அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!
உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் உலகத்தை ஒட்டி நாமும் வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம். ஊரடங்குக்குப் பிந்தைய இந்த ஒரு மாதம் நமக்குப் பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. கிருமி எப்படியெல்லாம் பரவுகிறது, அறிகுறிகள் என்னவாகவெல்லாம் விரிவடைகின்றன, தொற்று எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது; இவை எல்லாமே ஒவ்வொரு நாளும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன அல்லது நாளாக நாளாகத்தான் நாம் இந்தக் கிருமியையும் அதன் மொத்த விளைவுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.
சீனா இந்தக் கிருமியை முதலில் எதிர்கொண்டது; ஆகையால், அடுத்ததாக ஐரோப்பா, அமெரிக்கா, தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகள் என்று எல்லோருமே மூடுண்ட சீன அணுகுமுறையையே பின்பற்றலானோம்; முழு ஊரடங்குக்கு மாறினோம். சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இதைக் கடந்துவிடலாம் என்று எண்ணினோம். வெளிநாடுகளிலிருந்து கிருமித் தொற்றோடு வந்திருப்பவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதன் வாயிலாகவும், அவர்கள் வழி தொற்றுக்குள்ளாவோரைத் தடுப்பதன் வாயிலாகவும் கிருமியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பினோம். இது நம் கணக்குகளில் அடங்கிவிடும் விவகாரம் அல்ல என்பதையே மாறிவரும் சூழல் உணர்த்துகிறது. சில மாதங்கள் அல்ல; இந்தக் கிருமியிடமிருந்து முழுமையாக விடுபட சில ஆண்டுகள்கூட ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படியென்றால், என்ன செய்வது? ஆண்டுக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே இருப்பதா?
நாம் வியூகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. அதாவது, கிருமியிடமிருந்து வெற்றிகரமாகத் தப்பித்துக்கொள்வது எப்படி என்கிற வியூகத்திலிருந்து கிருமியை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்கிற வியூகத்துக்கு நாம் மாற வேண்டும். கிருமி நம்மைத் தொற்றினால், நம் குடும்பத்தினரைத் தொற்றினால் எப்படி அதை எதிர்கொண்டு கடந்து வருவது என்ற முன்னேற்பாட்டினூடாக புதியதோர் இயல்பு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது.