நண்பர் ஷங்கர் நேற்று ஒரு போலீஸ்காரரைச் சந்தித்திருக்கிறார். அவர் ரகசியப் பிரிவில் பணியாற்றுகிறவர். பிரதமர் மோடி அறிவித்த ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாகப் பேச்சு போயிருக்கிறது. “நடவடிக்கை சரி. கூடவே, உரிய முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால், மக்கள் இவ்வளவு அல்லல்பட வேண்டியதில்லை” என்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்துபோன கதையையும், நாட்டில் ஆகப் பெரும்பாலான மக்களுக்கு வேலை அளிக்கும் அமைப்புசாரா துறை முடங்கிக் கிடக்கும் கதையையும் பேசியிருக்கிறார் ஷங்கர். போலீஸ்காரர், “நாட்டுக்காக இவையெல்லாம் தாங்கிக்கொள்ளப்பட வேண்டிய கஷ்டங்கள்தான்” என்றிருக்கிறார். இப்படிச் சொன்னவர், ‘‘உங்களுக்குத் தெரியுமா? இந்த 15 நாட்களில், காவல் துறைக்கு ஒரு ஆள் கடத்தல் புகார்கூட வரவில்லை’’ என்றும் சொல்லியிருக்கிறார். பின்னர், ஷங்கர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து வள்ளலாரைப் பற்றிப் பேசியவர், தான் ஒரு சன்மார்க்கர் என்று சொல்லி, சன்மார்க்க நெறிகள் தொடர்பிலும் பேசியிருக்கிறார். இந்த முரணைப் பற்றி வெகுநேரம் ஷங்கர் பேசிக்கொண்டிருந்தார்.
வள்ளலார் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர். அவரைச் சரணடைய முற்படும் ஒரு மனம் எப்படி அரசின் முன்னேற்பாடின்மையால், கோடிக்கணக்கான மக்கள் வருமானம் முடங்கிக் கிடக்கும் துயரங்களையும் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் இறக்கும் குழந்தைகளின் மரணங்களையும்கூடப் போகிறபோக்கில் நியாயப்படுத்துகிறது! ஒருபுறம், அமைப்புக்காக சமூகத்தைக் கண்காணிக்கும் ரகசிய போலீஸ்காரர்; மறுபுறம் ஒவ்வொரு உயிரிலும் தன்னைக் காணும் சன்மார்க்கர். இருவரில் எவர் உண்மையானவர்?
ஒரு அமைப்புக்குள் இருக்கும் நம் ஒவ்வொருவரின் மண்டைக்குள்ளுமே இப்படி அமைப்பின் தவறுகளை நியாயப்படுத்தும் ஒரு ரகசிய போலீஸ்காரர் எப்போதும் உட்கார்ந்திருக்கிறார். நெஞ்சில் இருக்கும் சன்மார்க்கரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள மண்டையிலிருக்கும் போலீஸ்காரருடன் சதா போராட வேண்டியிருக்கிறது.
இந்திரா காந்தி பிறந்த நூற்றாண்டு நாளன்று ஒரு விவாதம். பெரியவர் பாலசுப்பிரமணியம் “இன்றைக்கு நெருக்கடிநிலை அமலாக்கப்பட்டால், இந்தியா அதை எப்படி எதிர்கொள்ளும்?” என்று கேட்டார். “ஆச்சரியப்பட ஏதுமிருக்காது. பெரும்பான்மை இந்தியா அதை வரவேற்கும். ஏனென்றால், அன்றைக் காட்டிலும் நாட்டில் இன்று போலீஸ்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது” என்றேன் நான்.
இன்னொரு நெருக்கடிநிலை ஏற்பட்டால் முன்பைக் காட்டிலும் அது மோசமாகக்கூட இருக்கலாம். ஐந்து காரணங்களைச் சொல்லலாம்.