உருவாகிறார் இன்னொரு பிரதமர்!

ராபர்ட் வதேரா செம மச்சக்காரர் என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்வர்கள். ஆனாலும், சிறப்புப் பாதுகாப்புப் படை சூழ அவர் பவனி வருவது டெல்லியில் ரொம்பக் காலம் பலருடைய கண்களையும் உறுத்திக்கொண்டு இருந்தது. சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு என்பது வெறுமனே துப்பாக்கி வீரர்களின் பாதுகாப்பு மட்டும் இல்லை; இந்திய விமான நிலையங்களில் எந்தச் சோதனையும் இல்லாமல் புகுந்து வரும் விதிவிலக்கு உட்பட பல சலுகைகளையும் கொண்டது. மன்மோகன் சிங்குக்கோ, அப்துல் கலாமுக்கோ அந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றால், வெறுமனே அவர்கள் மன்மோகன் சிங், அப்துல் கலாம் என்பதால் இல்லை. பிரதமர், முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற தகுதிகள் அவர்களின் பாதுகாப்புக்கான தகுதிக் குறிப்புகளில் இடம்பெற்று இருக்கின்றன. வதேராவுக்கு? வதேரா என்பதே தகுதிக் குறிப்பு. ''ஒரு சிறப்பு நேர்வாக வதேராவுக்குச் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது'' என்று விளக்கம் சொன்னது மத்திய அரசு. காந்திக்கே கிடைக்காத வாய்ப்பு இது. ஆக, வதேராவுக்குச் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நியாயத்தை மக்கள் இப்படிப் புரிந்துகொண்டார் கள்: இந்தியாவில் வதேராவாக இருப்பதே சிறப்புதான்.
     அப்புறம் ஒருநாள் வதேரா உத்தரப்பிரதேசம் போனார். தன் மனைவியின் குடும்பத் தொகுதியான ரேபரேலியில் காங்கிரஸுக்கு ஆதரவாக மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். அப்போது பக்கத்தில் பிரியங்கா இல்லாத நிலையில், பாதுகாப்புப் படையினரும் கொஞ்சம் தள்ளி நின்ற சூழலில், வதேரா சொன்னார்: ''மக்கள் விரும்பி அழைக்கும்போது அரசியலுக்கு வருவேன்.'' காங்கிரஸ் அதிர்ந்தது. விஷயம் பிரியங்காவின் காதுக்குப் போனது. ''பரபரப்பான தொழிலதிபர் என் கணவர். அரசியலுக்கு எல்லாம் வர அவருக்கு நேரம் கிடையாது'' என்றார் அவசர அவசரமாக. வதேரா அசரவில்லை. ''மக்கள் வாழ்க்கை என்னால்தான் மாற வேண்டும் என்கிற அழைப்பு வந்தால், நான் அரசியலுக்கு வருவேன். ஒருநாள் அந்த அழைப்பு வரும் என்றுதான் நம்புகிறேன்'' என்றார் மீண்டும். மக்கள் இப்போது இன்னொரு நியாயத்தைக் கற்பித்துக்கொண்டார்கள்: ஓஹோ... இதற்காகத்தான் வதேராவைச் சுற்றி சிறப்புப் பாதுகாப்புப் படையினரை நிறுத்தி இருக்கிறார்களா?
    வதேரா, பிரியங்காவின் கணவரானதே இந்தியாவுக்கு அதிர்ச்சிதான். அவருடைய அரசியல் அபிலாஷை அடுத்த அதிர்ச்சி. டெல்லியின் இரவு விடுதிகளில் அவர் பங்கேற்கும் நள்ளிரவு விருந்துகள், டேவிட் ஹார்லி மோட்டார் சைக்கிள் மீதும் பி.எம்.டபிள்யூ., ரேஞ்ரோவர் கார்கள் மீதும் அவருக்கு இருக்கும் பித்து, சிக்ஸ் பேக் உடம்புடன் பத்திரிகைகளுக்கு அவர் கொடுக்கும் பிக் பாஸ் போஸ், சல்மான் கானுடன் தன்னை ஒப்பிட்டு அவர் கொடுக்கும் பேட்டிகள்... இவற்றை எல்லாம் பார்த்து வதேரா ஓர் ஆர்வக்கோளாறு என்றும் ஓட்டைவாயர் என்றும் நினைத்தவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களின் எண்ணங்களை எல்லாம் இப்போது அடித்து நொறுக்கி, தான் எவ்வளவு பெரிய காரியக்காரர் என்பதை நிரூபித்து இருக்கிறார் வதேரா.
அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் வதேரா? அந்தக் கதையை உங்களோடு பொருத்திச் சொன்னால்தான் சாதனையின் வீரியம் உங்களுக்குப் புரியும்.
நீங்கள் ஒரு சாதாரண மனிதர். எந்த அளவுக்குச் சாதாரண மனிதர் என்று கேட்டால், ஒரு முன்னாள் பிரதமரின் மகளையே திருமணம் செய்துகொண்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட, ''குடும்பத்துக்காகச் சம்பாதிப்பதுதான் என்னுடைய பெரிய சவால். நான் என்னுடைய கைவினைப் பொருட்களுக்கு ஆர்டர் தேடி உலகம் முழுக்கச் செல்கிறேன். வாங்குபவர்களைத் தேடி வீடுவீடாகச் செல்கிறேன். பல இடங்களில் என்னை வெளியே தள்ளி இருக்கிறார்கள். தளராமல் போராடுகிறேன்'' என்று சொல்லும் அளவுக்குச் சாதாரணமான ஆள்.
    இப்படிப்பட்ட சாதாரண ஆளான உங்களுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று ரூ.7.94 கோடியை ஓவர் டிராஃப்ட் மூலமாகக் கொடுக்கிறது (அது எப்படிக் கொடுக்கும், இதுவே பெரிய சாதனையாக இருக்கிறதே என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. சாதனையாளர்கள் வாழ்வில் இது எல்லாம் சாதாரணம்). நீங்கள் அதை முதல் தவணையாகக் கொடுத்து ரூ.15.38 கோடி மதிப்பு உள்ள 3.5 ஏக்கர் இடத்தைப் பேசி முடிக்கிறீர்கள். அந்த இடத்தை ஒரே வருடத்தில் ரூ.58 கோடிக்கு - அதாவது, வாங்கிய விலையைப் போல மூன்று மடங்கு விலைக்கு விற்கிறீர்கள். யாரிடம்? நாட்டின் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம். மனேசரில் இப்படி ஆரம்பிக்கும் உங்கள் வெற்றிக் கதை... ஹயாத்பூர், பிகானேர் என்று ஊர் ஊராகத் தொடர்கிறது மிக வேகமாக. எந்த அளவுக்கு வேகமாக என்றால், நீங்கள் இயக்குநராக இருக்கும் 12 நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் ஒரு வருடத்துக்குள் தொடங்கப்பட்டவை என்கிற அளவுக்கு. பல நூறு கோடிகளுக்கு அதிபர் ஆகிவிடுகிறீர்கள். ரஜினி படம் பார்ப்பதுபோல இருக்கிறது அல்லவா? ஆனால், இவை எல்லாம் சாதனை அல்ல. திடீரென்று ஒரு நாள் உங்கள் மீது ரூ. 300 கோடி குற்றச்சாட்டு வருகிறது. அதாவது, உங்களிடம் இருந்து இடங்களை வாங்கி, நீங்கள் குறுகிய காலத்தில் சம்பாதிக்க உதவியாக இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பல மாநிலங்களில் இடங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி இருக்கிறது; இதற்கு உங்களுக்கு நெருக்கமான ஆட்சியாளர்கள் உதவி இருக்கிறார்கள் என்றும் உங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் எல்லோரும் கொந்தளிக்கிறார்கள். ஆனால், நாட்டின் பிரதமரோ, இந்தச் சங்கதிகள் எல்லாம் வெளியே வரக் காரணமாக இருக்கும் தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காகப் பகிரங்கமாகப் புலம்புகிறார். ஒரு தேசியக் கட்சியும் அதன் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ''ஒரு நல்லவரைப் பார்த்து இப்படி எல்லாம் சொல்கிறார்களே... அடுக்குமா?'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள். இவை எல்லாமும்கூடச் சாதனை அல்ல. அரசு அப்படி ஒரு விசாரணையை நடத்தினாலும், சட்டரீதியாக உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற அளவுக்கு உங்களுடைய ஆவணங்கள் 'பலமாக’ இருப்பதாகச் சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
    நிற்க. இந்த நாட்டு மக்களால், எல்லாத் தகுதிகளும் உடையவராகக் கருதப்பட்டவர் உங்கள் மாமனார். ஒருகாலத்தில் அவர் ரூ.64 கோடி ஆயுதக் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். ஆட்சியையே பறிகொடுத்தார். இன்றைக்கு வரைக்கும் அந்தக் குற்றச்சாட்டில் இருந்து உங்கள் மாமனார் குடும்பம் வெளியே வர முடியவில்லை. நீங்கள் அதுபோல, ஐந்து மடங்கு மதிப்புள்ள முறைகேடு குற்றச்சாட்டில் சிக்குகிறீர்கள். ஆனால், உங்களைச் சட்டத்தால் ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். எனில், நீங்கள் சாதனையாளரா... இல்லையா? இந்தக் கதையில் நீங்கள் செய்த சாதனையைத்தான் வதேரா செய்து இருக்கிறார். எனில், அரசியலுக்கு வதேரா தகுதியானவரா... இல்லையா?
    ஆக, மங்குனிகளின் நாட்டை ஆளும் ராஜ குடும்பத்தில் இருந்து இன்னொரு ராஜா உருவா கிறார். ஒருவேளை, அந்த ராஜா வெத்துவேட்டு என்று நீங்கள் சொல்லக்கூடும் என்றால், இது வெத்துவேட்டுகளின் பொற்காலம் என்பதே அதற்கான பதில்! 
ஆனந்த விகடன் அக். 2012

2 கருத்துகள்: