உஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. நெருக்கடியான, நெரிசல் மிக்க கட்டிடங்கள். அனேகமாக ஒவ்வொரு கட்டிடத்தின் முகப்பையும் வெவ்வேறு வண்ணங்களிலான பத்துப் பதினைந்து பெயர்ப் பலகைகள் மூடியிருந்தன. சாலையின் இரண்டு ஓரங்களிலும் விளம்பரத் தட்டிகள். சாலைக்குக் குறுக்கே வாகனங்களைத் தொந்தரவுக்குள்ளாக்காத உயரத்துக்கு மேலே, அணி அணியாக விளம்பரப் பதாகைகள், தோரணங்கள். எல்லாம் நம்மைப் போட்டித் தேர்வுகளுக்கும், நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி எடுக்கக் கூப்பிடுபவை. முகர்ஜி நகரை மொத்தமாகவே பயிற்சி மையங்களின் சந்தை என்று சொல்லிவிடலாம்.
அரசுப் பணிகளுக்கு உள்ள பசியும் போட்டியும்தான் இங்குள்ள பயிற்சி மையங்களின் மூலதனம். மருத்துவம் - பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள், அரசுப் பணிகள், வங்கிப் பணிகள், மேலாண்மைப் பணிகள், இதரப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான மையங்கள் என்று பல வகைமைகள் இருந்தாலும், முகர்ஜி நகரின் பெரிய அடையாளம் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முன்தயாரிப்பு. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் அந்தச் சின்ன பகுதியில் படிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. முகர்ஜி நகரில் மட்டும் இயங்கும் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகம். கட்டிடங்களுக்குள் நுழைந்து பார்த்தபோது, மேல் தளங்களிலேயே விடுதிகளோடு ஒவ்வொன்றும் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டுகளைப் போல இருந்தன.
இந்த ஐந்தாண்டுகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள் உண்டாக்கியிருக்கும் அழுத்தத்தில் சண்டிகர், அலகாபாத், லக்னோ, மதுரா, பாட்னா, கயை, மும்பை, புனே, ஆமதாபாத், சூரத், கொல்கத்தா, அசன்சோல், புவனேஸ்வர், போபால், ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, திருவனந்தபுரம் என்று நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் முளைத்திருக்கின்றன. இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் பல வீதிகள் நெருக்கடியான பயிற்சி மையங்களால் நிறைந்திருக்கின்றன. இந்தியக் கல்வித் துறை எப்படி ஆட்சியாளர்களால் கல்விச் சந்தையாக உருமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு குறியீடுபோல இருக்கிறது ராஞ்சியிலுள்ள ஒரு ஐந்தடுக்குப் பெரும் கட்டிட வளாகத்தின் பெயர் - ‘எஜுகேஷன் மால்’. ராஞ்சியில் 2012-ல் வெறும் இருநூறு பயிற்சி மையங்களே இருந்தன; இன்றைக்குப் பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.