மோடிகள், பாகவத்துகள், கார்த்திகள் யுகத்தில் சாஸ்திரிகள்!


வாராணசியில், “இந்தியப் பிரதமர்களில் அரிதானவர்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தால் புகழப்பட்ட நாளில், மேடை பின்னணியில் படமாக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் ஆன்மா என்னவெல்லாம் நினைத்திருக்கும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்களைச் சுவீகரித்துக்கொண்டு புதிய வரலாற்றை உருவாக்கும் ஆர்எஸ்எஸ்/ பாஜக அரசின் செயல்திட்டத்தின் சமீபத்திய இலக்கு சாஸ்திரி. மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கையில் இப்படி 72 பெயர்களைக் கொண்ட பட்டியல் இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் முன்னோடிகளான வீர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாய, ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களைக் காட்டிலும் இந்துத்துவப் பரிவாரங்களோடு சம்பந்தமில்லாதவர்கள்/ காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். காங்கிரஸ் - பாஜக இரு முகாம்களுக்கும் அப்பாற்பட்ட அரவிந்தர், விவேகானந்தர், பாரதியார், தாகூர், அம்பேத்கர், பகத் சிங், தெரசா ஆகியோரின் பெயர்களும்கூடப் பட்டியலில் உண்டு. பிரதான நோக்கம், இந்திய மக்களிடம் காங்கிரஸுக்கு இன்றைக்கும் இருக்கும் அதன் ஆதார பலம் எதுவோ- அந்தச் சுதந்திரப் போராட்ட வரலாற்றை- நொறுக்கித்தள்ளுவது. நுட்பமான அரசியலின்படி, இனி தேசப்பிதா காந்தியும் இந்துத்துவ சித்தாந்தங்களின்  பிதாமகனான வீர சாவர்க்கரும் சரிசமமான இருக்கைகளில் உட்கார்ந்திருப்பார்கள். இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு ஆதரவாகவும், இந்துத்துவ ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடிய அபுல் கலாம் ஆசாத் இனி நினைவுகூரப்படுவார், அவருடைய கல்விச் சேவைக்காக மட்டும். நேரடியான உதாரணம், வழக்கமாக இந்தியப் பிரதமர்கள் எப்போதும் அக்டோபர் 30 அன்று இந்திரா காந்தியை நினைவுகூர்வார்கள். இந்த முறை மோடி, அன்றைய தினத்தன்று படேலின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தார். காங்கிரஸின் கை விரலையே எடுத்து, அதன் கண்ணையே குத்திக் குருடாக்கும் உத்தி இது.

ஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடும்


நூறு வருடங்களுக்கு முன்பு 1915-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியா திரும்பியபோது அவருக்கு வயது 45. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு வயது 29. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்கிருதக் கல்லூரியில், 1885 டிசம்பர் 28 அன்று 72 பேருடன் கூடிய அகில இந்திய காங்கிரஸின் முதல் மாநாட்டுப் புகைப்படம் காந்திக்கு முந்தைய காங்கிரஸின் வரலாற்று முகத்தை ஒரு நொடியில் சொல்லிவிடக் கூடியது. பிரிட்டிஷ் இந்தியாவின் படித்த, உயர்குடி இந்திய வர்க்கத்தின் அதிகாரக் கனவுக்கான மேடை அது.

ரொம்பக் காலம் அது அப்படித்தான் இருந்தது. இந்தியாவின் மேற்கில் கொஞ்சம், கிழக்கில் கொஞ்சம், தெற்கில் கொஞ்சம் என்று பம்பாயிலும் கல்கத்தாவிலும் சென்னையிலும் நகரங்களில் ஆங்கிலம் பேசும் உயர்குடி வர்க்கத்தின் இயக்கமாகவே காங்கிரஸ் வளர்ந்தது. கூடவே, அன்றைய இந்தியாவின் இந்துத்துவ – ஆதிக்க சாதிய சக்திகளுக்கும் அதுவே மேடையாக இருந்தது. கோபால கிருஷ்ண கோகலே போன்றவர்கள் தலை யெடுக்க ஆரம்பித்தபோது, விடுதலை இயக்கத்தைப் பற்றி காங்கிரஸ் வலுவாகப் பேச ஆரம்பித்தது. காந்தி – ஜின்னா இருவருக்குமே ஆதர்சமாக விளங்கிய கோகலே காங்கிரஸில் நிறைய மாற்றங்களுக்காகக் கனவு கண்டவர்; குறிப்பாக, 1905-ல் அவர் காங்கிரஸ் தலைவரான பிறகு. ஆனாலும், காங்கிரஸை ஒரு சின்ன மேட்டுக்குடி கும்பலிட மிருந்து மீட்டு, மாபெரும் மக்கள் இயக்கமாக உருமாற்ற காந்தி வர வேண்டியிருந்தது.

காந்தியும் கோகலேவும்
கோகலேவுக்கும் காந்திக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு இருந்தது. பரஸ்பர ஆளுமையும் மதிப்பீடுகளும் விழுமியங்களும் உருவாக்கிய மரியாதைக்குரிய உறவு அது. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் போராட்டத்தை இங்குள்ள இந்தியச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவர காந்தி முயன்றபோது, கோகலே அதற்குப் பெரும் ஆதரவாக இருந்தார். அந்நாட்களில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் வந்த காந்தி, கோகலேவுடன் தங்கினார். இந்தியச் சமூகவியலில் கோகலேவுக்கு இருந்த புரிதலாலும் அரசியலில் மிதமான நிலைப்பாட்டுடன் எல்லோரையும் அரவணைக்கும் ஆற்றலாலும் அவர் வசம் ஈர்க்கப்பட்டார். பின்னர், தென்னாப்பிரிக்கா திரும்பிய பின், அங்கு கோகலேவை காந்தி அழைத்திருந்தார். அங்குள்ள ஆட்சியாளர்களிடம் இந்தியத் தரப்பில் கோகலேவைப் பேச வைத்தார். கோகலே – காந்தி உறவில் இந்த இரு பயணங்களும் முக்கியமான அத்தியாயங்கள் என்று சொல்ல வேண்டும். தென்னாப்பிரிக்காவில் 21 வருஷங்கள் இருந்த காந்தியிடம் இருந்த அசாத்தியமான போராளியை கோகலே சரியாக அடையாளம் கண்டார். காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, 1912-ல் பம்பாயில் நடந்த ஒரு கூட்டத்தில் கோகலே பேசுகிறார்: ‘‘காந்தியிடம் அற்புதமான ஒரு ஆன்மிக சக்தி இருக்கிறது. அதனால், அவர் தன்னைச் சுற்றியுள்ள சாதாரணர்களையும் பெரும் வீரர்களாகவும் தியாகிகளாகவும் மாற்றிவிடுகிறார்.’’

காந்தி இந்தியா திரும்பும் வரலாற்று விதி ஆட்டத்தில் கோகலே முக்கியக் கண்ணியாக இருந்தார். காந்தியின் தென்னாப்பிரிக்கத் தேவை முடிந்துவிட்டதையும் இந்தியாவுக்கு அவர் திரும்ப வேண்டியதையும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். காந்தியை விட மூன்று வயது மூத்தவர் கோகலே. காந்தியோ தன் வழிகாட்டியாகவே அவரை மதித்தார். கோகலேவின் வார்த்தைக்கு காந்தியிடம் அவ்வளவு செல்வாக்கு இருந்தது. ‘‘இந்தியப் பொதுவாழ்க்கை எனும் கொந்தளிப்பான கடலில் பயணிக்க சரியான மாலுமி ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். கோகலேவை அத்தகைய மாலுமியாகக் கொண்டுவந்ததோடு, அவர் இருக்கப் பயமில்லை எனும் துணிவோடும் இருந்தேன்’’ என்று ‘சத்திய சோதனை’யில் குறிப்பிடுகிறார் காந்தி.

மாலுமி காட்டிய மகத்தான வழி
அப்படிப்பட்ட ‘மாலுமி’ கோகலே, இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள காந்திக்குச் சொன்ன வழி இது: ‘‘காதைத் திறந்துகொண்டு, வாயை மூடிக்கொண்டு இந்தியாவை ஒரு வருஷம் சுற்றுங்கள்!’’

தொடங்கியது மோடி vs மோடி ஆட்டம்


டெல்லியிலிருந்து ரயில் கிளம்பிவிட்டது.

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட டெல்லி தேர்தல் முடிவு தொடர்பாக பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மன்மோகன் சிங் மௌனம் காக்க, ப.சிதம்பரம் உதிர்க்கும் அதே வார்த்தைகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மறுஒலிபரப்பாகின்றன. அரசின் வியூகவாதியும் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, “டெல்லி தேர்தல் முடிவுகள் அரசின் ‘பொருளாதாரச் சீர்திருத்த’ வேகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது” என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, அரசு பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை என்பது அவர் சொல்லும் செய்தி. வெளியே இப்படி வீறாப்பாகப் பேசிக்கொள்வதில் சிக்கல் இல்லை. உள்ளுக்குள்ளும் அப்படியொரு நினைப்பிருந்தால் அது பெரும் ஆபத்து. டெல்லி முடிவு அரசுக்குத் தெளிவாக சில சமிக்ஞைகளை அனுப்புகிறது.

அர்விந்த் வெற்றியை எது முக்கியமானதாக்குகிறது?



டகங்களுக்குக் எதாவது கிறுக்குப் பிடித்துவிட்டதா என்று கேட்டார் நண்பர் ஒருவர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஒரு குட்டித் தேர்தல். இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், டெல்லி வாக்காளர்களின் விகிதம் 1.5%-க்கும் குறைவு. அதுவும் இது சட்டப்பேரவைக்கான தேர்தல். இந்த வெற்றி - தோல்விகளை எப்படி தேசிய அளவில் ஒப்பிட முடியும், பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் பின்னடைவாகக் கருத முடியும் என்பது அவருடைய வாதம்.

ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது, டெல்லியின் வாக்குப் பங்களிப்பு சொற்பம் என்பது கிடக்கட்டும். டெல்லியின் பெரும்பான்மை அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்கின்றன. அதிகாரத்துக்கு மிக முக்கியமானது நிலம். ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சின்ன பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால்கூட, அதற்கான நிலத்துக்கு டெல்லி மாநில அரசு, மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டெல்லியைப் பொறுத்தவரை நிலம் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அடுத்து, நிதி. இதற்கும் மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். அப்புறம், சட்டம் - ஒழுங்கு. டெல்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரத்துக்கு உட்பட்டது. அர்விந்த் கேஜ்ரிவாலே முன்னர் ஒருமுறை சொன்னதுபோல, “டெல்லி முதல்வர் பதவி என்பது அதிகாரம் இல்லாத அரியணைதான்.”

கேள்வி என்னவென்றால், இவ்வளவு சாதாரணமான ஒரு பதவிக்கான தேர்தலை வசமாக்க பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஏன் இவ்வளவு துடித்தார்கள் அல்லது ஏன் டெல்லி தேர்தல் அவர்களுக்கு அத்தனை முக்கியமானதாக இருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் அர்விந்த் கேஜ்ரிவாலின் டெல்லி வெற்றியின் முக்கியத்துவம் இருக்கிறது.

எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும் கௌதம்!


லகில் உள்ள எல்லாத் தீமைகளையும் எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமாகவே சாதித்து விடலாம் என்று நம்புவதாகத் தோன்றுகிறது.

தமிழ் சினிமாவின் போலீஸ் பட அபத்த வரலாறு தெரியாததா, இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று உதறிவிட்டுப் போக முடியவில்லை. இயக்குநர் ஹரி பாணி படங்களாக இருந்தால், அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவருடைய நாயகன்கள் தங்களைப் பற்றிய அறிவிப்புகளைத் தாங்களே அறிவித்துவிடுகிறவர்கள்: “நான் போலீஸ் இல்லடா; பொறுக்கி.”

மோடியின் தையல்காரர்!


விபின் சௌஹானும் ஜிதேந்திர சௌஹானும் தம்பி அண்ணன்கள். தங்களுடைய தையல் கடைக்கு ‘ஜேட் ப்ளூ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஹமதாபாத் ஆட்டோக்காரர்களிடம் கேட்டால், ‘மோடியின் தையல் கடை’ என்று சொல்லி வழிகாட்டுவார்கள் அல்லது கொண்டுபோய்விடுவார்கள். அஹமதாபாதில் மட்டும் அல்ல. குஜராத்துக்கு வெளியே நாக்பூர், உதய்பூர், ஜெய்பூர், புணே, ஹைதராபாத் என்று எங்கெல்லாம் ‘ஜேட் ப்ளூ’ கடைகள் இருக்கின்றனவோ எல்லாமே ‘மோடியின் தையல் கடைகள்’தாம். ‘ஜேட் ப்ளூ’ கடைக்காரர்களே அப்படிச் சொல்லித்தான் விளம்பரப்படுத்துகிறார்கள் என்று உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள். மோடியின் நண்பர் தொழிலதிபர் அதானியும் ‘ஜேட் ப்ளூ’வின் வாடிக்கையாளர்தான்.

அபூர்வமான எழுத்து: அ.முத்துலிங்கம்

பத்திரிகை அலுவலகம் பரபரப்பாக இயங்கியது. செய்தியாளர் தன் மேசையில் ஒரு தாளில் தலைப்பை எழுதிவைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். அதில் இருந்த வாசகம் இதுதான்: ‘புகைக்கூண்டில் சிக்கிய மாடு’.
ஆசிரியர் கேட்டார்: ”இது என்ன தலைப்பு?”
செய்தியாளர் சொன்னார்: “இந்தத் தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறது. எதற்கும் எழுதிவைத்துவிட்டு காத்திருக்கிறேன். ஒருநாள் உண்மையாக இப்படி நேரும்போது இந்த தலைப்பை உபயோகிக்கலாம் அல்லவா?”

இப்படியான சூழலில்தான் பத்திரிகை உலகம் இயங்குகிறது. முன்கூட்டியே எதையும் யோசித்துவைக்க வேண்டும். எல்லாமே அவசரம்தான். உடனுக்குடன் செய்தி தேவை. அடுத்த பத்திரிகை ஒன்றை எழுதுவதற்கு முன்னர் எழுதிவிடவேண்டும். எழுத்து நன்றாக அமைந்து வாசகரைக் கவர வேண்டும். எழுதுவதில் நம்பகத்தன்மை இல்லையென்றால், அது வாசகர்களைச் சென்றடையாது. ஆகவே அடுத்த சில நிமிடங்களில் அச்சுக்குப் போக இருக்கும் பத்திரிகைக்குத் தகுந்த ஆதாரங்களை திரட்டித் தரவேண்டும். இதுதான் ஒரு பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் தினசரி அவலம்.

*

கனடாவில் பிரபலமான பத்திரிகை ‘ரொறொன்ரோ ஸ்டார்’. காலையில் அநேகம் பேர்களின் கைகளில் அது காணப்படும். 25 வருடங்களாக அந்தப் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவரிடம், ‘ஒரு நல்ல பத்திரிகையாளருடைய இலக்கணம் என்ன?’ என்று கேட்டேன். அவர் இரண்டு வரிகளில் பதில் சொன்னார். ’எழுதுவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எழுத்தில் உண்மை வெளிப்படவேண்டும்.’
சமஸின் கட்டுரைகளைத் தொகுப்பாகப் படித்தபோது எனக்குத் தோன்றியது அதுதான். அவருடைய எழுத்தில் இவை இரண்டும் இருந்தன.

நான் சமஸைச் சந்தித்தது கிடையாது; அவரிடம் பேசியதும் இல்லை. ஆனால், எப்பொழுதெல்லாம் சமஸ் கட்டுரைகள் என் கண்களில் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவற்றைப் படித்துவிடுவேன். அதற்குக் காரணம் அவர் வாதங்களைத் திறமையாக அடுக்கி அதன் தர்க்க முடிவு நோக்கி வாசகர்களை நகர்த்திக்கொண்டு செல்லும் நேர்த்திதான். சமஸுடைய மொழிநடை அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது. அதுபோலத்தான் சமஸுடைய எழுத்தும். ஆர்ப்பாட்டமில்லாமல் ஆழத்தில் பாயும்.


சமகால வரலாற்றுக் களஞ்சியம் - எஸ். வி. ராஜதுரை

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு கலை. எல்லோருக்கும் கை கூடாதது. சமூகத்துக்குத் தேவையான செய்திகளை, ஆழமான பார்வையுடன், இதழியல் உலகம் விதித்திருக்கும் வரம்புகளைக் கருத்தில் கொண்டும், சாதாரண வாசகர்களுக்கும்கூட புரியும் வகையிலும் எழுதுவது அவ்வளவு எளிதானது அல்ல. சமஸ் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.
தமிழக அரசியல், ஈழப் பிரச்சினை, சாதியம், ஜனநாயகம், சுதந்திரம், வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஊடக நெறிகள், மருத்துவம், பாலினம், பாலியல் என வீச்சும் விரிவுமிக்க களங்களில் இறங்கி அவர் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்கையில், ஒரு சமகால வரலாற்றுக் களஞ்சியத்தைப் படிக்கும் உணர்வு உருவாகிறது. இன்னும் ஐம்பது, நூறாண்டுகளுக்குப் பிறகு தமிழக, இந்திய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வரலாற்றை எழுதப் போகிறவர்களுக்கு முக்கியத் தரவுகளைக் கொண்டிருக்கின்றன இந்தக் கட்டுரைகள்.

