பலதரப்பு மனிதர்கள் கருத்துச் சொல்லும் காணொளி ஒன்றைப் பார்த்தேன். திமுக ஆட்சி அமைந்த ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டது அது. எதிர்பார்த்ததைவிடவும் மேலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அதில் பலரும் சொல்கிறார்கள். ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அரசியலர்கள் வட்டாரத்திலேயே கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு அப்படி ஒரு பேச்சு இருப்பதைக் கேட்கிறேன். வெகுமக்கள் மனம் கவரும் அறிவிப்புகள் மட்டுமே இதற்குக் காரணம் என்று நான் நம்பவில்லை. முன்னதாக தமிழக மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு ஆட்சி இங்கே இருந்தது; அரசியல் தலைமை என்பதே காணாமல்போயிருந்தது; நான் முன்பே பல முறை சுட்டியிருக்கிறபடி கே.பழனிசாமி ஆட்சியின் ஆகப் பெரிய வீழ்ச்சி அதுதான்.
நல்லதோ, கெட்டதோ; பெரும்பான்மை முடிவுகளை மாநிலத்தில் அரசு அதிகாரிகளே எடுத்தனர். நாடு தழுவிய பிரச்சினைகளில் பாஜகவின் முடிவுகளுக்கேற்ப பழனிசாமியின் அரசு ஒத்திசைந்து செயல்பட்டது. கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இது மேலும் வெளிப்பட்டது. உலகெங்கும் கரோனா பரவியது. தொற்றுக்குள்ளானோரின் வீடுகள் தகரத் தட்டிகளால் அடைத்துத் தடுக்கப்பட்டதையும், வீதிகள் இரும்புக் கம்பிகளால் மறிக்கப்பட்டதையும் இங்கேதான் கண்டோம். ஊரடங்கின்போது தவறி வெளியே சென்றவர்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இவ்வளவையும் பொருட்படுத்தாதவராக பழனிசாமி இருந்தார். தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்து, மக்கள் செத்துக்கொண்டிருந்த சமயத்திலேயே “நானும் உங்களைப் போல டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று சொன்ன வரலாறு அவருக்கு இருந்ததால் மக்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்கள்.
மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நடந்த முதல் நல்ல விஷயம், வெகுமக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு செவிசாய்க்கும் என்ற சமிக்ஞை வெளியானது; அதுதான் மக்களின் வரவேற்புக்கு முக்கியமான காரணம். ஊரடங்கின் கேடுகளை எதிர்க்கட்சித் தலைவராக நன்கு உணர்ந்திருந்தவர் என்பதால், மிகுந்த தயக்கத்துடனேயே ஊரடங்கு அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். நாட்டிலேயே அதிகமான பரவல் எனும் இடத்தை நோக்கி தொற்று பரவிவந்தது; மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன; ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அலைக்கழிந்தனர்; மருத்துவர்கள் பெரும் பணி நெருக்கடிக்கு ஆளாயினர்; அனைத்துக் கட்சிகளிடத்திலிருந்தும் ஊரடங்குக்கான அழுத்தம் பெருகிவந்தது; ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இவ்வளவு நெருக்கடியானச் சூழல்கள் ஸ்டாலினுக்கு முந்தையவர்கள் எவரும் எதிர்கொண்டிராதது; ஆக, ஊரடங்கு முடிவு நோக்கி அவர் நகர்ந்த நியாயம் புரிந்துகொள்ளக்கூடியது.
சரி, இந்த ஊரடங்கை எப்படி அமலாக்குவது? இதில்தான் நமக்குப் பெரிய தெளிவு தேவைப்படுகிறது. உலக நாடுகள் பெரும்பான்மையும் ஊரடங்கை அமல்படுத்தினாலும், மோசமான முன்னுதாரணம் பிரதமர் மோடி 2020 மார்ச் 24-ல் அறிவித்தது என்பதை வரலாறு சொல்லும். போதிய அவகாசம் கொடுக்காமல், மக்களை அல்லோலகல்லோலப்படுத்தி அலைக்கழித்து வதைத்த ஊரடங்கு அது. ஊரடங்கு எப்படி அமலாக்கப்படக் கூடாது என்பதை அதிலிருந்தும், எப்படி அமலாக்கப்பட வேண்டும் என்பதை உலகளாவிய அனுபவங்களிலிருந்தும் இந்த ஓராண்டில் இந்திய மாநிலங்கள் கற்றிருக்கின்றன.
பிரிட்டனில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலேயேகூட அத்தியாவசியப் பொருள்களுக்கான அங்காடிகள், கடைகள் முழுமையாக மூடப்படவில்லை. லண்டன் மெட்ரோ உட்பட பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயங்கியது. ஆயினும், அங்கேயே பொதுமுடக்கத்தைக் கையாண்ட விதம் தொடர்பில் தீவிரமான விவாதங்கள் இன்று நடக்கின்றன. இந்த விவகாரத்தைத் தொடக்கத்திலிருந்தே மாறுபட்ட கவனத்துடன் ஸ்வீடன் அணுகிவருகிறது. சாத்தியப்பட்ட அனைவரும் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவதை அது உத்வேகப்படுத்தியது; திரளான கூடுகைகளுக்கு அது தடை விதித்திருந்தது; மக்கள் விழிப்புணர்வுடன் அணுகத் தொடர்ந்து அது வலியுறுத்திவந்தது; அதேசமயம், அன்றாடச் செயல்பாடுகளை ஸ்வீடன் முடக்கவில்லை. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை விகிதம் பிரிட்டனைக் காட்டிலும் ஸ்வீடனில் அதிகமாக இருந்தபோதிலும், தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதம் ஸ்வீடனில் குறைவாகவே இருந்தது. மேலும், பொருளாதாரத்தில் ஸ்வீடன் 3% வீழ்ச்சியை எதிர்கொள்ள பிரிட்டன் 10% வீழ்ச்சியை எதிர்கொண்டது. தீவிரமாக ஊரடங்கை அமலாக்குவது மொத்தமாக மக்களுடைய வாழ்க்கைத்தரத்திலும், மரணங்களிலும், நெடுங்காலத்துக்குப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் விளைவுகளோடு ஒப்பிடப்பட்டு இன்று அங்கு விவாதங்கள் நடக்கின்றன.





