தேர்தல் ஆணையம் ‘ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் ரத்து’ என்று அறிவித்தபோது, உடைந்து உட்கார்ந்தவர்களில் எங்களுடைய புகைப்படக்காரரும் ஒருவர். ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி. அவருடைய மரணத்துக்குப் பின் ஆளும் அதிமுக இரண்டாகிவிட்ட நிலையில், அடுத்து கட்சியின் லகான் யார் கையில் என்பதையும் தீர்மானிக்கும் காரணிகளால் ஒன்றாக இந்த இடைத்தேர்தல் மாற்றப்பட்டிருந்தது. விளைவாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஊடகர்கள் பெரும் அலைச்சலில் இருந்தார்கள். இனி ஒரு இடைவெளி விட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திரும்பவும் அலைய வேண்டும். தேர்தல் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், களத்தில் நிற்கும் 62 வேட்பாளர்களில் பெரும்பாலான சிறிய கட்சிகள் / சுயேச்சை வேட்பாளர்களின் நிலையும் இதுதான். திரும்பவும் செலவழிக்க வேண்டும், திரும்பவும் அலைய வேண்டும். மாறாக, யாரை முன்வைத்துத் தேர்தலை ரத்துசெய்திருக்கிறார்களோ அவர்களுக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் கிடையாது; இன்னும் சொல்லப்போனால், கூடுதல் அனுகூலம். இப்படியான அமைப்பை எப்போது மாற்றப்போகிறோம்?
தொகுதிக்குள் நான் ஒரு சுற்று சுற்றி வந்தேன். ஒரு ஓட்டுக்கு ரூ.7,000 கிடைப்பதாகச் சொன்னார்கள். ஆளுங்கட்சியின் ஒரு பிரிவின் சார்பில் ரூ.4,000; இன்னொரு பிரிவின் சார்பில் ரூ.3,000. பல இடங்களில் பிரதான எதிர்க்கட்சியின் சார்பிலும் ரூ.2,000 போயிருக்கிறது. “ஜெயலலிதாம்மா தேர்தல்ல நின்னப்பவே ரெண்டு முறையும் பணம் கொடுத்தாங்களே, இப்பம் என்ன எல்லாம் ஏதோ புதுசா நடக்குற மாதிரி பேசுறாங்க?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பற்றி அதிமுகவினரிடம் கேட்டால், அவர்கள் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று சொல்லி திமுகவை நோக்கிக் கை காட்டுவார்கள். திமுகவினரைக் கேட்டால், “காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே ஓட்டுக்கு அரையணா காசு கொடுக்கும் கலாச்சாரம் இருந்ததே!” என்பார்கள். எல்லாவற்றுக்குமே ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. அதனாலேயே அசிங்கங்களைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. உண்மையில், இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் நாள்பட்ட ஒரு புற்றுக்கட்டியின் சீழையே ஆர்.கே.நகர் தொகுதி வெளிப்படுத்துகிறது. ஆனால், அதை வெறும் கண் துடைப்பு நடவடிக்கைகளால் மறைத்து, புனுகுத் தைலம் பூசி இதுகுறித்த விவாதத்தைத் தமிழக எல்லையோடு, சுருக்கிவிட முற்படுகிறது இந்திய அரசு.


