நாடு ஏன் இருண்டுக் கிடக்கிறது?

  
                                  து 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால்.  தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு  யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது.  இப்படி எல்லாம் நடக்குமாஎன்றுதானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06-ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின்சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78.  ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங்களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன.

                                            மின்வெட்டு பிரச்னையைப் பற்றி எல்லோருமே பேசுகிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது வெறும் பற்றாக்குறை மட்டும் அல்ல; பல்லாயிரம் கோடிகள் புரளும் பன்னாட்டு அரசியல். நமக்கு மின்சாரம் என்பது வெறும் எரிபொருள். ஆட்சியாளர்களுக்கோ அள்ள அள்ள வரும் அரிய வளம். தாதுச் சுரங்கங்களை யும் அலைக்கற்றைகளையும் எப்படித் தனியாருக்கு விற்றுக் காசாக்கினார்களோ, அதேபோல, மின் வளத்தையும் விற்றுக் காசாக்குகிறார்கள். இதற்காகவே கொண்டுவரப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். நாம் 14 மணி நேர மின்வெட்டைப் பற்றிய கவலையில் இருக்கும் இந்த நேரத்தில்கூட, இன்னொரு மின் கட்டண உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாநில அரசுகள் விரும்பாவிட்டா லும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பப்படி கட்டண உயர்வு நடக்கும். 'மின்சாரச் சட்டம் 2003’ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவ்வளவு அதிகாரங்களை அளிக்கிறது.
      
                                    கடுமையான மின் பற்றாக்குறை நிலவிய மாதங்களில் ஒன்றாகக் கடந்த மாதத்தைக் குறிப்பிடுகிறது மத்திய மின் துறை. முரண்பாடாக, அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தையில், மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை ஏழு சதவிகிதம் வரை அதிகரித்தது. எப்படி? நாட்டின் மின் உற்பத்தித் திறனை 1,22,000 மெகா வாட் ஆக அதிகரிக்க மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தது. பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா’ அரசு நிர்ணயித்த இலக்கில் பாதி மின்சாரத்துக்கான நிலக்கரியை மட்டுமே தர வல்லது. இதையே சாக்காகவைத்து, கூடுதல் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலைக்கு ஏற்ப, மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயித்துக்கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சமீபத்தில் அனுமதி அளித்தது அரசு. இதன் தொடர்ச்சியே பங்குகள் விலை எழுச்சி.
      
                                    நாட்டின் மின் உற்பத்தியை நடப்பு ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 88,425 மெகா வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது; இதில் தனியார் பங்களிப்பு இலக்கு எவ்வளவு தெரியுமா? 52 சதவிகிதம்! முந்தைய ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் தனியார் பங்களிப்பு 19 சதவிகிதமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 52 சதவிகிதம். எனில், அடுத்த ஐந்து ஆண்டுத் திட்டத்தில்? புதிதாக மாநில அரசுகள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. மறுபுறம் ஏற்கெனவே தன்வசம் உள்ள பொதுத் துறை மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. சமீபத்திய உதாரணம், நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 8.33 கோடி பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரும் அரசின் திட்டம். இதன் மூலம் அரசிடம் உள்ள பங்குகள் 93.56 சதவிகிதத்தில் இருந்து 88.56 சதவிகிதமாகக் குறையும். தனியார் கை ஓங்கும்.
      
                                    ஒருபுறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகி வரும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது.உள்ளூர் தொழில் நிறுவனங்கள் 14 மணி நேர மின்வெட்டில் சிக்கிச் சின்னாபின்னமாக,     பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளை பரப்புகின்றன. நாடு ஏன் இருந்துக் கிடக்கிறது என்பது இப்போது புரியும் என்று நினைக்கிறேன்!
ஆனந்த விகடன் செப். 2012

1 கருத்து: