அவையோர் அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்நாட்டில் தீவிரமான வாசிப்பைக் கொண்ட, புதிதாக எழுத வரும் எவரும் தன்னுடைய பயணப் பாதையின் குறுக்கே கல்கியைச் சந்திக்காமல் இருக்கவே முடியாது. தமிழ்ப் பத்திரிகை உலகைப் பொறுத்தமட்டில், அவர்தான் முதல் சூப்பர் ஸ்டார்; எப்படி சினிமாக்காரர்களுக்கு எம்.கே.தியாகராஜ பாகவதரோ அப்படி. ஆகையால், என்னுடைய ஆதர்ஷங்களில் ஒருவராகவும் கல்கி நிலைப்பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
நான் நேரடியாக கல்கியிடம் சென்றவன் இல்லை; ரொம்ப சின்ன வயதிலேயே அவர் மறைமுகமாக என்னை வந்தடைந்திருந்தார். ‘கல்கி குழுமம்’ கொண்டுவந்த ‘கோகுலம்’ என் சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்த இதழ்களில் ஒன்று. அங்கிருந்து அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்தபோது ‘கல்கி’ இதழ் நான் புதிதாகப் படிக்க ஆரம்பித்த இதழ்களின் பட்டியலில் இருந்தது. அப்புறம் கல்கியின் எழுத்துக்கள். இப்படிப் படிப்படியாக கல்கியின் வாசகன் ஆகியிருந்தேன். பின்னாளில் அவரும் காந்தியர்; காவிரிப்படுகையைச் சேர்ந்தவர் என்று அறிந்தபோது சந்தோஷம் அதிகமானது. நானும் ஒரு பத்திரிகையாளனானபோது இதழியலில் என்னுடைய முன்னோடிகளில் அவரும் ஒருவராகிவிட்டார். கல்கியின் நினைவைப் போற்றும் நிகழ்வில் கலந்துகொள்வதையும், அவருடைய கட்டுரை நூல் வெளியீட்டில் பங்கேற்பதையும் பொருத்தமானதாகவே கருதுகிறேன்.
நான் கல்கியை ‘பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்’ என்று வர்ணித்ததில் ஆழமான அர்த்தம் உண்டு. தமிழ்ப் பத்திரியுலகில் கல்கி கோலோச்சிய கால் நூற்றாண்டுதான் அதன் முதல் பொற்காலம். பலதுறை ஜாம்பவான் எஸ்.எஸ்.வாசனால் வாங்கப்பட்டு, ‘ஆனந்த விகடன்’ புத்தெழுச்சி பெறும் 1931-ல்தான்தான் அதன் விற்பனை 1200 பிரதிகளில் இருந்து 16000 ஆக உயர்ந்தது. வெளியில் இருந்து அதுவரை எழுதிவந்த கல்கி, அதன் பொறுப்பாசிரியராக இணைகிறார். அடுத்து, எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து அங்கு கல்கி பணியாற்றிய 11 ஆண்டுகள்; தொடர்ந்து 1941 முதல் சதாசிவத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய ‘கல்கி’யில் அவர் மறையும் 1954 வரை பணியாற்றிய 14 ஆண்டுகள்... ஆக இந்தக் கால் நூற்றாண்டு தமிழ் இதழியலும் அதன் வாசகப் பரப்பிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய முக்கியமான காலகட்டங்களில் ஒன்று.