பூனைக்கால் சிங்கங்கள்


மத்திய லண்டன் பகுதியைக் கடக்கும்போதெல்லாம் டிரஃபால்கர் சதுக்கம் தன்னை நோக்கி இழுத்தது. பிரெஞ்சு, ஸ்பானிய கடற்படைகளை 1805-ல் ஸ்பெயின் நாட்டின் டிரஃபால்கர் முனையில் பிரிட்டிஷ் கடற்படை தளபதி நெல்சன் தோற்கடித்ததன் ஞாபகார்த்த சதுக்கம் இது. நெல்சனுக்கு ஒரு பெரிய நினைவுத் தூணும் அமைத்திருக்கிறார்கள். பீடத்தில் நான்கு பிரமாண்ட சிங்கங்கள் சுற்றி அமர்ந்திருக்க 169 அடி உயரத்தில் நிற்கிறார் நெல்சன்.

குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. இருவரும் சதுக்கத்தை நோக்கி நடந்தோம். சதுக்கக் கதைகள் சொன்னபடி வந்தார் ஹெலன். “இந்த இடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. மக்கள் கூடும் ஒரு கலாச்சாரத் திடலாக இது இருக்க வேண்டும் என்று 1812-ல் இதைப் பொது இடமாக மேம்படுத்தினார் கட்டுமானவியலாளர் ஜான் நாஷ். 1830-ல் இதற்கு டிரஃபால்கர் சதுக்கம் என்று பெயரிட்டார்கள். 1838-ல்  நெல்சனுக்குச் சிலை அமைக்கும் பணி தொடங்கியது. பீடத்தின் நான்கு புறங்களிலும் சிங்கங்களைச் சேர்க்கும் பணி 1867-ல் முடிந்தது. இந்தச் சிங்கங்கள் ஒவ்வொன்றின் எடையும் ஏழு டன்கள். சிங்கத்தின் கால் விரல்களைக் கவனியுங்கள். வித்தியாசமாக இருக்கும். இவை சிங்கத்தின் கால்கள் அல்ல; பூனையின் கால்கள் என்ற பேச்சு இங்குண்டு. உலகப் போரில் லண்டனைக் கைப்பற்றினால் இந்தச் சிலைகளை அப்படியே ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஹிட்லரின் படைகளுக்கு இருந்திருக்கிறது.”

பூனைக்கால் சிங்கங்களைப் பார்த்தேன். ஏனோ அவை மிகுந்த பரிதாபத்துக்குரியவையாகத் தோன்றின. வருடிக்கொடுத்தேன். பரிச்சயமான தமிழ் முகம் ஒன்றை அப்போது கண்டேன். இயக்குநர் கே.வி.ஆனந்த். நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படப் பணிகளுக்காக வந்திருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு கலைந்தோம். சதுக்கத்தில் ஒரு இளைஞர் குழு நடனமாடி காசு வசூலித்துக்கொண்டிருந்தது. ஹல்க் வேஷத்தில் தரையில் கால்கள் படாமல் நின்றபடி காசு வாங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெண். எல்லா நாட்டுக் கொடிகளையும் தரையில் வரைந்திருந்தார் ஒரு இளைஞர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவரவர் நாட்டு கொடிக்கு அருகில் காசு போட்டார்கள்.

லண்டன்: சாலையில் முன்னுரிமை மனிதர்களுக்கா, வாகனங்களுக்கா?


லண்டனை சைக்கிளில் சுற்ற விரும்பினேன். இந்தப் பயணத்தில் அந்த ஆசை கைகூடவில்லை. நண்பர்கள் அனுமதிக்கவில்லை. சாலைகளில் சைக்கிள்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த தடங்களில் உற்சாகம் பொங்க கடந்த சைக்கிளோட்டிகளைப் பார்க்கும்போது ஏக்கமாக இருந்தது. நகரில் சைக்கிள்களுக்கான அதிவேகத் தடம் அமைப்பதில் இப்போது உத்வேகமாக இருக்கிறார்கள். “நீங்கள் விரும்பினால், விக்டோரியா வீதி, வால்டிங் வீதி, ப்ரெட் வீதி வழியே ஒரு சுற்றுச் சுற்றி வரலாம். சிலிர்ப்பை உணர வேண்டும் என்று விரும்பினால், ‘சிஎஸ்3’ அதிவேகத் தடத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும். டவர்ஹில்லில் கிளம்பி வெஸ்ட்மினிஸ்டர் வரைக்குமான பாதையில் ஒருமுறை பயணித்தால் அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டீர்கள்” என்றார் ஹெலன்.

