நடிகர்கள்தான் எங்களுக்குப் பணம் கொடுக்கணும்: ஜே.வி.ருக்மாங்கதன்

பிள்ளையார், பெருமாள், துர்கையில் தொடங்கி ஷீர்டி சாய் பாபா வரை எல்லாக் கடவுளர் படங்களும் அணிவகுத்து இருக்கின்றன ஜே.வி.ருக்மாங்கதனைச் சுற்றிலும். பக்திப் பழமாகக் காட்சி அளிக் கிறார். எதிரில் சுவரிலோ, படு ஆபாசமான அவருடைய பட ஸ்டில்கள். பலான பட இயக்குநர்களில் ஒருவரான ருக்மாங்கதனுக்குப் பல முகங்கள் உண்டு. விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர், 'ஃபிலிம் சேம்பர்’ முன்னாள் துணைத் தலைவர் என்பதை எல்லாம் தாண்டி, தணிக்கைக் குழு உறுப்பினர். திரை உலகின் கறுப்புப் பக்கங்களைப் பற்றிப் பேச சரியான ஆள்!
 ''எப்படி இந்தத் துறைக்கு வந்தீர்கள்?''
''விநியோகஸ்தனாகத்தான் வந் தேன். அப்புறம், சுந்தர்ராஜனோட 'ஒயிலாட்டம்’, மனோபாலாவோட 'செண்பகத் தோட்டம்’... இப்படிப் 10 படங்களைத் தயாரிச்சேன். அத்தனையும் அம்பேல். செக்ஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த காலகட்டம் அது. ஆர்.பி.சௌத்ரி 'ஆதாம் ஏவாள்’னு ஒரு படம் தயாரிச்சார். சரி, அதை வாங்குவோமேனு தமிழ்நாட்டு உரிமை கேட்டா, 10 லட்ச ரூபாய் கேட்டார். பேசாம நாமே ஒரு படம் எடுத்து டலாம்னு தோணுச்சு. அதே 10 லட்ச ரூபாய்க்குள் 'இளமைத் துடிப்புகள்’ படத்தை எடுத்தேன். அடுத்து 'அவள்’. பெரிய ஹிட். அப்புறம் இதுவே நமக்குத் தொழிலாயிடுச்சு.''
''இந்த மாதிரி பலான படங்களைத் தணிக்கைக் குழு எப்படி அனுமதிக்கிறது?''
''தணிக்கைக் குழுவோட பார்வைங்கிறது கிட்டத்தட்ட அது சார்புல படம் பார்க்கிற ஆளைப் பொறுத்த பார்வைதான். இங்கே சென்னையில் படம் பார்க்கிறவங்க, 'ஐயையோ... கலாசாரம் போச்சு’னு சொல்லி அனுமதி மறுக்கும் அதே படத்தை மும்பையில் பார்க்கி றவங்க சர்வ சாதாரணமா ஓ.கே. பண்ணுவாங்க. கிடைக்கிற இடத்துல அனுமதி வாங்கிக்க வேண்டியதுதான்!''
''இந்தப் படங்களில் நடிக்கும் நடிகைகளை எங்கு இருந்து பிடிப்பீர்கள்?''
''முன்னாடி மும்பை போவோம். இப்ப இங்கேயே நிறைய கிடைக்கிறாங்க. நம் கதைக்கு வேண்டிய ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கலாம்.''
''இந்த மாதிரி படங்களுக்குத்தான் தேர்தெடுக்கப்படுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா?''
''கண்டிப்பா. அதெல்லாம் விரும்பித்தான் வர்றாங்க.''
''ஒரு படத்துக்கு என்ன சம்பளம் கொடுப்பீர்கள்?''
''ஐம்பது ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரைக்கும் தருவோம்.''
''இந்தத் தொகைக்காகவா தங்கள் எதிர்காலத்தையே அழித்துக்கொண்டு வருகிறார்கள்?''
''சினிமா ஆசையால் வந்து, ஏராளமான ஆட்களால் ஏமாற்றப்பட்டவங்கதான் பெரும் பாலும் இந்தப் படங்களில் நடிக்க வருவாங்க. அதனால, எங்களால் யாரோட எதிர்காலமும் பாதிக்கப்படுறது இல்லை. தவிர, இப்படிப் படங்கள்ல நடிக்க வர்றதுக்குப் பின்னாடி வேற தொழில் நோக்கமும் உண்டு.''
''இப்படிப்பட்ட படங்களில் நடிக்கும் பெண்களின் வாழ்க்கை பின்னாளில் எப்படி இருக்கும்? உங்களுடைய பழைய படங்களில் நடித்த நடிகைகள் யாரையாவது இப்போது சந்தித்து இருக்கிறீர்களா?''
''இதெல்லாம் ரயில் சிநேகம் மாதிரி சார். ஒரு படத்தையே அதிகபட்சம் ஒரு மாசத்துக்குள் முடிச்சுடுவோம். அவ்வளவுதான் சகவாசம்.''
''சரி, நடிகர்களை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள். அவர்களுக்கு என்ன சம்பளம்?''
''என்னது... நடிகர்களுக்குச் சம்பளமா? (சிரிக்கிறார்...) அவங்கதான் எங்களுக்குப் பணம் கொடுத்து நடிக்கணும். ரியல் எஸ்டேட்காரங்க எல்லாம் இப்போ எதுக்குப் படம் எடுக்க வர்றாங்கனு நினைக்கிறீங்க?!''
''தனிப்பட்ட முறையில் இப்படிப்பட்ட படங்களை எடுப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?''
''இதுல வெட்கப்பட என்ன சார் இருக்கு; உலகமே இதுலதானே இயங்குது?''
''செக்ஸைப் பற்றிய தவறான அறிமுகத்துக்கு உங்களைப் போன்றவர்கள்தான் காரணம். ஒரு தணிக்கைக் குழு உறுப்பினர் என்ற பொறுப்பு உணர்வு உங்களிடம் இருக்கிறதா?''
''தணிக்கைக் குழு விதிகளுக்கு அப்பாற்பட்டு நான் எந்தத் தப்பும் பண்ணலை. 'டர்ட்டி பிக்சர்’ல நடிச்ச வித்யா பாலனுக்குத்தான் இந்த வருஷம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அரசாங்கம் கொடுத்து இருக்குங்கிறதை மறந்துடாதீங்க. சென்னையில் ஆண் பாலியல் தொழில் களேபரமா நடந்துட்டு இருக்குற காலம் இது. இன்டர்நெட்ல இல்லாததா எங்க படத்துல இருக்கு? ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக் குங்க. சினிமாங்கிறது உங்களுக்கு வேணும்னா கலையாத் தெரியலாம். இங்கே இருக்கிறவங் களுக்கு இது ஒரு தொழில். காசுக்காகப் படம் எடுக்குறோம்கிறது வேற. அதைத் தாண்டி இப்படியான படங்கள் ஒரு வகையில வடிகால் மாதிரி. செக்ஸ் எஜுகேஷன் உள்ள நாடுகள்ல இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. கலாசாரத்தைப் பத்தி அளவுக்கு அதிகமாப் பேசுற நம்ம நாட்டுலதான் செக்ஸ் குற்றங்கள் அதிகமா இருக்கு. நாங்க சரியா அறிமுகப்படுத்த லைன்னா, சரியா அறிமுகப்படுத்துற தளத்தை ஏற்படுத்தித் தாங்க. எப்படி யும் இந்த மாதிரி வடிகால்கள் ஒரு சமூகத்துக்கு அவசியம்!''
ஆனந்த விகடன் செப். 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக