அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?


ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது இந்தியா. இந்தப் புதிய யுகத்தின் பெரும்பான்மை தேசிய அரசியல் அலையை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றின் எதிர்கால உத்தியிலும் மாற்றம் தேவைப்படுகிறது. குறிப்பாக, சமூகங்களை ஒருங்கிணைப்பதில்.

தமிழகத்தில் திராவிட இயக்கம், குறிப்பாக இரு திராவிடக் கட்சிகளும் தொடர்ந்து செல்வாக்கோடு நிற்க அவை இதுநாள் வரை மேற்கொண்டுவந்திருக்கும் மாற்றங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. கடவுள் மறுப்பை முன்வைத்து வளர்ந்த மரபில் வந்த அண்ணா ‘‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்றதும் ‘‘நாங்கள் மதச்சார்பற்றவர்கள்; அதேசமயம் மதத்துக்கு எதிரிகள் அல்ல’’ என்றதும் அதன் போக்கில் நடந்த பெரும் மாற்றம். அங்கு தொடங்கி உலகமயமாக்கலை எல்லோருக்கும் முந்தி வரித்துக்கொண்டது வரை எவ்வளவோ மாற்றங்களைத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து சுவீகரித்துவந்திருக்கின்றன.

திராவிட இயக்கம் நூற்றாண்டைக் கடந்து, திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் அரை நூற்றாண்டைக் கடந்திருக்கும் நிலையில், அடுத்த நூற்றாண்டுக்கேற்ப அவை எப்படித் தம்மைத் தகவமைத்துக்கொள்வது? சமூகங்களை அணுகுவதில் மூன்று முக்கியமான மாற்றங்களுக்கு அவை முகம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது!


திராவிடத்துக்குப் பதில் தமிழ்!
ஆரியர் - திராவிடர் கருத்தாக்கத்தைத் தாண்டி, சமகால இந்திய அரசியலில் ‘திராவிட’ எனும் சொல்லுக்கான பொருத்தப்பாடு என்ன? ஒருகாலத்தில், தோராயமாக தென்னிந்தியாவைக் குறிப்பிட்ட சொல் அது. இந்த பிராந்தியத்தைத் தனி நாடாக அங்கீகரித்து, ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு அர்த்தம் இருந்தது. இன்றைக்கு?

இந்தி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாம், திராவிட அரசியல் கருத்தாக்கம் என்பது மறைமுகமாகத் தமிழ் மேலாதிக்கத்தை முன்வைக்கும் அரசியல் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்? நம்முடைய அண்டை மாநிலங்களில் திராவிட அரசியல் முழக்கம் இன்று வரை சிறு சலனத்தைக்கூட உருவாக்காததற்கு இந்தச் சிக்கலே அடிப்படைக் காரணம். எண்ணிக்கை அளவில் தெலுங்கர்கள் நம்மைக் காட்டிலும் பெரும்பான்மையினர். மலையாளிகளுக்கோ நாம் ‘பாண்டி’.  கன்னடர்கள் ஏற்கெனவே மராத்தியர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒரு தாயிடமிருந்து கிளைத்த மொழியினர் என்றாலும், தென்னிந்தியாவில் இன்று தமிழர்கள் தலைமைக்கு யார் காத்திருக்கிறார்கள்? நமக்குமே யாரையும் மேலாதிக்கம் செய்யும் நோக்கம் இல்லாதபோது, ஏன் திராவிடத்தைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும்? ஆரிய ஜனதா கட்சி அல்லது ஹிந்து ஜனதா கட்சி என்றல்ல; பாரதிய ஜனதா கட்சி என்றே தன் அரசியல் முகத்துக்குப் பெயரிட்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்.

இந்திய அரசியல் அரங்கில் இன்று திராவிடக் கட்சிகளுக்கான தேவை எங்கே இருக்கிறது என்றால், சமூகநீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான முன்னுதாரண மாநிலமாகத் தமிழகத்தை நீடிக்கச் செய்வதிலும், மாநில சுயாட்சிக்கான தேசியக் குரலின் வலுவான மையமாகத் தமிழகத்தை வளர்த்தெடுப்பதிலுமே இருக்கிறது. அதற்கு, தென்னிந்தியாவில் தொடங்கி காஷ்மீர் வரை மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் புள்ளியாக அவை மாற வேண்டும் என்றால், வெளித் தோற்றத்தில் இனப் பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பெயர் சுமையிலிருந்து அவை விடுபட வேண்டும்.

