பஞ்சக் கால நினைவுகள்

                                           
                                      ருவ மழை பொய்ப்பதும் காலம் தாண்டிக் கொட்டித் தீர்ப்பதும் பருவநிலை மாற்றங்களில் சகஜம்தான். அமெரிக்காவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. சீனாவிலோ, பெய்ஜிங்கில் அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 33 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பத்தை டெல்லி எதிர்கொண்டதையும், சரிபாதி இந்தியா தென்மேற்குப் பருவ மழை பற்றாக்குறையால் வறட்சியில் சிக்கி இருப்பதையும்கூட இப்படிச் சாதாரணமான ஒரு செய்தியாகக் கடந்துவிடலாம்... அது வேறு ஒரு நாடாக இருந்தால்!
         
                                    இந்தியா எதிர்கொண்ட முக்கியமான பஞ்சங்கள் வங்கத்துப் பஞ்சமும் (1770) சென்னை மாகாணப் பஞ்சமும் (1877). வங்கத்துப் பஞ்சத்தின்போது, கீழ் கங்கைச் சமவெளிப் பகுதியான இன்றைய வங்க தேசம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ ஒரு கோடிப் பேர் உயிரிழந்தனர். சென்னை மாகாணப் பஞ்சத்தின்போது, தக்காணப் பீடபூமிப் பகுதியான இன்றைய தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் தொடங்கி மகாராஷ்டிரம் வரை பாதிக்கப்பட்டன. இதிலும் ஒரு கோடிப் பேர் மாண்டனர். பருவ மழை தவறி வறட்சிச் சூழல் ஏற்படும்போது எல்லாம் இந்தியா பதற்றத்துக்கு உள்ளாக, இந்த இரு பஞ்சங்களும் முக்கியமான காரணம். ஆனால், எப்போதுமே பஞ்சம் ஏற்பட வறட்சி ஓர் எரிசக்திதான்; மூல காரணம் அது அல்ல என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி.
        
                                     வங்கத்துப் பஞ்சம் ஏற்படுவதற்கான மூல காரணம், பிளாசி மற்றும் பக்சார் போர்களின் விளைவாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குக் கீழ் வங்கம் வந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்ள நில வரியைக் கூட்டினார்கள். உணவுப் பயிர்களுக்குப் பதில் பணப் பயிர்களை ஊக்குவித்தார்கள். உணவு உற்பத்தி வீழ்ச்சி அடைய இது வழிவகுத்தது. உணவுப் பற்றாக்குறை நிலவிய சூழலில், 1770-ல் ஏற்பட்ட வறட்சி மக்களைப் பஞ்சத்தில் கொன்றழித்தது.

                                    சென்னை மாகாணப் பஞ்சம் ஏற்படுவதற்கான மூல காரணம், சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் சென்னை மாகாணம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. கடுமையான வரிவிதிப்பு, புதிய பணப் பயிர்கள் ஊக்குவிப்பு, ரயில்களின் துணையோடு முழு வீச்சில் ஏற்றுமதி என்று உணவு உற்பத்தியை நெருக்கடியில் தள்ளினார்கள் ஆங்கிலேயர்கள். வறட்சி ஏற்பட்டபோது மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிட்டபோதும்கூட, தானிய ஏற்றுமதியை ஆங்கிலேயர்கள் நிறுத்தவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துச் சாப்பிடும் நிலை ஏற்பட்டபோது, பஞ்சக் குழுவை அரசு அமைத்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றவர்களுக்கு அரை வயிறு உணவு அளிக்க நாள் முழுவதும் அவர்களை வேலையில் கசக்கிப் பிழியும் கூலித் திட்டத்தை அது அறிவித்தது. சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் கட்டப்பட்டது எல்லாம் அந்தக் காலகட்டத்தில்தான். ஒருபக்கம், பசியால் மக்கள் எலும்பும் தோலுமாகி கொத்துக் கொத்தாகச் செத்து விழ, இன்னொருபக்கம் இலங்கை, பிஜி, பர்மா என்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் கொத்தடிமை சேவகத்துக்குப் போனார்கள்.

                                    முந்தைய தலைமுறையினரிடம் தாது வருஷப் பஞ்சம் என்று கேட்டால், கதை கதையாகச் சொல்வார்கள். ராமநாதபுரம் பகுதி கிராமப்புறங்களில் அப்போது வைக்கப்பட்ட கஞ்சித் தொட்டிகளைச் சிதிலம் அடைந்த நிலையில் இன்றைக்கும் பார்க்கலாம்.
        
                                    நம் நாட்டின் மழைப் பொழிவில் 75 சதவிகிதத்தைத் தென்மேற்குப் பருவ மழைதான் தருகிறது. நாட்டின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்குப் பருவ மழையின் பங்கு முக்கியமானது. இந்த ஆண்டு தென்மேற்கு மழைப் பொழிவு வழக்கத்தைவிட 21 சதவிகிதம் குறைவு. இதன் விளைவை காரீஃப் பருவப் பயிர்களான அரிசி, எண்ணெய் வித்துகள் விளைச்சல் எதிர்கொள்ளும். 2011-12-ல் நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி 103 மில்லியன் டன். இந்த ஆண்டு நிச்சயம் இதில் 10 சதவிகிதம் குறையும்.  ‘‘பயப்படத் தேவை இல்லை. இன்னும் ஓர் ஆண்டுக்கான அரிசி சேமிப்பில் இருக்கிறது’’ என்கிறார் உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ். ஆனால், இவர்களை நம்ப முடியாது. கடந்த 2009-ல் நாட்டின் 177 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியபோது, ‘‘பயப்பட வேண்டாம். இன்னும் 30 மாதங்களுக்கான உணவு தானியங்கள் கைவசம் இருக்கின்றன’’ என்றார் அமைச்சர் சரத் பவார். வறட்சியின் தாக்கம் அதிகரித்ததும் அடுத்த சில வாரங்களிலேயே ‘‘இன்னும் 13 மாதங்களுக்கான உணவு தானியங்கள் கையிருப்பில் இருக்கின்றன. தேவைப்பட்டால், இறக்குமதி செய்துகொள்ளலாம்’’ என்றார். மூன்று வாரங்களுக்குள் எப்படி 17 மாத தானியங்கள் காலியாகின என்ற கேள்வி எழுந்தபோதுதான் அமைச்சர் வாயில் வந்ததைச் சொல்லிவிட்டுப்போனது தெரியவந்தது.

                                            இந்தியாவில் அரசின் தானியக் கையிருப்புக் கணக்கு என்பது எப்போதுமே ஏட்டில் உள்ள கணக்கு. திறந்தவெளியில் வெயிலிலும் மழையிலும் புழுத்து, எலிகள் புகுந்து நாசமாக்கியது போக பயன்படுத்தத் தக்க அளவில் இருக்கும் தானியங்கள் குறைவு. இப்போதைய சூழல் முன்பைவிட மோசமானது. நாட்டின் 350 மாவட்டங்கள் வறட்சி அபாயத்தில் சிக்கி இருக்கின்றன. நாட்டின் முக்கியமான நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வறண்டுகிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குப் போகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதி உணவு தானிய உற்பத்திக்கு இயற்கை பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே, நல்ல விளைச்சல் வந்த காலகட்டம் இது. அதுவும் கடந்த ஆண்டு இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச உணவு தானிய விளைச்சல் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலிலேயே, அரிசி விலை உயர்ந்துகொண்டே இருக்கும்போது, பற்றாக்குறை ஏற்பட்டால் என்னவாகும்?

                                           இந்தியாவில் கடந்த நூற்றாண்டுகளைப் போல வறட்சியால் பஞ்சம் ஏற்பட்டு கோடிக்கணக்கானோர் இறந்துபோகும் சூழல் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பட்டினிச் சாவுகள் இன்றைக்கும் நடக்கின்றன. ஒவ்வோர் வறட்சியும் எங்கோ ஆயிரம் குடும்பங்களை விவசாயத்தில் இருந்து வெளியேற்றுகிறது. எங்கோ ஆயிரம் குடும்பங்களைக் கடனாளிகள் ஆக்குகிறது. எங்கோ ஆயிரம் கறவை மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பிவைக்கிறது. எங்கோ ஆயிரம் பேரைத் தற்கொலை செய்துகொள்ள வைக்கிறது. எங்கோ ஆயிரம் குழந்தைகளை ஊட்டச்சத்துக் குறைவால் கொல்கிறது. இந்தியா போன்ற ஒரு விவசாய நாட்டில் பருவ மழை பொய்க்கும் என்று தெரிந்துவிட்டால், வயலுக்கு ஒரு குட்டை, மழைநீர் சேகரிப்பு, விவசாயக் கடன் ரத்து, மானிய விலையில் இடுபொருள்கள், உணவு தானியப் பாதுகாப்பு, பொது விநியோகச் சீரமைப்பு என்று அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். அனால், இந்திய அரசின் அலட்சியம், காலனி ஆதிக்கக் காலத்தை நினைவூட்டுகிறது!
ஆனந்த விகடன்  ஆகஸ்ட் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக