சமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவருக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கே சில வாரங்கள் அவர் தங்கியிருக்க வேண்டும். கொட்டும் பனியும் வீட்டு நினைவும் ஓய்வு நாள் ஒன்றில் இந்தியவுணவு சாப்பிடும் ஆசையை அவருக்குள் கொண்டுவந்தன. அங்காடிக்குச் சென்று, ஆயத்த தோசை பொட்டலத்தை வாங்கிவந்தவர் ஓவன் அடுப்பில் அதைச் சூடாக்க வைத்தார். தொலைபேசி அழைப்பானது சில நிமிஷங்கள் அவர் கவனத்தைப் பறித்துவிட அறை முழுக்கப் புகை மண்டியது. அடுப்பு தீப்பிடிக்கும் முன்னர் அவர் அதை அணைத்தாலும் தீ அலாரம் ஒலிக்கத் தொடங்கலானது. ஜன்னல்களை அவசரமாகத் திறக்க முற்பட்டார் ராமாநுஜம். விடுதி வரவேற்பறையிலிருந்து தொலைபேசி அழைப்பு. முதல் கேள்வி: “நீங்கள் பத்திரமா?”
விடுதிப் பணியாட்கள் ஓடி வருகிறார்கள். முதல் கேள்வி: “உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே!” அடுப்பை மின் இணைப்பிலிருந்து அவர்கள் துண்டிக்கிறார்கள். எல்லா ஜன்னல்களும் திறக்கப்பட்டு, புகை வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், தீ அலாரம் சத்தம் போடுவதை நிறுத்தியபாடில்லை. “இதை நிறுத்தலாமா?” என்கிறார் ராமாநுஜம். “இதை நிறுத்த எங்களுக்கு அதிகாரமில்லை. தீயணைப்புத் துறையினர் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்துதான் நிறுத்த வேண்டும்.”
ஓரிரு நிமிஷங்களில் தீயணைப்பு வாகனம் வருகிறது. அறையைப் பார்வையிடுகிறார்கள். தீ அலாரத்தை நிறுத்துகிறார்கள். அடுப்பைப் பத்திரமாகத் தாங்கள் கொண்டுவந்த பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். விடுதிப் பணியாளர்கள் சொல்கிறார்கள்: “அது தடயவியல் துறை ஆய்வுக்குச் செல்லும். ஒருவேளை கூடுதல் நேரம் சூடாக்கப்பட்டு, தீப்பிடிக்கும் சூழல் உண்டானால் அடுப்பு தானாக மின்சாரத்தைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். தீப்பற்றும் சூழல் உண்டாகக் காரணம் என்ன - அந்தச் சாதனத்தின் தயாரிப்பில் உள்ள குளறுபடியா அல்லது பயன்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குளறுபடியா என்று தடயவியல் துறையினர் கண்டறிவார்கள். தவறு நம் தரப்பிலானது என்றால், பிரச்சினை இல்லை; அடுப்புக்குக் காப்பீடு செய்திருக்கிறோம் வந்துவிடும்; ஒருவேளை அடுப்பு தயாரிப்பில் ஏதும் பிரச்சினை என்று கண்டறியப்பட்டால் அந்த நிறுவனம் தண்டனைக்குள்ளாகும்” என்கிறார்கள் விடுதிப் பணியாளர்கள்.
தன்னுடைய வேலைக்குப் புறப்படுகிறார் ராமாநுஜம். மாலையில் அவர் தனது அறைக்கு வந்தபோது புத்தம் புதிய ஓவன் அடுப்பு ஒன்று அங்கே இருக்கிறது. சில நாட்களில் ராமாநுஜம் விடுதியைக் காலிசெய்து ஊருக்குப் புறப்படுகிறார். எந்த சேதத்துக்கும் அவரிடம் விடுதி நிர்வாகம் ஒரு டாலர்கூட வாங்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியம், அவரை யாருமே குற்றஞ்சாட்டவில்லை; அப்படி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் நடக்கும் பழிபோடும் விளையாட்டின்போதும், இந்தக் கதையும் அது உள்ளடக்கியுள்ள ஒவ்வொரு இழையும் நினைவுக்கு வரும். ஒரு பேரிழப்புக்குப் பிறகும், பொறுப்பேற்பு தனி மனிதர்களுடையதா; அரசினுடையதா என்று விவாதிக்கும் ஒரு சமூகத்திடம் யாராலும் பொறுப்புணர்வை உட்புகுத்திவிட முடியாது. தனிமனிதர்கள் தவறிழைப்பது இயல்பு; அதை எதிர்கொள்ள ஒரு அமைப்பு ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு பொறுப்புணர்வோடும் திட்டமிடலோடும் செயல்படுகிறது; ஒரு தனிநபரின் பிரச்சினையை எப்படி சமூகத்தினுடைய ஒரு உறுப்பின் பிரச்சினையாகக் கருதி அது அணுகுகிறது என்பதன் மூலமாகவே அமைப்புகள் சமூக மதிப்பீட்டைப் பெறுகின்றன.
நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் போராட்டத்துக்குப் பின்னும் சிதைந்த சடலமாக மீட்கப்பட்டது நம் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டிய குற்றம் என்றே நான் நினைக்கிறேன். குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரைக் காரணமாக்கிப் பேசுவது வக்கிரம்.