மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்!



நாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான்? அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்கான போர்த் தளவாடங்கள்கூட நம்முடைய வீரர்களிடம் இன்று இல்லை என்ற செய்தி வந்தால், அவன் எப்படிக் கொந்தளிப்பான்?

கல்லூரி நாட்களில், ‘அமெரிக்க ராணுவம், சீன ராணுவத்தோடு ஒப்பிட இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள், தளவாடங்கள் குறைவு’, ‘இந்திய ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு போதாது’ என்றெல்லாம் டெல்லியிலிருந்து ‘தேசிய ஊடகங்கள்’ செய்தி வெளியிடுகையில் கடுமையான கொந்தளிப்பு உருவாகும். மூளை உஷ்ணம் அடையும். உடல் தடதடக்கும். நரம்புகளுக்குள்ளான ரத்தக் கொப்பளிப்பைத் தோலுக்கு வெளியிலும் பார்க்க முடியும்.

ஊடகத் துறைக்கு இரண்டு பண்புகள் உண்டு. வெளியே இருப்பவர்களுக்கு அது கற்பனைகளை அள்ளிக்கொடுக்கும். உள்ளே வந்தடைபவர்களிடம் முதலில் அது அவர்களுடைய கற்பிதங்களை உடைக்கும்.

செய்தி ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் முன் செய்திகளை எப்படி அணுக வேண்டும் என்று ஊடக வகுப்பு எடுத்த ஒரு மூத்த சகாதான் என்னுடைய கற்பிதங்களை உடைத்தார். “ஒரு காவல் நிலையத்தின் உள்விவகாரங்களை நாம் வெளிக்கொண்டுவந்தாலே விஷயம் வெளியே போனதற்காக அங்குள்ள போலீஸ்காரர்களை மேலதிகாரிகள் கிழித்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு போர் வந்தால் பத்து நாட்களுக்கான ஆயுதங்கள்கூட ராணுவத்திடம் இல்லை என்பது மாதிரியான தகவல்கள் எப்படி இவ்வளவு சாதாரணமாக தேசிய ஊடகங்களை வந்தடையும்? உண்மையில் நம்முடைய ராணுவத்திடம் எவ்வளவு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்கின்றன, என்ன நிலையில் இருக்கின்றன என்பது ராணுவ ரகசியம் இல்லையா? ராணுவத் தலைமை, அரசு இரண்டுக்கும் இது உள்ளபடியே சங்கடம் தரும் செய்தி என்றால், இத்தகைய செய்திகள் ஏன் ஊடகங்களுக்குக் கசியவிடப்படுகின்றன?”

அவர் மேலும் பேசலானார். “இங்கே எல்லாவற்றிலும் லாபக் கணக்குகள் உண்டு. லாபி உண்டு. ராணுவத்திடம் உள்ள வாகனங்கள் பழசாகிவிட்டன என்று டெல்லியிலிருந்து வரும் ஒரு செய்தியை நீ படிக்கிறாய் என்றால், அந்தச் செய்திக்குப் பின் ஏதோ ஒரு வாகன நிறுவனம் இருக்கலாம், யாரோ சில அதிகாரிகள், யாரோ சில இடைத்தரகர்கள், யாரோ சில அரசியல்வாதிகள் இருக்கலாம் என்று சந்தேகி. செய்திகளில் சமூக அக்கறை மட்டும் அல்ல; வர்த்தக அக்கறைகளும் செயல்படலாம். ஆளுங்கட்சியில் மட்டும் இல்லை; எதிர்க்கட்சியிலும் அவர்கள் இருக்கலாம். செய்திகளைச் சந்தேகப்படு. நான் சொல்லும் டெல்லி பத்திரிகையாளர்களின் சொத்து விவரங்களை விசாரி. பத்திரிகையாளர்களாக மட்டும் இருந்துகொண்டு அவர்களால் எப்படி இத்தனை கோடி சொத்துகளைக் குவித்திருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடு. புரியும்!”

பிற்பாடு டெல்லியில் சுற்றிய நாட்களில் எல்லாம் புரிபட்டது. 2014 மக்களவைத் தேர்தல் தருணத்தில் இந்திய ஒன்றியம் முழுவதும் பயணித்து, பல்வேறு தரப்பினரும் இங்கு ஜனநாயகத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று ‘இந்தியாவின் வண்ணங்கள்’ கட்டுரைத் தொடர் எழுதினேன். அப்போது நாடறிந்த சில பத்திரிகையாளர்களின் பேட்டியையும் அதில் கொண்டுவர விரும்பினேன். டெல்லியில் நடக்கும் பேரங்கள், பேச்சுவார்த்தைகளில் பத்திரிகையாளர்களின் இடையீட்டை அதில் பதிவுசெய்யும் நோக்கம் எனக்கு இருந்தது. ஜனநாயகத்தில் இத்தகைய இடையீடுகள், லாபிகளுக்கான தேவையைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் அதைச் செய்ய முயன்றேன். ஏனென்றால், அமைச்சர்களாலேயே செய்து தர முடியாத காரியங்களைக்கூட அனாயாசமாகப் பிரதமர்களிடம் பேசி முடித்துத் தரும் பத்திரிகையாளர்களின் கதைகளை நான் கேள்விப்பட்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு பேட்டிக்கு யாரும் தயாராக இல்லை.

உலகெங்கும் இன்றுள்ள அரசதிகாரக் கோட்டைகளின் உள் சூட்சமப் பாதைகளை அறிந்தவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்: நவீன அரசில் ஊழல்களின் தாய் ராணுவப் பேரங்களிலேயே குடிகொண்டிருக்கிறாள். தேச நலன் என்ற இரு வார்த்தைகள் போதும், தேசியத்தின் பெயரால் ஒரு அரசு எதையும் செய்யலாம்; எவ்வளவு பேரையும் பலியிடலாம்.