மனிதக் கண்டுபிடிப்புகளில் சைக்கிள் ஒரு எளிய அற்புதம். நிதானப் பயணத்துக்கு ஏற்ற, சூழலைப் பெரிதாக நாசப்படுத்தாத, ஆபத்துகள் அதிகம் விளைவிக்காத, எவ்வளவு எளிமையான வாகனம். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்தபோது ஒரு நாளைக்கு 20 கி.மீ. சைக்கிள் மிதித்தேன். சென்னை வந்த பிறகு அது 25 கி.மீ. ஆக உயர்ந்தது. நீண்ட நாளைக்கு அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. பெருகிவரும் மோட்டார் வாகன நெரிசலானது இப்போதெல்லாம் அருகிலுள்ள கடைவீதிக்குச் சென்று திரும்புவதோடு சைக்கிளுடனான உறவைச் சுருக்கிவிட்டது.

சென்னையில் சைக்கிள் ஓட்டுவது என்பது இன்றைக்கு உயிரைப் பணயம் வைத்து நடத்தும் ஒரு சாகசம். இந்தியாவில் மோட்டார் வாகனப் பெருக்கம் மிகுந்த நகரங்களில் முன்னிலையில் இருக்கிறது சென்னை. தமிழர்கள் இதற்காகப் பெருமை கொள்ள முடியாது. அதிகரிக்கும் மோட்டார் வாகனங்களின் அடர்த்தி சுற்றுச்சூழலிலும் சுகாதாரத்திலும் எவ்வளவு மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதை வருஷம் முழுக்க ஊடகங்கள் பேசுகின்றன. ஆட்சியாளர்கள் காதில் எது விழுகிறது?

லண்டன்: நடப்பதற்கு ஒரு நகரம்



ஒரு ஆரோக்கியமான மாற்றம் உருவாகியிருந்தது. லண்டன் வந்தது முதலாக அன்றாடம் சுமார் 20 கி.மீ. தூரம் வரை நடக்க ஆரம்பித்திருந்தேன். நடை, மிகுந்த விருப்பத்துக்குரியதாக ஆகியிருந்தது. மரங்களின் நிழல் தரித்த, மேடு பள்ளங்கள் - குறுக்கீடுகள் அற்ற, அகல விரிந்த நடைபாதைகள் மேலும் மேலும் நடக்கும் உத்வேகத்தை அளித்தன. உடலைத் துளைக்கும் குளிரானது நடையில் அபாரமான ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது. கதகதப்பான கோட்டும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடிய மழையை எதிர்கொள்ள கையில் ஒரு குடையும் இருந்தால் நாளெல்லாம் நடந்துகொண்டே இருக்கலாம்போல் இருந்தது.

நகரம் சில்லிட்டிருந்தது. நகரின் கடை வீதிகளைச் சுற்றிவர அன்றைய மதியப் பொழுதைத் தேர்ந்தெடுத்திருந்தேன். நண்பகலுக்குப் பிந்தைய, சாயங்காலத்துக்கு முந்தைய, இந்த இரண்டுக்கும் இந்த இடைப்பட்ட பொழுதானது கடைகளை வேடிக்கைபார்த்தபடி நடக்கவும், விருப்பமான கடைகளில் சடாரென்று உள்ளே நுழைந்து ஒரு பார்வையிட்டு திரும்பவும் வசதியானது. எந்த நகரின் கடைவீதியும் சோம்பல் முறிக்கும் நேரம் அது.