மாற்று அரசியல் இடதுசாரிகளால்தான் சாத்தியம்: பிரகாஷ் காரத்


ந்திய இடதுசாரிகளின் குவிமையம் எப்போதுமே கேரளம்தான். இந்திய அரசியலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வலதுசாரிகள் சூறாவளி வேகத்தில் முன்னேறும் சூழலில், இடதுசாரிகளின் கப்பலை வழிநடத்துகிறார் கேரளத்திலிருந்து வந்த பிரகாஷ் காரத். நாட்டின் பிரதானக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இரண்டுக்குமே பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்ட நிலையில், காரத் இடதுசாரிகளின் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை நோக்கி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் . கட்சி தொடங்கிய காலம் முதல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எல்லா விமர்சனங்களுக்கும் இடம் தந்தார்; ஒரு கேள்வி நீங்கலாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரை நூற்றாண்டுக்கு முன் பிரிந்ததற்கான நியாயம் இன்னும் நீடிக்கிறதா? ஏன் இந்தியாவில் உள்ள எல்லா இடதுசாரி அமைப்புகளும் ஒன்றுசேரக் கூடாது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1964-ல் பிளவு ஏற்பட சித்தாந்த, அரசியல் காரணங்கள் அடிப்படையாக இருந்தன. அதற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இரு கட்சிகளாகச் செயல்படுகின்றன. இந்த இரு கட்சிகளிடையே ஒற்றுமையையும் வலிமையையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே இடதுசாரி இயக்கத்தின் இருப்பை வலுவாக வெளிப்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்.

உலகெங்கும் கம்யூனிஸ்ட்டுகள் அவரவர் நாட்டுக்கேற்ப கட்சியைக் கட்டியிருக்கிறார்கள். சீனா ஒரு துருவம் என்றால், க்யூபா ஒரு துருவம். இந்தியாவுக்கேற்ப கட்சியைக் கட்டமைக்க கம்யூனிஸ்ட்டுகள் தவறி விட்டீர்களா?

இந்தியச் சூழலுக்கு ஏற்ப மார்க்சிஸத்தைப் பயன்படுத்தத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. உலகின் பிற கம்யூனிஸ்ட் கட்சிகளைவிட நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் பணிபுரிவதில் எங்களுக்குத்தான் அனுபவம் அதிகம் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

சுதந்திரத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்தே வந்திருக்கிறது. ஆனால், ஒருகாலத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த இடதுசாரிகள் இதன் பலனை அறுவடை செய்து கொள்ளும் நிலை இல்லை. இதற்கான காரணம் என்ன?

இடதுசாரிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. உதாரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்கொண்டால், கட்சி 1964-ல் நிறுவப்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக 1967-லும் நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பிறகு 1977-லும் பெரிய அலை வீசியது. 1967-ல், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் காரணமாக நாங்கள் செல்வாக்கு பெற முடிந்தது. கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரிகளின் கூட்டணி அரசுகள் பதவிக்கு வந்தன. 1990-களில் முழுக்க நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. நாடாளுமன்றத்தின் 75 தொகுதிகள் முதல் 85 தொகுதிகள் வரையில்தான் நாங்கள் போட்டியிடுகிறோம் என்றாலும், 5% முதல் 6% வரையிலான வாக்குகளைப் பெற்றுவருகிறோம். இக்காலகட்டத்தில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆட்சியிலும் இருந்திருக்கிறோம்.

ஆனால், காங்கிரஸுக்கு அடுத்து பெரிய கட்சியாக அடிப்படைவாத பா.ஜ.க. எழுச்சி பெற இடதுசாரிகளின் பின்னடைவும் ஒரு காரணம்... ஒப்புக்கொள்கிறீர்களா?

இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக விளங்கும் பூர்ஷுவா கட்சி என்பதால்தான் காங்கிரஸ் வலுவிழக்கும்போது பா.ஜ.க. எழுச்சி பெறுகிறது. வர்க்கரீதியாகப் பார்த்தால் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் வித்தியாசமே கிடையாது. அதுதான் இதற்குக் காரணம்.

அப்படியென்றால், இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக வலதுசாரி நாடாக மாறுகிறதா?

கடந்த 20 ஆண்டுகளாக இது அப்பட்டமாகத் தெரிகிறது. புதிய பொருளாதாரக் கொள்கைகளை அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த தே.ஜ.கூ., ஐ.மு.கூ. அரசுகள் எப்படிச் செயல்படுத்தின என்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

மோடியின் ‘குஜராத் மாதிரி வளர்ச்சி’யை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மோடியின் குஜராத் மாதிரியையும் பா.ஜ.க-வின் வளர்ச்சிக் கோட்பாட்டையும் நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அது பெருநிறுவனங்களுக்குச் சாதகமானது, செல்வம் சிலரிடம் மட்டுமே குவியவும் மக்களிடையே ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகவும் மட்டுமே அது வழிவகுக்கும்.

சரி, நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் சரியில்லை. மோடி உச்சரிக்கும் வளர்ச்சியும் எல்லோருக்குமான உண்மையான வளர்ச்சியாகத் தெரியவில்லை. அப்படி யென்றால், உங்களைப் பொறுத்த அளவில் வளர்ச்சிக்கான வரையறைதான் என்ன? அதற்கான செயல்திட்டம் என்ன?

நாங்கள் வளர்ச்சிக்கு மாற்றுப் பாதையை வகுத்திருக்கிறோம். விவசாயத்தை நம்பியுள்ள நம்முடைய உற்பத்தி முறையை ஜனநாயக வழியில் மாற்றி அமைக்கும்போது, அதனால் ஏழைகளும் கிராமப்புற மக்களும் பலன் அடைவார்கள். பொது முதலீட்டை அதிகரிப்பது, உள்ளூரில் தேவைகளை ஏற்படுத்துவது, அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவது போன்றவை எல்லோருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்கும் எங்கள் மாற்றுப் பாதையின் முக்கிய அம்சங்கள்.

ஆனால், இந்தப் புதிய பொருளாதார யுகத்தில் எல்லோருக்குமான வளர்ச்சியை முன்னெடுப்பதில் கம்யூனிஸ்ட்டுகளுக்குக் குழப்பம் இருப்பதுபோலத் தோன்றுகிறதே... நந்திகிராமில் உண்மையில் நீங்கள் வலதுசாரிகளைப் போலவும் மம்தா பானர்ஜி இடதுசாரிகளைப் போலவும் செயல்பட்டபோது அப்படித் தெரிந்தது...

இந்தக் கேள்வியே அடிப்படையற்றது. அதனால் இதற்கு பதில் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

கம்யூனிஸ்ட்டுகளின் பலம் எப்போதுமே தொழிலாளர் வர்க்கம்தான். ஆனால், இன்றைக்குப் பத்து ரூபாய்க்கு மூட்டை தூக்குபவரும் தொழிலாளி; மாதம் லட்ச ரூபாய் வாங்கும் கணிப்பொறியாளரும் தொழிலாளிகள்தான்.இந்த இரு வேறுபட்ட தொழிலாளிகளையும் ஒன்றிணைக்கும் - கட்சியை நோக்கி இழுக்கும் செயல்திட்டம் கட்சியிடம் இருக்கிறதா? வெளியிலிருந்து பார்க்க அப்படித் தெரியவில்லை?

உழைக்கும் வர்க்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பான்மையோர் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாததுதான் இப்போதைய பிரச்சினையே. இந்த விஷயத்தில் இப்போது கட்சி நிறைய கவனம் செலுத்துகிறது.

பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியா போன்ற நாட்டில் மாநிலக் கட்சிகளுக்குத் தேவை இருக்கிறது. வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் இணைந்து வாழும் சமஷ்டி அமைப்பு நமக்கு முக்கியம்.

பிரச்சினைகளை அணுகும்போது தேசியக் கட்சியாக அணுகுவதா, மாநிலக் கட்சியாக அணுகுவதா என்பதில் கட்சிக்குக் குழப்பம் இருக்கிறதா?

இல்லை. நாட்டுக்கு எது தேவையோ அதையே சொல்கிறோம்; செய்கிறோம்.

மேற்கு வங்கத்தில் வன்முறை அரசியலை இடதுசாரிகள் கையாண்டீர்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டு உங்கள் மீது உண்டு. இன்று அதையே திரிணமூல் காங்கிரஸிடமிருந்து நீங்களும் எதிர்கொள்கிறீர்கள். இந்த அரசியல் வேட்டையை முடிவுக்குக் கொண்டுவர ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

எப்போதுமே ஏழைகளுக்காகவும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் கட்சி இது. மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் எங்களுக்கு எதிராக வன்முறைகளைக் கையாண்டனர் என்பதே வரலாறு. 1970-களில் எங்கள் கட்சிக்கு எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இப்போது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியிலும் அதே போன்ற சூழலைப் பார்க்கிறோம். இதை மறைக்கத்தான் நாங்கள் ஆட்சியிலிருந்தபோது வன்செயல்களில் ஈடுபட்டதாகத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நாங்கள் எப்போதும் வன்முறைக்கு எதிராகவே இருக்கிறோம்.

உங்களை நெருக்கமாகப் பார்க்கும் பலரும், “கட்சி கொஞ்ச காலத்துக்கேனும் - ஓரிரு தேர்தல்களுக்கேனும் - தேர்தல் அரசியலைப் புறக்கணித்துவிட்டு, மக்கள் மத்தியில் செயலாற்றச் செல்ல வேண்டும்; அமைப்பை வலுவாக்கிவிட்டு, பின்னர் மீண்டும் தேர்தல் அரசியலுக்குத் திரும்ப வேண்டும்” என்கிறார்கள். ஏன் செய்யக் கூடாது?

நீங்கள் மாற்றிக் கூறுகிறீர்கள். உண்மையில், எங்கள் மீதான குற்றச்சாட்டே நாங்கள் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான். எங்களுடைய முக்கியமான வேலையே மக்களிடையே களப்பணி செய்வதுதான். எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், இளைஞர்கள், மாணவர், மகளிர் இயக்கங்களில் பணிபுரிகின்றனர். இந்த அமைப்புகள் மூலம்தான் எங்களுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். அப்போதுதான் அது தேர்தல் வெற்றியில் எதிரொலிக்கும்.

இந்தத் தேர்தல் அரசியல் மூலம் நீங்கள் வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு என்ன? அதாவது, எத்தனையோ கட்சிகள் இருக்கும்போது ஏன் மக்கள் இடதுசாரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஒரு வாக்காளர் ஊழலற்ற ஆட்சியை விரும்புகிறார் என்றால், எல்லோருக்குமான வளர்ச்சியை விரும்புகிறார் என்றால், அது இடதுசாரிகளிடம்தான் சாத்தியம். ஏனென்றால், சுத்தமான கைகள் இடதுசாரிகளுடையவை. மாற்று அரசியல், பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர்கள் இடதுசாரிகள். பெருநிறுவனங்கள், பணமூட்டைகள் அரசியலை ஆக்கிரமிக்கக் கூடாது என்று நினைத்தால், இடதுசாரிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

ஏப். 2014, ‘தி இந்து’ 

1 கருத்து: