இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கடுமையான விமர்சகன் நான். அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கு வழிவகுத்த மாநிலத்தில் பிறந்த மரபும் ஒரு காரணமாக இருக்கலாம். டெல்லியை மையப்படுத்தியிருக்கும் அதிகாரங்கள் சமூகநீதிக்கும் ராஜியநீதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உடைத்துப் பரவலாக்கப்பட வேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவன். ஆனால், சமத்துவத்துக்கான இந்த உணர்வானது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு அந்நியமானது அல்ல. சமத்துவத்துக்கான இந்தத் தேட்டமே அதன் ஆன்மா. பாரபட்சத்துக்கு எதிரான என்னுடைய பேச்சுக்கு அது சக்தி தருகிறது. ஆன்மாவுக்கேற்ப அதன் உடல் உறுப்புகளும் அமைய வேண்டும் என்று பேசுகையில், நான் கோரும் அற விழுமியங்களில் அரசியலமைப்புணர்வுக்கும் ஒரு பங்கிருப்பதை உணர்கிறேன்.
சட்டங்களுக்கு வெகுதூரத்தில் மக்கள் கூட்டத்தில் நிற்கும் எனக்கு, இந்நாட்களில் ஒரு சந்தேகம் எழுகிறது. சட்டத்தோடு ஒவ்வொரு நாளும் புழங்கக்கூடிய, நிபுணத்துவம் பெற்ற சட்ட வடிவமைப்பாளர்களான ஆட்சியாளர்களும், சட்டக் கண்காணிப்பாளர்களான நீதிபதிகளும் உண்மையிலேயே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் தரும் இந்த அரசியலமைப்புணர்வைப் பெற்றிருக்கிறார்களா? அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் எழுத்துகளாக உள்ள அதன் ஆன்மா இந்த எழுபதாண்டுகளில் எங்கேனும் இவர்கள் உடலுக்குள் புகுந்து ஒரு கலாச்சாரமாக ஆகியிருக்கிறதா அல்லது அவை தத்தமது தேவைக்கும் சௌகரியத்துக்கும் ஏற்ப அணிந்துகொண்டு தூக்கிப்போடும் உடைகள்போல வெறும் எழுத்துகளாகவே நிற்கின்றனவா? ஏனென்றால், விழுமியங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும்போதுதான் அவை தார்மிகத்தின் ஒரு அங்கமாகவும் வெளிப்படுகின்றன. அரசியலமைப்புணர்வானது சட்டப் புத்தகங்களில் உள்ள எழுத்துகளாலேயே வந்துவிடுவதில்லை. ஒரு சமூகம் தன் நடத்தையின் மூலம் அந்த எழுத்துகளுக்குக் கொடுக்கும் அர்த்தமே அதன் ஆதாரம்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பதவிநீக்க நடவடிக்கை கோரும் எதிர்க்கட்சிகளின் முன்மொழிவை நம்முடைய அமைப்பு எதிர்கொள்ளும் முறை நிலைக்குலைய வைக்கிறது. ஆட்சிமன்றமோ, நீதிமன்றமோ; எந்த ஒரு ஜனநாயக அமைப்பின் உயிரும் மக்களுக்கு அதன் மீதிருக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. அதுவும் ஒரு சாமானியனின் நம்பிக்கையைக் காட்டிலும் நீதித் துறை இழக்கப்போகும் சொத்து எதுவுமில்லை.