தோல்விகளால் வீழாத அறிவாலயம், இன்று துவண்டு கிடக்கிறது. இது திமுகவின் தலைமை அதிகாரத்துக்கான யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் கலக்கம். கட்சித் தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பலரும் உடைந்து அவரிடம் அழுததாகவும் அவர் தேற்றியதாகவும் சொல்கிறார்கள். இந்தியாவில் 13 முறை தோல்வியையே சந்திக்காமல் ஒருவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது வரலாறு. தன்னுடைய 33-வது வயதில் சட்டசபைக்குள் நுழைந்தவர் கருணாநிதி; இன்றைக்கு 92-வது வயதிலும் சட்டசபை உறுப்பினர். இம்முறை மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையோடு சேர்த்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியாக, ஐந்து முறை முதல்வராக எல்லா உச்சங்களையும் அவர் தொட்டுவிட்டார்.
திமுகவில் அதிகார மாற்றமானது புத்தாயிரமாண்டின் தொடக்கத்திலேயே நடந்திருக்க வேண்டியது. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் முழுமையானதாகவும் ஒப்பீட்டளவில் சிறந்ததாகவும் மதிப்பிடப்படும் 1996-2001 ஆட்சிக் காலகட்டத்திலேயே கருணாநிதி அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தைக் கைமாற்றியிருக்க வேண்டும். அப்போதே அவர் 75 வயதைக் கடந்திருந்தார். அன்றைக்கு அந்த முடிவை அவர் எடுத்திருந்தால், இன்றைக்கு அரை நூற்றாண்டு, கால் நூற்றாண்டு காலமாக அடுத்தடுத்த பொறுப்புகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களும் கூடவே ஒதுங்கியிருப்பார்கள். பிற்காலத்து அவப்பெயர்களையும் கருணாநிதி பெரிய அளவில் தவிர்த்திருக்கலாம். ஸ்டாலின் தலைமையையும் பரிசோதித்திருக்கலாம். பந்தயத்தில் தொடர்ந்து நேரடியாகத் தானே நிற்க வேண்டும் என்ற கருணாநிதியின் முடிவின் விளைவாகவே திமுக இன்று கெட்டிதட்டி நிற்கிறது.