![]() |
திருச்சி பெரியார் மாளிகையில் பராமரிப்பின்றி கிடப்பில்
போடப்பட்டிருக்கும் பெரியார் பயன்படுத்திய வேன். (வலது) பெரியார் கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்'. |
திருச்சியின் மையப் பகுதியான புத்தூரிலுள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறது அந்த வேன். உண்மையில் அது ஒரு வரலாறு. தந்தை பெரியாருடைய வரலாற்றின் ஓர் அங்கம்.
அந்த நாள் 19.08.1973. தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரியாருக்காக வாங்கிய வேனை அவருக்கு வழங்க அவருடைய தொண்டர்கள் எடுத்த விழா அது. விழாவில், பெரியாரிடத்தில் தங்கத்திலான வேன் சாவியை அளித்தார் முதல்வர் மு. கருணாநிதி. பெரியார் வேனிலிருந்து இறங்காமலேயே உரையாற்ற ஏதுவாக படுக்கை, கழிப்பறை வசதிகள் அந்த வேனில் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல அந்த வேனுக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. பெரியார் 19.12.1973-ல் சென்னை தியாகராய நகரில் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியதும் உரையின் பாதியிலேயே வலியால் வாய்விட்டு அலறியதும் அதோடு மரணப் படுக்கைக்குச் சென்றதும் அந்த வேனிலிருந்துதான். வரலாறு. குப்பையாகக் கிடக்கிறது. அதே திருச்சியின் சுந்தர் நகர்ப் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்' (சர்வீஸ் என்றால், சோஷியல் சர்வீஸ் அல்ல; வாகனங்களுக்கான வாட்டர் சர்வீஸ்). நகரில் அதிகம் கல்லா கட்டும் நிலையங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.
பெரியாரின் சொத்துகள் இன்றைக்கு எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகின்றன; எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இரு சின்ன உதாரணங்கள் இவை.