கெட்ட செய்திகளின் நாட்களில் மனம் ஒரு நல்ல செய்திக்காக ஏங்குகிறது. உலகெங்கும் உள்ள தலைவர்கள் புத்தாண்டுச் செய்திகளாக எதையெல்லாம் சொல்கிறார்கள் என்று வாசித்துக்கொண்டிருந்தேன். பின்லாந்து பிரதமர் சன்னா மரினின் செய்தி கவர்ந்திழுப்பதாக இருந்தது. “ஒரு சமூகத்தின் பலம் அதில் எத்தனை பேர் பணக்காரர்கள் என்பதில் அல்ல; அதனுடைய நலிவுற்ற பிரிவு மக்கள் எப்படி வாழ்க்கையைத் தீரத்துடன் எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது… ஒரு சமூகத்தில் எல்லோருமே கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி” என்று சொல்லியிருந்தார் சன்னா மரின். கூடவே தன்னுடைய செய்தி வெறும் மாய்மாலம் அல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் 2020 ஜனவரி முதலாக அவருடைய அரசு செயல்படுத்தவுள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, பின்லாந்தின் எழுபது சத மக்களின் வருமானத்தை இந்த மாற்றங்கள் உயர்த்தும் என்று நம்பிக்கையும் விதைத்திருந்தார்.
இதற்குச் சில நாட்கள் முன்புதான் ‘வாரத்தில் நான்கு நாட்கள்; ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டும் வேலை’ கொள்கையை முன்னிறுத்தியிருந்தார் மரின். அவருடைய சமூக ஜனநாயகக் கட்சியின் 120-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசுகையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். பின்லாந்தில் இப்போது வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மக்கள் வேலை செய்கின்றனர்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதே விதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

