் மாவட்டசெயலாளர் யாரக இருந்தாலும் துணை மாவட்ட செயலாளர் தலித்தாக இருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது

    பதிலளிநீக்கு