கருத்துச் சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்துச் சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாரீஸ் ஏன் பாரீஸாக இருக்கிறது?


தொலைக்காட்சியில் பார்த்தபோது, எழுந்து நின்று அந்தப் பெருங்கூட்டத்தின் கூடவே சேர்ந்து உச்சஸ்தாயியில் கத்த வேண்டும் போல் இருந்தது: “நானும் ஷார்ல்!”

ஒரு மொழியில் ‘மக்கள் எழுச்சி’ என்பதுபோல, ஜனநாயகத்தை உந்தித் தள்ளும் இரு சொற்களின் சேர்க்கைக்கு இணை இல்லை. வரலாற்றில் மிக அரிதான தருணங்களே இந்த ஜோடி சொற்களை உண்மையாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகின்றன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் என 40 உலகத் தலைவர்கள் மத்தியில் நின்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹோலந்த் “இன்று பாரீஸ் உலகின் தலைநகரம்” என்று முழங்கியது கூடுதலான வர்ணனை அல்ல; ‘பாரீஸ் ஷார்ல் ஹிப்டோ பேரணி’ வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய மக்கள் எழுச்சி. கருத்துச் சுதந்திரம் மீதும் படைப்பாளிகள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தி, பிரெஞ்சு மக்கள் வெளியிட்டிருக்கும் சர்வதேசப் பிரகடனம்!

அடிப்படைவாதிகளும் ஆயுதங்களும்


செய்தி மேஜையின் மேல் வரிசையாக வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன பிரெஞ்சு பத்திரிகையான ‘ஷார்ல் ஹிப்டோ’வைப் பற்றிய செய்திகள். பயங்கரவாதிகள் எப்போது, எப்படி வந்தார்கள்... பத்திரிகை அலுவலகத்துக்குள் எப்படிப் புகுந்தார்கள்... எப்படிச் சுட்டுக் கொன்றார்கள்... எப்படிக் கைதுசெய்யப்பட்டார்கள்... எந்த அமைப்பு இந்தப் படுகொலைக்குப் பின்னணியில் இருக்கிறது...

செய்திகள் ஒன்றன் மீது ஒன்றாக விழுகின்றன. கூடவே படங்களும் வந்து விழுகின்றன. சிரித்துக்கொண்டிருக்கும் அதன் ஆசிரியரின் படம். அலுவலகத்தில் பரபரப்பான வேலையில் ஈடுபட்டிருக்கும் அதன் ஆசிரிய இலாகாவினரின் படம். கணினி முன் படம் வரையும் அதன் கேலிச் சித்திரக்காரர்கள் படம். கூடவே கேலிச் சித்திரங்களும் வந்து விழுகின்றன. உலகெங்கும் இந்தப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து வரையப்பட்ட கேலிச் சித்திரங்கள். இடையிடையே துண்டு துண்டாகக் குறிப்புகளில் வந்து விழுகிறது அதன் வரலாறு.