பிராமணர்களை உள்ளிழுத்தல்!
பிராமணர் அல்லாதோரை அதிகாரப்படுத்தியதில் கடந்த நூறாண்டுகளில் மகத்தான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது திராவிட இயக்கம். மதராஸ் மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த சமயத்தில், வருவாய்த் துறையின் நெல்லூர் வட்டத்தில் மட்டும், தெலுங்கு நியோகி பிராமணர் ஒருவரின் சொந்தக்காரர்கள் 49 பேர் பணியாற்றிக்கொண்டிருந்தனராம். அதிகாரத்தில் எங்கும் அவர்கள் வியாபித்திருந்த அநீதியான இந்தச் சூழலை மிகப் பெரிய அளவில் புரட்டிப்போட்டிருக்கிறது திராவிட இயக்க அரசியல். அதேசமயம், நூறாண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட பிராமணச் சமூகத்தைத் தமிழ் அரசியல் களத்தை விட்டே அது வெளித்தள்ளியிருக்கிறது. தமிழகத்தின் நடப்பு சட்டசபையில் ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே பிராமணர். இதுவும் அநீதியானதே.

ஒருகாலத்தில், இங்கு முழு அரசியலையும் பிராமணர்கள் கையில் வைத்திருந்தபோது, அவர்களுடைய பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வரலாற்று நியாயம் இருந்தது. ஆனால், மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலச் சூழலில் இந்தப் பார்வையில் மாற்றம் தேவை. இது ஒன்றும் புதிதல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் 100% இடஒதுக்கீடு கோரிய பெரியாரே, ‘’அந்தந்தச் சமூகங்களின் மக்கள்தொகைக்கேற்ப ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அந்த வகையில் பிராமணர்களுக்கும் 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த அண்ணா, ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரைத் தவிர்த்து, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தன் இயக்கத்துக்குப் பெயரிட்டபோதே, பிராமணியம் பிறப்பின் பாற்பட்டது என்ற பார்வை மாறத் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக வந்தபோது, திராவிட இயக்கங்களின் பிராமணர் ஒறுத்தல் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டது. திராவிட இயக்கத்தின் இரு கட்சிகளில் ஒன்றின் தலைமைப் பொறுப்பே ஒரு பிராமணரிடம் 28 ஆண்டுகள் இருந்திருக்கிறது; 15 ஆண்டுகள் அவர் முதல்வராக இருந்திருக்கிறார். இரு கட்சிகளுக்குமே ஆட்சியில் முடிவெடுக்கும் நிலையில் பிராமணர்களை அதிகாரிகளாக வைத்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இருந்திருக்கவில்லை. வெளியில் வெறுமனே பிராமண எதிர்ப்பு வெற்றுச் சவடால் அடித்து, ஏனைய மாநிலத்தவர் மத்தியில் இன துவேஷியாகப் பார்க்கப்படுவதால் யாருக்கு என்ன லாபம்?

தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் கூடியது பிராமணச் சமூகம். இன்றைக்கெல்லாம் 2.5%-க்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள அவர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை அளித்து, அரசியல்ரீதியாக அவர்களை உள்ளிழுப்பது நல்லெண்ணங்களை விதைப்பதாக மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான அரசியல் பிரதிநிதிகளாகவும் திராவிடக் கட்சிகளைப் பகிரங்கப்படுத்தும் செயல்பாடாகவும் அமையும்.

தலித்துகள், முஸ்லிம்கள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை!
இன்றும் திராவிடக் கட்சிகள் சமூகநீதியில் முழு அக்கறை கொண்டுள்ளனவா? உளப்பூர்வமாக இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளிக்க வேண்டுமானால், வரவிருக்கும் நூற்றாண்டுக்கான இலக்காக தலித்துகள், முஸ்லிம்கள் மேம்பாட்டை அவை அறிவிக்க வேண்டும். வெறும் அடையாள நிமித்த அறிவிப்பு அல்ல. கடந்த நூற்றாண்டில் பிராமணர் அல்லாதோரை அதிகாரப்படுத்தியதை எப்படி முழு மூச்சில் செய்தனவோ அப்படி ஆத்ம சுத்தியோடு இக்காரியத்தில் இரு கட்சிகளும் இயங்க வேண்டும்.

பிராமணியம் எனும் சொல், பிராமணர்களோடு மட்டுமே தொடர்புடைய சொல் அல்ல. ஒவ்வொரு சமூகத்திடமும் நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கும் சாதிய மேலாதிக்க மனநிலையை உடைத்துப் பேச வேண்டும் என்றால், தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், வன்னியரியம், நாடாரியம் என்று பல முகங்களில் இன்று நிற்கிறது பிராமணியம். பெருமளவில் இடைநிலைச் சாதிகளிடமிருந்தே தலித்துகள் இன்று நேரடி வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றால், தலித்துகளை அதிகாரப்படுத்துவதைத் தார்மிகக் கடமையாக ஏற்க வேண்டும்.

சமூக, பொருளாதார வளர்ச்சியில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நினைக்கிறார்கள் முஸ்லிம்கள். தமிழகத்தில் இத்தனை முஸ்லிம் கட்சிகள் இன்று உருவாகியிருக்கின்றன என்றால், திராவிடக் கட்சிகளிடம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்திக்கும் ஏமாற்றத்துக்கும் இதில் முக்கியமான பங்குண்டு. தனிமையை உணரும் இளைய தலைமுறை முஸ்லிம்களில் கணிசமானோரை வஹாபியம் ஏந்துகிறது. இந்துத்துவம் வளருவதற்கான சூழலை உருவாக்குவதில் சங்கப் பரிவாரங்களைக் காட்டிலும் முனைப்போடு எதிர்த்தளத்திலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் வஹாபியர்கள். முஸ்லிம்களை மைய நீரோட்டத்தை நோக்கி இழுக்க வேண்டும்.

தலித்துகள், முஸ்லிம்கள் இரு தரப்பினரையும் அதிகாரப்படுத்தும் நடவடிக்கையைக் கட்சியிலும் ஆட்சியிலும் முடிவெடுக்கும் இடங்களில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதிலிருந்து திராவிடக் கட்சிகள் தொடங்க வேண்டும். சமூகங்களுக்கு இடையேயான பரஸ்பர நல்லுணர்வையும் ஒருங்கிணைப்பையும் வளர்த்தெடுப்பதற்கான ஆக்கபூர்வச் செயல்திட்டங்களைப் பெரியாரிய இயக்கங்கள் கண்டறிய வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கான அரசியல் இயக்கமாகவும் திராவிட இயக்கம் நீடிக்க தமிழகத்தில் எல்லோருக்குமான அரசியல் இயக்கமாக அது தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வது முக்கியம். இன்று இந்த மூன்று சமூகங்களிடமிருந்தும் அது உள் முரண்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதைக் கண்டும் காணாமல் செல்வது நல்லதல்ல. இவற்றையெல்லாம் சாதிக்க முடியுமா? சாதிக்க வேண்டும். தமிழ் எனும் சக்தி கொண்டு முடியும் என்றே தோன்றுகிறது!

ஏப்ரல், ‘தி இந்து’, 2017

17 கருத்துகள்:

  1. Sounds a great idea. Is the communities you mentioned are ready to accept this change and work towards the common goal ?

    பதிலளிநீக்கு
  2. மிக மிக மிக முதன்மையான கட்டுரை! தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் அத்தனை பேரின் பார்வைக்கும் கட்டாயம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய பதிவு! வருங்கால சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டியது இன்றியமையாதது!

    பதிலளிநீக்கு
  3. பிராமணியத்துக்கு எப்படியாவது ஓர் எதிர்கால அரசியலை தேடித் தர வாய்ப்பு கிடைக்காதா எனும் ஆசை உங்கள் எழுத்தில் பளிச்சிடுகிறது!

    ஜெயலலிதா பிராமணராக முதல்வராகும் முன்னர் பல வருடங்கள் திராவிட கொள்கைகளில் தன்னை முழுதாக கலந்து கொண்டவர்.

    அதனால் தான், MP யாக இருக்கும் போதே தமிழகத்திற்கான சமூக நீதியையும் உரிமையையும் பாராளுமன்றத்தில் தீர்க்கமாக எடுத்துரைக்கும் ஞானம் இருந்தது அவருக்கு!

    நீங்கள் சொல்லும் பிராமணர்களில் பத்து பேரை எங்களோடு தெருவில் வந்து போராட சொல்லுங்களேன் முதலில்…………,
    அப்பறம் பார்க்கலாம் அரசியலுக்கு அவர்கள் தகுதியா இல்லையா என்று???

    பதிலளிநீக்கு
  4. அருமையான கருத்தாக்கம். இதை பொதுவெளியில் ஒரு விவாதப் பொருளாகவும் வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அடுத்த நூற்றாண்டா இந்த நூற்றாண்டா?
    1961 இலேயே திராவிட அடையாளத்தை விட்டு விலகி "தமிழ் தேசியக் கட்சி' துவங்கிய ஈ வி கே சம்பத். பல ஆண்டுகள் கழிந்த பின்பும் 'திராவிட' த்தை விட்டொழிக்காத மதிமுக, தேதிமுக. 'தமிழர்' என்பது மொழி அடையாளமாக மாறி தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத அனைவரையும் வந்தேரிகளாக உருவகப்படுத்தும் போக்கையும் கவனிக்க வேண்டும். 'திராவிடர்' 'திராவிட' ஆனது போல 'திராவிட' என்பதற்கு சரியான மாற்றுச் சொல் 'தமிழ்' அல்ல 'தமிழக' என்பதே. மொழி, இன அடையாளம் அல்ல, நில அடையாளமாக.
    சென்ற தேர்தலின்போது ஸ்டாலின் அர்ச்சகர்களை சந்தித்தது ஒரு துவக்கம்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கருத்து சார், திராவிடம் சொல் இனி நமக்கு(தமிழகத்திற்கு) சுமைதான் இதை இன்றைய தமிழக அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் காலம் கேள்வி கேட்கும் முன் புரிந்துகொள்வார்களா?

    பதிலளிநீக்கு
  7. அபத்தத்தின் உச்சம் இந்த கட்டுரை என்றால் , அது மிகையாகாது .
    தமிழ் எனும் சக்தி எனச் சொல்வது , மணியரசனிசம் அல்லது சீமானி சம் அல்லது நவின பிராமணிசம் .
    எல்லோருக்குமான இயக்கமாக திராவிட இயக்கத்தை மாற்ற சொல்வது ,அப்பட்டமான பிழைப்புவாத ஓட்டு அரசியல் கருத்து .சமஸ் அவர்கள் அண்ணாவிடமிருந்து திராவிட இயக்க அரசியலை கற்றிருக்கிறார் போலும் , இனியேனும் , பெரியாரிடமிருந்து அழுத்தமான , பொருள் பொதிந்த , கருத்தாழமிக்க ,உயிர்த்துடிப்புள்ள திராவிட இயக்க சிந்தனைகளை கற்றிட முயல வேண்டும் .பார்ப்பனர்களுக்கு வருத்தப்படுவது நல்ல வேடிக்கை .மிக மிக சத்தற்ற ,சார மற்ற கட்டுரை . ஒரு மாபெரும் இயக்கத்துக்கு மேலோட்டமான ஆழமான புரிதல் இல்லாத ஒரு பாத்திரிக்கையாளர் ஆணையிடுவது போல , ஒரு நீதிபதியின் நீதிபோல , கருத்துரைப்பது தமிழ் சமூகத்துக்கு மிகப் பெரும் அவலம் .
    ஏ , திராவிட சமூகமே நீயாக மேலெழு .....
    எச்சரிக்கை ....
    பெரியார் சிந்தனையாளர்களே ஆர்ப்பரியுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியாரிஸ்ட்டுகள் எல்லாம் "மதசார்பற்ற' என்ற கொள்கைக்கு ஆதரவாக காட்சிகளை - மக்களை ஒருங்கிணைக்கிறார்கள்.....ஆனால் ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கும் நிலையை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்....திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் ஆயிரம் கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, ,கனிம வளத்துறை போன்ற துறைகளை பெரும்பான்மை சமூகத்துக்கு ஒதுக்கும் வர்ணாசிரமாக் கொள்கையை கடைபிடிக்கிறார்கள்....

      நீக்கு
  8. 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் எந்த சமூகங்கள் வ்வளர்ந்திருக்கிறன்றன? நல்ல கல்வி யாருக்கு கிடைத்துள்ளது??அரசு வேலைகளில் யாருக்கு அதிகாரம் உள்ள பதவிகள் கிடைத்தன??? மது விற்பனை மூலம்தான் அரசின் வருமானம் வரும் என்று முடிவுக்கு வந்தது திராவிட அரசுகளின் சாதனையா???? சாதி ஒழிப்பு மாநாடு நடத்தும் திராவிட கட்சி ஒரு தீர்மானத்தில்கூட சாதி ஒழிப்பையும் - சமூக கட்டுமானத்தில் அடியில் மிதிபடும் சமூகத்துக்கு விடுதலை பெறுவது பற்றியும் பேசாமாலேயே மாநாட்டை முடிக்கும் சூழ்ச்சிகளை யார் தடுப்பது????

    திராவிடக் கட்சிகளின் தேவை என்ன????மார்வாடிகளையும் மற்ற மாநிலத்தவரையும் இங்கே வளர்த்துவிடுவதா????

    பதிலளிநீக்கு
  9. பெரியாரிஸ்ட்டுகள் எல்லாம் "மதசார்பற்ற' என்ற கொள்கைக்கு ஆதரவாக காட்சிகளை - மக்களை ஒருங்கிணைக்கிறார்கள்.....ஆனால் ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கும் நிலையை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்....திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் ஆயிரம் கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, ,கனிம வளத்துறை போன்ற துறைகளை பெரும்பான்மை சமூகத்துக்கு ஒதுக்கும் வர்ணாசிரமாக் கொள்கையை கடைபிடிக்கிறார்கள்.... தண்ணீர் பிடிப்பதுகூட சாதி சண்டையாகும் வர்ணாசிரமக் கொள்கைகளை தூக்கிப் பிடித்த்ததுதான் திராவிடக் கட்சிகளின் தந்திரம்....வெள்ளத்தின்போது உணவை யார் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டார்கள்...ஆனால் குப்பைகளை, கழிவுகளை இன்னார்தான் வந்து அகற்றவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்....

    பதிலளிநீக்கு
  10. திராவிடக் கட்சிகளின் வேலை என்ன???அடுத்த தலைமுறைக்கு அடிமைகளை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதா????

    பதிலளிநீக்கு
  11. கீழ வெண்மணிக் கொடுமைகளை பற்றி பேசாமல் இந்தி எதிர்ப்பு பற்றி மட்டும் பேசுவதுதான் திராவிடமா??????ஆனவள் கொலைகளை மறந்துவிட்டு மதச்சார்பு பற்றி மட்டும் பேசுவதுதான் திராவிடமா????

    பதிலளிநீக்கு
  12. ஏழைக்கு ஒரு மருத்துவம் - ஒரு கல்வி (அரசுக்கல்வி - தமிழ்வழிக்க கல்வி ) - ஒரு வேலை ( தனியார் வேலை )-
    பணக்காரணனுக்கு ஒரு கல்வி (தனியார் கல்வி - ஆங்கிலக் கல்வி ) - மருத்துவம் - வேலை (அரசு வேலை)

    இதுதான் திராவிடமா????

    பதிலளிநீக்கு
  13. ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராடுவோம் - ஆனால் சாதி கட்டுகளுக்கு எதிராக போராட மாட்டோம்....ஆணவக் கொலைகளை கண்டுகொள்ள மாட்டோம்....இப்படி ஒரு மன நிலைதான் திராவிடமா????

    பதிலளிநீக்கு
  14. கண்டதேவி கோவில் நுழைவு பிரச்சினை - சேஷசமுத்திரம் இந்த பிரச்சினைகளில் பிராமணீயம் ஒன்றும் செய்யவில்லையே????

    பதிலளிநீக்கு
  15. http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32835-2017-04-10-05-00-57

    பதிலளிநீக்கு
  16. தமிழ் எனும் சக்தி கொண்டு முடியும் என்றே தோன்றுகிறது - ஆம். நாம் தமிழர் கட்சி இதைத் செய்ய முயற்சிக்கிறது. வாழ்த்தி ஆதரிப்பது நமது கடமை.நன்றி.

    பதிலளிநீக்கு