தொழில்மயமாக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்மயமாக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

லண்டன்: இயந்திரமும் விலங்கும்


நண்பர்களிடமிருந்து இரவு உணவுக்கான அழைப்பு வந்தது. அன்று மால்ட்பீ வீதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார் ஆசாத். பிராட்வே, பெர்விக், ப்ராக்லி, கேம்டன், மால்ட்பீ இவையெல்லாம் லண்டனில் சாலையோரக் கடைகளுக்குப் பிரசித்தமான சந்தை வீதிகள். உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆயிரம் வகை உணவுகள் இந்த வீதிகளில் ஒரே இடத்தில் கிடைக்கும். மால்ட்பீ வீதியிலுள்ள மெக்ஸிகன் உணவகம் ஒன்றில் சால்மன் மீன் வறுவல் விசேஷம் என்று சொன்னார் ஆசாத். வழக்கத்துக்கு மாறாக எனக்கு வெளியே எங்கும் செல்ல அன்று மனதில்லாமல் இருந்தது. தாமதமாக விடுதி திரும்பியவன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். மனம் இருநூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கி தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் நிலைகொண்டிருந்தது.

இன்று நாம் எதிர்கொண்டுவரும் எத்தனையோ பிரச்சினைகளுக்கான வேர்கள் தொழில் புரட்சியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. மனிதகுல வரலாற்றிலேயே பெரும் திருப்புமுனையை உண்டாக்கிய தொழில் புரட்சியானது, அளவில் சின்னதான பிரிட்டனை வேறு எந்த நாட்டைவிடவும் செல்வாக்கும் அதிகாரமும் கொண்டதாக மாற்றியதோடு மட்டும் நிற்கவில்லை; ஒட்டுமொத்த உலகின் போக்கையும் திருப்பியது. உலகின் எல்லாக் கலாச்சாரங்கள், விழுமியங்கள் மீதும் மோதியது. நவீனத்துவத்தை ஏகாதிபத்தியமாக்கியது.

ரஷ்யப் புரட்சி, பிரான்ஸ், ஜெர்மனியின் எழுச்சி, அமெரிக்காவின் பாய்ச்சல், இரு உலகப் போர்கள் தந்த பின்னடைவு, சீனாவின் விஸ்வரூபம் இவற்றுக்கெல்லாம் பிறகு இன்று பிரிட்டன் சிறுத்துவிட்டிருக்கலாம். ஆனால், அது முன்னெடுத்த பாதையைத் தனக்கேற்பக்   கட்டமைத்துக்கொள்வதன் வாயிலாகவே நவீனப் பேரரசுகள் உருக்கொள்கின்றன. பிரிட்டன் உருவாக்கிய கற்பனையிலிருந்து உலகத்தால் விடுபடவே முடியவில்லை. தொழில்மயமாகும் எல்லா நாடுகளும் தங்களுக்கான நியாயத்தை வளர்ச்சிவாதத்திலிருந்தே பெறுகின்றன.