அ.முத்துலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.முத்துலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அபூர்வமான எழுத்து: அ.முத்துலிங்கம்

பத்திரிகை அலுவலகம் பரபரப்பாக இயங்கியது. செய்தியாளர் தன் மேசையில் ஒரு தாளில் தலைப்பை எழுதிவைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். அதில் இருந்த வாசகம் இதுதான்: ‘புகைக்கூண்டில் சிக்கிய மாடு’.
ஆசிரியர் கேட்டார்: ”இது என்ன தலைப்பு?”
செய்தியாளர் சொன்னார்: “இந்தத் தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறது. எதற்கும் எழுதிவைத்துவிட்டு காத்திருக்கிறேன். ஒருநாள் உண்மையாக இப்படி நேரும்போது இந்த தலைப்பை உபயோகிக்கலாம் அல்லவா?”

இப்படியான சூழலில்தான் பத்திரிகை உலகம் இயங்குகிறது. முன்கூட்டியே எதையும் யோசித்துவைக்க வேண்டும். எல்லாமே அவசரம்தான். உடனுக்குடன் செய்தி தேவை. அடுத்த பத்திரிகை ஒன்றை எழுதுவதற்கு முன்னர் எழுதிவிடவேண்டும். எழுத்து நன்றாக அமைந்து வாசகரைக் கவர வேண்டும். எழுதுவதில் நம்பகத்தன்மை இல்லையென்றால், அது வாசகர்களைச் சென்றடையாது. ஆகவே அடுத்த சில நிமிடங்களில் அச்சுக்குப் போக இருக்கும் பத்திரிகைக்குத் தகுந்த ஆதாரங்களை திரட்டித் தரவேண்டும். இதுதான் ஒரு பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் தினசரி அவலம்.

*

கனடாவில் பிரபலமான பத்திரிகை ‘ரொறொன்ரோ ஸ்டார்’. காலையில் அநேகம் பேர்களின் கைகளில் அது காணப்படும். 25 வருடங்களாக அந்தப் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவரிடம், ‘ஒரு நல்ல பத்திரிகையாளருடைய இலக்கணம் என்ன?’ என்று கேட்டேன். அவர் இரண்டு வரிகளில் பதில் சொன்னார். ’எழுதுவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எழுத்தில் உண்மை வெளிப்படவேண்டும்.’
சமஸின் கட்டுரைகளைத் தொகுப்பாகப் படித்தபோது எனக்குத் தோன்றியது அதுதான். அவருடைய எழுத்தில் இவை இரண்டும் இருந்தன.

நான் சமஸைச் சந்தித்தது கிடையாது; அவரிடம் பேசியதும் இல்லை. ஆனால், எப்பொழுதெல்லாம் சமஸ் கட்டுரைகள் என் கண்களில் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவற்றைப் படித்துவிடுவேன். அதற்குக் காரணம் அவர் வாதங்களைத் திறமையாக அடுக்கி அதன் தர்க்க முடிவு நோக்கி வாசகர்களை நகர்த்திக்கொண்டு செல்லும் நேர்த்திதான். சமஸுடைய மொழிநடை அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது. அதுபோலத்தான் சமஸுடைய எழுத்தும். ஆர்ப்பாட்டமில்லாமல் ஆழத்தில் பாயும்.