நெடுவாசலில் விவசாயிகள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிப்ரவரி 15 அன்று இங்கு ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுப்பதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியின் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. வானம் பார்த்த நிலம். சில மாதங்களுக்கு முன் உள்ளூர் செய்தியாளர் சுரேஷுடன் புதுக்கோட்டை கிராமங்களைச் சுற்றி வந்தேன். நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. “கிணத்துல அஞ்சடி ஆறடி ஆழத்துல கெடந்த தண்ணியை ஏத்தம் கட்டி எறைச்ச காலம் போய், இன்னிக்கு ஆயிரம் அடி நோக்கி தண்ணி கீழே போய்க்கிட்டுருக்கு” என்றார்கள்.
நெடுவாசல் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் அவ்வளவு மோசம் இல்லை என்றாலும், பத்தாயிரம் அடி பதினைந்தாயிரம் அடிக்கு ஆழ்துளைக் கிணறு போட்டு எரிபொருள் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, சுற்றுப்புறக் கிராமங்கள் முழுக்க நீர்மட்டம் விழுந்துபோகும்; விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் இது நிலைகுலைத்துவிடும் என்று அஞ்சுகிறார்கள் விவசாயிகள். இந்தத் திட்டம் அழிவுத் திட்டமா? தெரியவில்லை. வளர்ச்சித் திட்டமாகவேகூட அமையலாம். ஆனால், எந்த நிலத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ அந்த நிலம்சார் மக்களுக்கு இதுகுறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமா, இல்லையா?