ஏன் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியர்கள் போராட வேண்டும்?


கிரெம்ளின் அரண்மனையின் ஆந்திரயேவ் அரங்கில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளம் பழைய சிவப்புக் கொடியைச் சிலருக்கேனும் ஞாபகப்படுத்தியிருக்கலாம். மீண்டும் ரஷ்ய அதிபராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார் விளாடிமிர் புடின். வழக்கமாக ஜெர்மனி தயாரிப்பான ‘மெர்ஸிடிஸ்’ காரில் வலம்வருபவர், இந்த விழாவுக்கு உள்நாட்டுத் தயாரிப்பான ‘நமி - சொல்லர்ஸ்’ லிமோஸில் வந்தது அவர் திட்டமிட்ட விளைவை உண்டாக்கியது. “தேசத்தின் சுயாதீன வளர்ச்சியையும் தேசபக்தியையும் ஒருசேர வெளிப்படுத்தியிருக்கிறார் புடின்” என்று பெரும்பான்மை ஊடகங்கள் எழுதின. கார் ஒரு தேசியவாதக் குறியீடானது.

ஆசியா – ஐரோப்பா இரு கண்டங்களுக்கும் இடையே ஒரு தனி கண்டம் அளவுக்கு விரிந்து பரந்திருக்கும் ரஷ்யாவை சமகால அரசியல் சூழல் சார்ந்து ஆசியாவோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். பரப்பளவில் உலகிலேயே பெரிய நாடான ரஷ்யாவையும், மக்கள்தொகையில் உலகிலேயே பெரிய நாடான சீனாவையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் ஆசியாவில் ஜனநாயகத்தின் போக்கை யூகிக்க சில சாத்தியங்கள் தென்படுகின்றன.

புனிதங்கள் பொசுங்கட்டும்!


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கடுமையான விமர்சகன் நான். அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கு வழிவகுத்த மாநிலத்தில் பிறந்த மரபும் ஒரு காரணமாக இருக்கலாம். டெல்லியை மையப்படுத்தியிருக்கும் அதிகாரங்கள் சமூகநீதிக்கும் ராஜியநீதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உடைத்துப் பரவலாக்கப்பட வேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவன். ஆனால், சமத்துவத்துக்கான இந்த உணர்வானது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு அந்நியமானது அல்ல. சமத்துவத்துக்கான இந்தத் தேட்டமே அதன் ஆன்மா. பாரபட்சத்துக்கு எதிரான என்னுடைய பேச்சுக்கு அது சக்தி தருகிறது. ஆன்மாவுக்கேற்ப அதன் உடல் உறுப்புகளும் அமைய வேண்டும் என்று பேசுகையில், நான் கோரும் அற விழுமியங்களில் அரசியலமைப்புணர்வுக்கும் ஒரு பங்கிருப்பதை உணர்கிறேன்.

சட்டங்களுக்கு வெகுதூரத்தில் மக்கள் கூட்டத்தில் நிற்கும் எனக்கு, இந்நாட்களில் ஒரு சந்தேகம் எழுகிறது. சட்டத்தோடு ஒவ்வொரு நாளும் புழங்கக்கூடிய, நிபுணத்துவம் பெற்ற சட்ட வடிவமைப்பாளர்களான ஆட்சியாளர்களும், சட்டக் கண்காணிப்பாளர்களான நீதிபதிகளும் உண்மையிலேயே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் தரும் இந்த அரசியலமைப்புணர்வைப் பெற்றிருக்கிறார்களா? அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் எழுத்துகளாக உள்ள அதன் ஆன்மா இந்த எழுபதாண்டுகளில் எங்கேனும் இவர்கள் உடலுக்குள் புகுந்து ஒரு கலாச்சாரமாக ஆகியிருக்கிறதா அல்லது அவை தத்தமது தேவைக்கும் சௌகரியத்துக்கும் ஏற்ப அணிந்துகொண்டு தூக்கிப்போடும் உடைகள்போல வெறும் எழுத்துகளாகவே நிற்கின்றனவா? ஏனென்றால், விழுமியங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும்போதுதான் அவை தார்மிகத்தின் ஒரு அங்கமாகவும் வெளிப்படுகின்றன. அரசியலமைப்புணர்வானது சட்டப் புத்தகங்களில் உள்ள எழுத்துகளாலேயே வந்துவிடுவதில்லை. ஒரு சமூகம் தன் நடத்தையின் மூலம் அந்த எழுத்துகளுக்குக் கொடுக்கும் அர்த்தமே அதன் ஆதாரம்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பதவிநீக்க நடவடிக்கை கோரும் எதிர்க்கட்சிகளின் முன்மொழிவை நம்முடைய அமைப்பு எதிர்கொள்ளும் முறை நிலைக்குலைய வைக்கிறது. ஆட்சிமன்றமோ, நீதிமன்றமோ; எந்த ஒரு ஜனநாயக அமைப்பின் உயிரும் மக்களுக்கு அதன் மீதிருக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. அதுவும் ஒரு சாமானியனின் நம்பிக்கையைக் காட்டிலும் நீதித் துறை இழக்கப்போகும் சொத்து எதுவுமில்லை.

விவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது?


பள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம். கவிஞன். நல்ல வாசகன். அன்றைக்கு எழுதிக்கொண்டிருந்த எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவனே முதன்மையானவன். எங்கள் குழுவில் எல்லோருமே ஆங்கில இலக்கியம் படிக்க ஆசைப்பட்டோம். அவனும் அப்படி படித்திருக்க வேண்டும். சம்பா சாகுபடி வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. அந்த வருஷம் தண்ணீர் இல்லாமல் போக, முதல் அடி சம்பாவுக்கும் அடுத்த அடி கார்த்திகேயனுக்கும் விழுந்தது. இலக்கியம் படித்திருக்க வேண்டியவன் பன்தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டான். கொஞ்ச நாட்களில் கார்த்திகேயனின் அப்பா ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குப் போனார். கார்த்திகேயன் இப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கிறான். அப்பா உயிரோடு இல்லை.

ராதாநரசிம்மபுரத்தில் ஆசைத்தம்பி என்று ஒரு நண்பர் உண்டு. சிறு விவசாயி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். வசதியில்லாததால் படிக்க முடியாமல்போய்விட்ட ஏக்கம் அவருக்கு நிறைய உண்டு. இரண்டு பிள்ளைகளையும் எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும். அதுவே லட்சியம். விவசாயம் பொய்த்தபோது உள்ளூரிலேயே கூலி வேலைக்குச் சென்றார். அப்புறம் கடலை விற்றார். சென்னைக்கு கட்டிட வேலைக்குச் சென்றார். ஒன்றும் எடுபடாதபோது யாரோ சொன்னார்கள் என்று கடன் வாங்கி வளைகுடா நாடு ஒன்றில் பனை வெட்டச் சென்றார். கொத்தடிமை வாழ்க்கை. பதினாறு மணி நேர வேலைச் சூடு தாங்காமல் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களிலேயே ஊர் திரும்பியபோது கண் பார்வை மங்கிவிட்டிருந்தது. அந்த வருஷம்தான் அவருடைய மகள் பிளஸ் டு எழுதியிருந்தாள். பொறியியல் கனவைச் சுமந்தவள். நன்கு படித்தவள். ஏற்கெனவே உள்ள சுமைகளோடு அப்பாவின் கடனும் முடக்கமும் சேர, வீட்டு கஷ்டத்தைச் சுமக்க படிப்பை நிறுத்திவிட்டு வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். மகன் லாரி கிளீனர் ஆனான்.

ஒரு பருவம் ஆற்றில் தண்ணீர் வரவில்லை அல்லது வழக்கமான மழை இல்லை என்றால், நம் கிராமங்களில் அது ஏற்படுத்தும் தெறிப்புகள் சாமானியவை அல்ல. ஒரு குடும்பத்தின் பல்லாண்டு கால கனவுகள் அத்தனையையும் கணத்தில் பொசுக்கிவிடக் கூடியது ஒரு பருவத்தின் வெள்ளாமைப் பொய்ப்பு. ‘விவசாயிகள் தற்கொலை’ என்ற தலைப்பில் வெளியாகும் செய்திகள் கிராமங்களில் நடக்கும் உடல்ரீதியிலான மரணங்களை மட்டுமே பேசுகின்றன. கொடிய வலி மண்டலங்களான விவசாயக் குடும்பங்களிலிருந்து பார்த்தால்தான் இந்நாட்டின் அதிகார வர்க்கம் வருஷக்கணக்கில் விவசாயப் பிரச்சினைகளை இழுத்தடிப்பதும் விவசாயிகளை அலைக்கழிப்பதும் எவ்வளவு தீவிரமான சமூகக் குற்றம் என்பதை உணர முடியும். அதுவும் நதிநீர் விவகாரத்தை சாவதானமாக ஓர் அமைப்பு அணுகுவது, ரத்தம் ஆவியாகிக்கொண்டிருக்க மூச்சிரைப்போடு சிகிச்சைக்கு வந்திருப்பவனைப் பார்த்து, “போய் வரிசையில் நில்!” என்று சொல்லும் அதிகாரத்தடித்தனமே அன்றி வேறில்லை.

மோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு என்ன?


சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தைக் கடக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். எவ்வளவு பேருடைய உழைப்பும், தியாகமும் இன்று அர்த்தமற்ற ஒரு வெளிக்கூடாக உருமாறிவிட்டன! நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கட்டிடத்துக்கு, “கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்” என்று வழி கேட்டு எங்கிருந்தேனும் ஒரு கிராமத்து விவசாயி வந்தால், அந்தக் கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில் குழம்பிப்போவார். முழுக்க கார்ப்பரேட் அலுவலகப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம். வெளியே கட்சியின் பெயர்ப் பலகைகூடக் கிடையாது. மாறாக, சர்வதேச சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான ‘தாமஸ் குக்’ நிறுவனத்தின் பெயர்ப் பலகை இருக்கும். அந்த ஏழு மாடிக் கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கும் நிறுவனங்களில் அதுவும் ஒன்று. காந்திய அறிஞரும் நண்பருமான அண்ணாமலையிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தொடர்பில் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், அவர் கேட்டார், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டிடத்திற்கும் ரிலையன்ஸ் அலுவலகத்தின் கட்டிடத்திற்கும் என்ன வேறுபாட்டை வெளியே மக்கள் உணருவார்கள்?”

ஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா?


கல்லூரி மாணவர்களுடனான உரையாடல்களின்போதெல்லாம், நான் சில கேள்விகளைக் கேட்பது வழக்கம். அவற்றில் கட்டாயம் இடம்பெறும் ஒரு கேள்வி: “மொழிப் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” மாணவர்களின் பதில் பெரும்பாலும் இப்படியிருக்கும். “தமிழகத்தின் நலனுக்காக, இந்திக்கு எதிராக நாம் நடத்தியது!”

நான் சொல்வேன், “தம்பி, தங்கைகளே... அது இந்திக்கு எதிராக நடத்தியது அல்ல, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டம். தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டும் நடத்தப்பட்டது அல்ல, உண்மையில் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலத்துக்காகவும் நடத்தப்பட்டது, ஆங்கிலத்திற்காக நடத்தப்பட்டது! இந்நாட்டில் இன்றைக்கு ஆங்கிலம் நீடிக்கிறது என்றால் அது தமிழகம் நடத்திய போராட்டத்தினால்தான். அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் தீர்மானிக்கப்பட்டபோது, நாட்டினுடைய ஒரே அலுவல் மொழி இந்தி என்று முடிவெடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ரயில் நிலையத்திற்குப் போகிறோம். அங்கே பெயர்ப்பலகையில் இந்தி மட்டுமே இருக்கும். வங்கிகளுக்குப் போகிறோம். படிவங்களில் இந்தி மட்டுமே இருக்கும். நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச முடியும். அப்படியென்றால், நாட்டின் 60% மக்கள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? ஒரே நாளில் அவ்வளவு பேரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் ஏற்பாடு இல்லையா இது? இதை எதிர்த்து நம் முன்னோர் போராடினார்கள். இந்தி பேசாத மக்களின் நலனுக்காக, கூடுதல் அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்கள். போராட்டத்தின் விளைவாக, எண்ணற்றோரின் உயிர்த் தியாகத்தின் விளைவாக ஆங்கிலமும் அலுவல் மொழியானது. ஆனால், இன்றைக்கும் அந்த ஏற்பாடு ஊசலாடும் நிலையில்தான் இருக்கிறது!”

மண்டையில் இருக்கும் போலீஸைக் கீழே இறக்குவது எப்படி?


நண்பர் ஷங்கர் நேற்று ஒரு போலீஸ்காரரைச் சந்தித்திருக்கிறார். அவர் ரகசியப் பிரிவில் பணியாற்றுகிறவர். பிரதமர் மோடி அறிவித்த ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாகப் பேச்சு போயிருக்கிறது. “நடவடிக்கை சரி. கூடவே, உரிய முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால், மக்கள் இவ்வளவு அல்லல்பட வேண்டியதில்லை” என்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்துபோன கதையையும், நாட்டில் ஆகப் பெரும்பாலான மக்களுக்கு வேலை அளிக்கும் அமைப்புசாரா துறை முடங்கிக் கிடக்கும் கதையையும் பேசியிருக்கிறார் ஷங்கர். போலீஸ்காரர், “நாட்டுக்காக இவையெல்லாம் தாங்கிக்கொள்ளப்பட வேண்டிய கஷ்டங்கள்தான்” என்றிருக்கிறார். இப்படிச் சொன்னவர், ‘‘உங்களுக்குத் தெரியுமா? இந்த 15 நாட்களில், காவல் துறைக்கு ஒரு ஆள் கடத்தல் புகார்கூட வரவில்லை’’ என்றும் சொல்லியிருக்கிறார். பின்னர், ஷங்கர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து வள்ளலாரைப் பற்றிப் பேசியவர், தான் ஒரு சன்மார்க்கர் என்று சொல்லி, சன்மார்க்க நெறிகள் தொடர்பிலும் பேசியிருக்கிறார். இந்த முரணைப் பற்றி வெகுநேரம் ஷங்கர் பேசிக்கொண்டிருந்தார்.

வள்ளலார் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர். அவரைச் சரணடைய முற்படும் ஒரு மனம் எப்படி அரசின் முன்னேற்பாடின்மையால், கோடிக்கணக்கான மக்கள் வருமானம் முடங்கிக் கிடக்கும் துயரங்களையும் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் இறக்கும் குழந்தைகளின் மரணங்களையும்கூடப் போகிறபோக்கில் நியாயப்படுத்துகிறது! ஒருபுறம், அமைப்புக்காக சமூகத்தைக் கண்காணிக்கும் ரகசிய போலீஸ்காரர்; மறுபுறம் ஒவ்வொரு உயிரிலும் தன்னைக் காணும் சன்மார்க்கர். இருவரில் எவர் உண்மையானவர்?

ஒரு அமைப்புக்குள் இருக்கும் நம் ஒவ்வொருவரின் மண்டைக்குள்ளுமே இப்படி அமைப்பின் தவறுகளை நியாயப்படுத்தும் ஒரு ரகசிய போலீஸ்காரர் எப்போதும் உட்கார்ந்திருக்கிறார். நெஞ்சில் இருக்கும் சன்மார்க்கரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள மண்டையிலிருக்கும் போலீஸ்காரருடன் சதா போராட வேண்டியிருக்கிறது.

இந்திரா காந்தி பிறந்த நூற்றாண்டு நாளன்று ஒரு விவாதம். பெரியவர் பாலசுப்பிரமணியம் “இன்றைக்கு நெருக்கடிநிலை அமலாக்கப்பட்டால், இந்தியா அதை எப்படி எதிர்கொள்ளும்?” என்று கேட்டார். “ஆச்சரியப்பட ஏதுமிருக்காது. பெரும்பான்மை இந்தியா அதை வரவேற்கும். ஏனென்றால், அன்றைக் காட்டிலும் நாட்டில் இன்று போலீஸ்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது” என்றேன் நான்.

இன்னொரு நெருக்கடிநிலை ஏற்பட்டால் முன்பைக் காட்டிலும் அது மோசமாகக்கூட இருக்கலாம். ஐந்து காரணங்களைச் சொல்லலாம்.

கள்ளப் பொருளாதாரத்தை மோடியால் கட்டுப்படுத்த முடியுமா?


பிரதமர் மோடியிடமிருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வந்தவுடனேயே “நெருக்கடி நிலை அறிவிப்பாக இருக்குமோ?” என்றார் ராம்பிரசாத். இந்த நாட்களில் எதையும் சொல்வதற்கு இல்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவதற்குள் இந்தியா எதையும் சந்திக்கலாம்.


இந்தியாவின் வெற்றி!


ஒரு மாநிலத் தேர்தல் முடிவை ஒரு பிரதமரின் தோல்வியாக எழுத மனம் ஒப்ப மறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பே இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் கொண்டுவருவது முக்கியமானது. 2013 செப்டம்பர் 13-க்குப் பிறகான ஆறு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகளுக்கும் மோடியையே காரணமாகக் காட்டினார்கள் பாஜகவினர். கொஞ்சம் யோசித்தால், அப்போது தொடங்கி சமீபத்திய டெல்லி தேர்தல் வரை அவர்கள் மக்களிடம் உருவாக்கிய ஒரு மாயை ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆம், மோடி அலை! மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானும் சத்தீஸ்கரில் ரமன் சிங்கும் மூன்றாவது முறையாக ஜெயித்ததற்கும்கூடக் காரணம் மோடி அலை என்றால், இப்போது பிஹாரில் அடிக்கும் அனலிலிருந்து மட்டும் மோடியை எப்படி விடுவிக்க முடியும்?

மோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்!


பிரதமர் அலுவலக அதிகாரிகள் லண்டன் ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள். மோடியின் அடுத்த விஜயம் இங்கிலாந்து. பிரதமராக அமர்ந்த முதல் 17 மாதங்களில் 28 நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார் நரேந்திர மோடி. இடையிடையே மாநிலத் தேர்தல்கள் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், பிரதமரை எப்போதேனும் காணும் அரிய வாய்ப்பும் கிடைக்கக்கூடியது அல்ல. இப்படி ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் வெளியிலிருந்து எவ்வளவு முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார் என்கிற கணக்குகளை அப்புறம் பார்க்கலாம். ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம், தெற்காசியாவில் வலுவான ‘தாதா’ எனப் பல கோதாக்களோடு ராஜீய உறவுகளைக் கையாளத் தொடங்கியது மோடி அரசு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எவ்வளவு மோசமாக அடிவாங்க ஆரம்பித்திருக்கின்றன என்பதற்கு இப்போது அழுத்தமான புள்ளியாகியிருக்கிறது நேபாளம்.

ஹிட்லரும் ஃபோக்ஸ்வேகனும் அமெரிக்காவும் பின்னே மோடியும்!

அடால்ஃப் ஹிட்லரை ஞாபகப்படுத்தக் கூடியவை ‘ ஃபோக்ஸ்வேகன்’ கார்கள். ஜெர்மனில் ‘ஃபோக்ஸ்வேகன்’ என்றால், மக்களுடைய வாகனம் என்று அர்த்தம்.

சீமான்கள் மட்டுமே கார் வைத்திருந்த காலம். சிறிய ரக கார்களை உருவாக்கும் முயற்சிகள் 1920-களில் தொடங்கின என்றாலும், ஹிட்லரால் புதிய போக்கு உருவானது. அமெரிக்காவைப் போல ஜெர்மனியிலும் வீட்டுக்கு ஒரு கார் சூழலை உருவாக்க நினைத்தார் ஹிட்லர். இரு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதாக ஒரு கார் - அதுவும் 999 ரெய்க்ஸ் விலைக்குள். ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை + பொருளாதாரத்தில் உத்வேகத்தை உருவாக்குவதோடு, உள்நாட்டில் நாஜி கட்சியின் செல்வாக்கை மேலே கொண்டு செல்லவும் இத்திட்டம் உதவும் என்பது கணக்கு. 1937-ல் இப்படித்தான் ‘ஃபோக்ஸ்வேகன்’ உருவாக்கப்பட்டது.

உஷார், உஷார், உஷார்... அவர்கள் ஒதுங்கவில்லை; பதுங்குகிறார்கள்!


மேடையில் ஏறிய பின் எந்தத் தலைப்பு கொடுத்தாலும், விளாசுவதில் அண்ணா வல்லவர். அந்தக் கணத்தில் புத்தியில் எது வந்து விழுகிறதோ அது வாயில் பேச்சாக மாறும். கரைகள் தொட பாயும் வெள்ளம் அவர் பேச்சு. ஜீவாவும் அப்படி ஓர் அற்புதமான பேச்சுக் கலைஞர். அவர் பேச்சு ஒரு காட்டாறு. சாதுர்யப் பேச்சையே சரளமாக்கிக்கொண்டவர் கருணாநிதி. காமராஜர் பேச்சு கவர்ச்சிகரமானது அல்ல. ஆனால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும். போலிப்பூச்சுகளுக்கு அதில் இடமிருக்காது. இது எழுதிக்கொடுப்பதைப் பேசும் கிளித்தலைவர்களின் காலம். எல்லோருக்குமே தயாரிக்கப்பட்ட உரைகள்தான் மூலதனம் என்றாகிவிட்ட சூழலில், பேச்சில் உயிரைக் கொண்டுவர குரல் கலை தேவைப்படுகிறது. நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அதில் தேர்ந்தவர். அவர் செங்கோட்டையில் நின்று சுதந்திர தின உரையை வாசித்தால், கேட்பவர்கள் கைகள் முறுக்கேறுகின்றன. வெளிநாடுகளில் நின்று முதலீட்டு ஈர்ப்பு உரையை வாசித்தால், கேட்பவர்கள் கைகள் பெட்டியைத் தேடுகின்றன. சமீபத்திய ‘மன் கீ பாத்’ வானொலி உரையும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம்’ கொண்டுவரும் முடிவை அரசு ஏன் கைவிடுகிறது என்று இந்நாட்டு விவசாயிகளுக்காக அவர் வாசித்த துயர்மிகு உரையைக் கேட்டபோது, கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

குஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்!


யார் இந்த ஹர்திக் படேல்?

ஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டும் அகமதாபாத்தில் மட்டும் 50 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று 140 வாகனங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இதுவரை 9 உயிர்கள் கலவரங்களில் பறிபோயிருக்கின்றன. மேசானா, ராஜ்கோட், சூரத் என சௌராஷ்டிரம் வரை வன்முறைத் தீ தொடர்ந்து பரவுகிறது. கடி நகரில் சுகாதார அமைச்சர் நிதின் படேலின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேசானாவில் உள்துறை இணையமைச்சர் ரஜனிகாந்த் படேல், மோர்பியில் வேளாண் இணையமைச்சர் ஜெயந்தி கவாடியா, சமூகநீதித் துறை அமைச்சர் ரமண்லால் வோராவின் அலுவலகம் ஆகியவை எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன. மோர்பியில் மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன் கவுன்டரியாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வடோதராவில், பலிதானாவில் என்று ஆளும் பாஜகவின் பிரதிநிதிகளே அடிபடும் கதைகள் ஒவ்வொன்றாய் வந்துகொண்டேயிருக்கின்றன. முதல்வரும் பிரதமரும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல், விரைவு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை என மத்தியப் படைகளின் பல பிரிவுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

யார் இந்த ஹர்திக் படேல்?

சின்னச் சின்ன ஊர்களில்கூட அவர் கூட்டிய கூட்டங்களுக்கு 5,000 பேருக்குக் குறையாமல் கூடுகிறார்கள். வடோதராவில் 50,000 பேர், சூரத்தில் 2 லட்சம் பேர், அகமதாபாத்தில் 5 லட்சம் பேர் என அவர் கூட்டும் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் திரளும் மக்களின் எண்ணிக்கை மிரளவைக்கிறது. அவருடைய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’ அழைப்பு விடுத்த மாநிலம் தழுவிய ஒரு நாள் முழு அடைப்பு அன்று அகமதாபாத்தில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த குஜராத்தும் ஸ்தம்பித்திருக்கிறது.

யார் இந்த ஹர்திக் படேல்?

ஹர்திக் படேலின் கதையை எழுத ஒரு பெரும் ஊடகக் கூட்டம் அலைகிறது. அவரது சொந்தப் பகுதியான விரம்கம்மில் உள்ள தெரு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவருடன் ஓடி விளையாடிய நண்பர்கள், படித்த கல்லூரி என்று தொடங்கி இரு மாதங்களுக்கு முன் அவர் தொடங்கிய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’யின் விஸ்வரூபத்தின் பின்னுள்ள அரசியல்வாதிகள் யார் என்பது வரை அந்தக் கூட்டம் தேடியலைகிறது. ஹர்திக் படேலின் அரசியல் பின்னணியைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அலைச்சல் தேவைப்படலாம். ஹர்திக் படேலின் அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அலைச்சல் தேவையில்லை. வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டினால் போதும்.

யோக்கியர்கள் அரசு இது... சொம்பு பத்திரம்!


முதன்முதலில் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது காவல் துறை அதிகாரிகளே கொஞ்சம் திகைத்துதான் போயிருக்கிறார்கள். அதுவரை சினிமாவில்கூட அவர்கள் இதையெல்லாம் பார்த்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் ரெட்டி சகோதரர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லை. “அவர்கள் பண்ணை வீடு மட்டும் எத்தனை ஏக்கர் தெரியுமா? 50 அறைகள் இருக்கின்றன தெரியுமா? குண்டு துளைக்காத பாதாள அறை தெரியுமா? மூன்று ஹெலிகாப்டர்கள் தெரியுமா? வீட்டைச் சுற்றி பாதுகாப்புக்கு மட்டும் 100 பேர் தெரியுமா? தங்க நாற்காலியின் விலை ரூ. 2.2 கோடி தெரியுமா?” என்ற பேச்சுகளையெல்லாம் அவர்களும் கேட்டவர்கள். ஆனால், காதால் கேட்பதும் கண்ணால் கேட்பதும் ஒன்றல்லவே? மலைத்துப்போனார்கள்!

சுமார் ரூ.50,000 கோடிகளுக்கு அதிபதிகளாகச் சொல்லப்படும் ரெட்டி சகோதரர்களுக்கு எங்கிருந்து வந்தது அந்தப் பணம்? கர்நாடகத்தில் உள்ள குழந்தைகள்கூடச் சொல்லும், “பெல்லாரியின் இரும்புச் சுரங்கங்கள் சூறையாடப்பட்டதிலிருந்து வந்தது.”

நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வகையில் நடந்த சுரண்டல் அது. பெல்லாரியின் சுரங்கங்களுக்கு இடையில் தடை விதிக்கப்பட்டபோது, சுரங்க லாபி ஆட்கள் எழுதினார்கள், “ஐயோ, 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டார்கள், 65,000 டிரக் உரிமையாளர்கள் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள், தடை விதிப்பவர்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்களா?” ஆமாம். இயற்கை அவ்வளவு கொடூரமாகச் சூறையாடப்பட்டது, எல்லோரும் பார்த்திருக்க. ஆனால், அன்றைக்கு ரெட்டி சகோதரர்கள் மீது கை வைக்கும் துணிச்சல் யாருக்கும் கிடையாது. ஏனென்றால், அவர்கள் கையில் பண அதிகாரம் மட்டும் அல்ல; அரசியல் அதிகாரமும் இருந்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக பாஜக கர்நாடகத்தில் ‘இந்து ராஜ்ஜியம்’ அமைப்பதற்கான ‘ஆபரேஷன் தாமரை’யை வெற்றிகரமாக நடத்தியவர்கள் அவர்கள்.

மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!


துவும் ஒரு சாதனைக் கதைதான். மோடியின் குஜராத்தில், எல்லையோர சிறு நகரமான தாரட்டிலிருந்து அகமதாபாத் நோக்கி பிழைப்புக்காகக் குடிபெயர்ந்த ஒரு ஜவுளி வியாபாரக் குடும்பத்தின் கதை. ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாமானியனின் கதை. மோடியின் தோழர் கௌதம் அதானியின் கதை.

சர்வ பலமிக்க எதிராளி!



சீனத் தத்துவ ஞானியான லாவோ ட்சு போர்கள், போட்டிகளை ஆதரிப்பவர் அல்ல. ஆயினும், போர்கள், போட்டிகளில் நாட்டமுள்ளவர்களுக்கு - முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு - அவருடைய புகழ் மிக்க இந்தக் கூற்றுக்கு இணையான அடிப்படைப் பாடம் இல்லை: “எதிராளியைக் குறைத்து மதிப்பிடுவதுபோலப் பேராபத்து எதுவும் கிடையாது.”

நரேந்திர மோடி யுகத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் இந்தப் பேராபத்தை எதிர்கொள்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கட்சியைத் தன்வசப்படுத்தி, தேர்தல் களத்துக்கு முன்வந்து களத்தையே அவர் தனதாக்கிக்கொண்டபோதும் சரி; ஓராண்டுக்கு முன் பொதுத் தேர்தலில் அவர் பெற்ற பிரம்மாண்ட வெற்றியின்போதும் சரி; அவருடைய ஓராண்டு ஆட்சிக்குப் பின் அவருடைய செயல்பாடுகளை மதிப்பிடும் இன்றைய சூழலிலும் சரி... மோடியின் எதிரிகள் இன்னும் அவரைச் சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

தொடங்கியது மோடி vs மோடி ஆட்டம்


டெல்லியிலிருந்து ரயில் கிளம்பிவிட்டது.

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட டெல்லி தேர்தல் முடிவு தொடர்பாக பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மன்மோகன் சிங் மௌனம் காக்க, ப.சிதம்பரம் உதிர்க்கும் அதே வார்த்தைகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மறுஒலிபரப்பாகின்றன. அரசின் வியூகவாதியும் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, “டெல்லி தேர்தல் முடிவுகள் அரசின் ‘பொருளாதாரச் சீர்திருத்த’ வேகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது” என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, அரசு பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை என்பது அவர் சொல்லும் செய்தி. வெளியே இப்படி வீறாப்பாகப் பேசிக்கொள்வதில் சிக்கல் இல்லை. உள்ளுக்குள்ளும் அப்படியொரு நினைப்பிருந்தால் அது பெரும் ஆபத்து. டெல்லி முடிவு அரசுக்குத் தெளிவாக சில சமிக்ஞைகளை அனுப்புகிறது.

அர்விந்த் வெற்றியை எது முக்கியமானதாக்குகிறது?



டகங்களுக்குக் எதாவது கிறுக்குப் பிடித்துவிட்டதா என்று கேட்டார் நண்பர் ஒருவர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஒரு குட்டித் தேர்தல். இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், டெல்லி வாக்காளர்களின் விகிதம் 1.5%-க்கும் குறைவு. அதுவும் இது சட்டப்பேரவைக்கான தேர்தல். இந்த வெற்றி - தோல்விகளை எப்படி தேசிய அளவில் ஒப்பிட முடியும், பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் பின்னடைவாகக் கருத முடியும் என்பது அவருடைய வாதம்.

ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது, டெல்லியின் வாக்குப் பங்களிப்பு சொற்பம் என்பது கிடக்கட்டும். டெல்லியின் பெரும்பான்மை அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்கின்றன. அதிகாரத்துக்கு மிக முக்கியமானது நிலம். ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சின்ன பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால்கூட, அதற்கான நிலத்துக்கு டெல்லி மாநில அரசு, மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டெல்லியைப் பொறுத்தவரை நிலம் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அடுத்து, நிதி. இதற்கும் மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். அப்புறம், சட்டம் - ஒழுங்கு. டெல்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரத்துக்கு உட்பட்டது. அர்விந்த் கேஜ்ரிவாலே முன்னர் ஒருமுறை சொன்னதுபோல, “டெல்லி முதல்வர் பதவி என்பது அதிகாரம் இல்லாத அரியணைதான்.”

கேள்வி என்னவென்றால், இவ்வளவு சாதாரணமான ஒரு பதவிக்கான தேர்தலை வசமாக்க பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஏன் இவ்வளவு துடித்தார்கள் அல்லது ஏன் டெல்லி தேர்தல் அவர்களுக்கு அத்தனை முக்கியமானதாக இருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் அர்விந்த் கேஜ்ரிவாலின் டெல்லி வெற்றியின் முக்கியத்துவம் இருக்கிறது.

இந்தியாவில் உருவாக்கி விற்கப்போகிறோமா, இந்தியாவை அறுத்து விற்கப்போகிறோமா?

கோஷங்களை உருவாக்குதலில் உள்ள பெரிய அனுகூலம், கோஷங்கள் அவற்றுக்குப் பின்னுள்ள உண்மைகளை முழுக்க மறைத்து, ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிவிடும் என்பதுதான்.

‘இந்தியாவில் உருவாக்குவோம்!’
- நல்ல கோஷம். எதை உருவாக்கப்போகிறோம்? யாருக்காக உருவாக்கப்போகிறோம்?

உடல் முழுவதும் இயந்திரப் பாகங்கள் சுழலும் சிங்கம் படத்தை ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (மேக் இன் இந்தியா) கொள்கையின் சின்னமாக அறிமுகப்படுத்திய மோடி, “இது சிங்கம் எடுத்துவைக்கும் முதல் அடி” என்றார். அதாவது, இந்தியா எனும் சிங்கம் இப்போது தான் தன்னைச் சிங்கமாக உணர்ந்து, முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது என்பது அவர் சொல்ல விரும்பியது. உண்மையில், எதற்காக மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று இந்தியப் பெருநிறுவனங்களின் உலகம் அவரை முன்நிறுத்தியதோ, அந்த நோக்கத்தை நோக்கி மோடி எடுத்துவைத்திருக்கும் முதல் அடி இது!

சிவப்பு நாடாவும் சிவப்புக் கம்பளமும்

முன்னதாக, ஜப்பான் பயணத்தின்போதே இந்தியாவின் புதிய தொழில் கொள்கை எப்படி இருக்கும் என்பதை மோடியின் பேச்சு உணர்த்தியது. “உங்கள் அதிர்ஷ்டத்தை இந்தியாவில் வந்து சோதித்துப் பாருங்கள். இந்தியாவில் குறைந்த செலவில், உற்பத்தியில் பல அதிசயங்கள் நிகழும். எந்தத் தொழிலதிபருமே குறைந்த செலவிலான உற்பத்தியைத்தானே விரும்புவார்? இந்தியாவில் ஏராளமான உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்; வாருங்கள்!” என்று ஜப்பான் தொழிலதிபர்கள் இடையே அவர் தொடங்கிய உரையே சுரண்டலுக்கான அப்பட்டமான அழைப்பு.

சட்டை 50 ரூபாய் என்றால், கூலி எவ்வளவு?
நம்முடைய மக்கள்தொகையையும் வறுமைச் சூழலையும் பயன்படுத்திக்கொண்டு 50 ரூபாய் விலையில் ஒரு சட்டையை நாம் உலகத்துக்கு உருவாக்கிக்கொடுத்துவிடலாம். அப்படி 50 ரூபாய் அடக்கத்தில் ஒரு சட்டையை உருவாக்கு பவருக்கு அந்தச் சட்டையிலிருந்து என்ன வருமானம் கிடைக்கும்? அவருக்கு மூலப்பொருட்களை இத்தனை மலிவாகக் கொடுப்பவருக்கு என்ன கிடைக்கும்? ஒரு நாள் கண்ணியமான வருமானத்தைப் பெற இவர்களெல்லாம் எத்தனை நேரம் உழைக்க வேண்டும்? ஒரு நுகர்வோரோ வியாபாரியோ இதை யோசிக்காமல் போகலாம். அறவுணர்வும் தொலைநோக்கும் கொண்ட ஒரு பிரதமர் நிச்சயம் யோசிக்க வேண்டும்.

முதலில் அவர் களம் இறங்கட்டும்... கொஞ்சம் ஒப்பாரியை நிறுத்துங்களேன்!


னநாயகம் என்பது நம்முடைய எண்ணங்களுக்கு ஏனையோர் இடம் அளிப்பது மட்டும் அல்ல; ஏனையோரின் எண்ணங்களுக்கு நாம் இடம் அளிப்பதும்தான். தேர்தலுக்கு முன் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விருப்பங்களை முன்வைக்கலாம். தேர்தல் நாள் என்பது அவற்றின் மீதான தீர்ப்பு நாள். ஓட்டுகள் வெறுமனே மக்களுடைய விருப்பங்கள் மட்டும் அல்ல; இந்த நாட்டின் மீது, இந்த ஜனநாயகத்தின் மீது, இந்த அரசியல் மீது, கடந்த கால அரசாங்கத்தின் மீது, எதிர்கால அரசாங்கத்தின் மீது, நம்முடைய வாதப்பிரதிவாதங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுகள்.

தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியைப் பற்றி, அவர் முன்னிறுத்திய குஜராத் முன்மாதிரியைப் பற்றி, அவருடைய கடந்த கால வன்முறை வரலாற்றைப் பற்றி, அவரை முன்னிறுத்திய பெருநிறுவனங்களைப் பற்றி எல்லோருமே பேசினோம், எழுதினோம், விவாதித்தோம். மக்கள் இப்போது தீர்ப்பு அளித்திருக்கிறார்கள் (நாம் பேசி, எழுதி, விவாதித்தவற்றின் மீதும்தான்). வடக்கே ஜம்முவிலிருந்து தெற்கே குமரி வரை கிழக்கே அருணாசலப்பிரதேசத்திலிருந்து மேற்கே கட்ச் வரை இது தெளிவான தீர்ப்பு. காங்கிரஸ் வரக் கூடாது என்று மட்டும் மக்கள் நினைக்கவில்லை; பா.ஜ.க-தான் வர வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார்கள். மோடிதான் வர வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்சியின், வேட்பாளரின் வெற்றி, தோல்விக்குப் பின்னணியிலும் மக்களின் வலுவான செய்திகள் அடங்கியிருக்கின்றன. நமக்கு உண்மையாகவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றால், மக்களின் அந்தச் செய்திகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் நேர்மையான, ஆக்கபூர்வமான வழிமுறையாக இருக்க முடியும். ஆனால், எங்காவது சுய விமர்சனக் குரல்கள் கேட்கின்றனவா என்று சுற்றிலும் நிரம்பி வழியும் குரல்களைக் கேளுங்கள்...  ஒரே புலம்பலும் வசவுகளும் ஒப்பாரியும் ஊளைச்சத்தமும்தான் சூழ்ந்திருக்கின்றன.