பாரீஸ் ஏன் பாரீஸாக இருக்கிறது?


தொலைக்காட்சியில் பார்த்தபோது, எழுந்து நின்று அந்தப் பெருங்கூட்டத்தின் கூடவே சேர்ந்து உச்சஸ்தாயியில் கத்த வேண்டும் போல் இருந்தது: “நானும் ஷார்ல்!”

ஒரு மொழியில் ‘மக்கள் எழுச்சி’ என்பதுபோல, ஜனநாயகத்தை உந்தித் தள்ளும் இரு சொற்களின் சேர்க்கைக்கு இணை இல்லை. வரலாற்றில் மிக அரிதான தருணங்களே இந்த ஜோடி சொற்களை உண்மையாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகின்றன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் என 40 உலகத் தலைவர்கள் மத்தியில் நின்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹோலந்த் “இன்று பாரீஸ் உலகின் தலைநகரம்” என்று முழங்கியது கூடுதலான வர்ணனை அல்ல; ‘பாரீஸ் ஷார்ல் ஹிப்டோ பேரணி’ வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய மக்கள் எழுச்சி. கருத்துச் சுதந்திரம் மீதும் படைப்பாளிகள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தி, பிரெஞ்சு மக்கள் வெளியிட்டிருக்கும் சர்வதேசப் பிரகடனம்!

அடிப்படைவாதிகளும் ஆயுதங்களும்


செய்தி மேஜையின் மேல் வரிசையாக வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன பிரெஞ்சு பத்திரிகையான ‘ஷார்ல் ஹிப்டோ’வைப் பற்றிய செய்திகள். பயங்கரவாதிகள் எப்போது, எப்படி வந்தார்கள்... பத்திரிகை அலுவலகத்துக்குள் எப்படிப் புகுந்தார்கள்... எப்படிச் சுட்டுக் கொன்றார்கள்... எப்படிக் கைதுசெய்யப்பட்டார்கள்... எந்த அமைப்பு இந்தப் படுகொலைக்குப் பின்னணியில் இருக்கிறது...

செய்திகள் ஒன்றன் மீது ஒன்றாக விழுகின்றன. கூடவே படங்களும் வந்து விழுகின்றன. சிரித்துக்கொண்டிருக்கும் அதன் ஆசிரியரின் படம். அலுவலகத்தில் பரபரப்பான வேலையில் ஈடுபட்டிருக்கும் அதன் ஆசிரிய இலாகாவினரின் படம். கணினி முன் படம் வரையும் அதன் கேலிச் சித்திரக்காரர்கள் படம். கூடவே கேலிச் சித்திரங்களும் வந்து விழுகின்றன. உலகெங்கும் இந்தப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து வரையப்பட்ட கேலிச் சித்திரங்கள். இடையிடையே துண்டு துண்டாகக் குறிப்புகளில் வந்து விழுகிறது அதன் வரலாறு.

யார் இந்த சமஸ் அல்லது எங்கே நிம்மதி? - அரவிந்தன்

யார் இந்த சமஸ்? - பலருக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். சிலருக்கு வியப்புடன், சிலருக்குக் கடுப்புடன். இரண்டுக்குமே நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும் என்ற முரண்பாடுதான் சமஸின் வசீகரத்துக்குக் காரணம்.

சரியான திசையில் இயங்கும் அக்கறைகள்: ராஜன் குறை கிருஷ்ணன்

மஸ் குறித்து சிந்திக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு பயன்மிக்க வாழ்வை வாழக் கற்றுக்கொண்டுவிட்டாரே என்பதுதான் பொறாமைக்கு காரணம். இப்படி ஒரு இதழியலாளர் தமிழில் இயங்குவது குறித்து மகிழ்ச்சி. அவருடைய அக்கறைகள் சரியான திசைகளில் இயங்குகின்றன என்பதற்கு இந்த தொகுப்பு நூல் முக்கிய சாட்சி.

இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய நான்கு பேருடைய சிறுபட்டியல் வியப்பளிப்பது. ஜெயமோகன், ஞாநி, எஸ்.வி.ராஜதுரை, அ.முத்துலிங்கம். இப்படியாக மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர்களை ஈர்க்கும்படியாக அவர் எழுதியிருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால் அதை சாதிக்க சமஸ் அவர் அதைச்சொன்னார், இவர் இத்தச்சொன்னார் என்று நிலைபாடுகள் எடுப்பதை தவிர்த்து ஒரு வலுவற்ற நடுநிலையை உருவாக்கவில்லை. மாறாக நடுநிலை என்பது ஒரு தார்மீகப் பார்வைதான் என்பதை சமஸின் எழுத்துகள் நிரூபிப்பதாகப் படுகிறது.

அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்: அ.ராமசாமி

காலைத் தினசரிகளில் நான் காலையில்முதலில் வாசிப்பன செய்திகள். அடுத்து நீண்ட செய்திகள். நேரமிருந்தால் செய்திக் கட்டுரைகள். பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால்அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். பல்கலைக்கழகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன்.
மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப்போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு. படிக்கப்படாமல் போய்விடுவதற்கு எனது நேரமின்மை மட்டுமே காரணமாகிவிடாது. செய்திக் கட்டுரையை எழுதியவரின் ஈர்ப்பும் ஒரு காரணம். சமஸின் ‘யாருடைய எலிகள் நாம்?’ தொகுப்பில் இருக்கும் பல கட்டுரைகள் எனது மாலை நேர வாசிப்பில் வாசித்தவை என்பது திரும்பவும் படிக்கும்போது தோன்றுகின்றது.

ஒரு செய்திக்கட்டுரையாளனும் பத்தி எழுத்தாளனும் நிகழ்வுகளுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். நிகழ்ச்சி முடிந்ததைத் தகவலாகக் கருதி எழுதிக்காட்டும் வேலையைச் செய்தால் செய்தியாளனாக இருக்கிறான். நிகழ்ந்து முடிந்துவிட்டபின் காரணகாரியங்களைத் தேடிச் சொல்வதை வேலையாக்கிக்கொள்ளும்போது அவன் செய்திக் கட்டுரையாளனாக ஆகி விடுகிறான். இதழியல் துறையில் இருப்பவர்களுக்குச் செய்தியாளனாக இருப்பதிலிருந்து செய்திக் கட்டுரையாளனாக ஆவது என்பது ஒரு பணி மேம்பாடு. பணி மேம்பாடு என்றவுடன் கூடுதல் சம்பளம் என்பதாகக்கொள்ள வேண்டியதில்லை. அவன் தனது துறையில் தனது அடையாளத்தை வெளிக்காட்டவும், நிலை நிறுத்தவுமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவன் என்ற தகுதியை அடைகிறான். தங்களைத் தகுதிக்குரியவர்களாக்கிக்கொள்ளும் வாய்ப்பை நோக்கி நிற்கும் இதழாளர்களால் நிரம்பி வழியவில்லை நமது பத்திரிகை உலகம். பெரும்பாலான பத்திரிகைகள் - தினசரி, வார இதழ்களின் தேவை செய்தியாளர்கள் மட்டுமே; செய்திக் கட்டுரையாளர்கள் அல்ல.

சமஸ் - இந்தப் புத்தகத்தின் வாயிலாக அறிமுகமான பெயரல்ல. நான் வாசித்த தினசரிகளின் வாயிலாக அறிமுகமான பெயர். அவர் எழுதிய கட்டுரைகளை அவை அச்சில் வந்த காலங்களிலேயே வாசித்திருக்கிறேன். அப்படி வாசித்தபோதெல்லாம் ஒரு செய்திக் கட்டுரையாளர் என்ற அடையாளத்தோடு நின்று போயிருந்தார். இப்போது அவற்றை ஒரே புத்தகமாக வாசிக்கும்போது அந்த அடையாளத்திலிருந்து இன்னும் மேலேயொரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்கிறேன். அதற்கான காரணங்கள் அவர் பின்பற்ற நினைக்கும் இதழியல் நெறிகள் சார்ந்தவைகளாக இருக்கின்றன என்பது அவர் மீது கூடுதலான ஈர்ப்பை உண்டாக்குகின்றன. ஏனென்றால் நிகழ்கால ஊடக உலகம் அவற்றிற்கான நெறிகளைத் தொலைத்த உலகமாக இருக்கிறது. அப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை; நெறிகளை உருவாக்கிக்கொள்ளாத உலகமாக இருக்கிறது என்று சொல்வதே சரியானது.

அரிய சமன்பாடுதான் சமஸிடம் பிடித்தது: பி.ஏ. கிருஷ்ணன்

மஸ் எழுதிய ’யாருடைய எலிகள் நாம்’ புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தோன்றியது இதுதான்: அவருடைய வயதில் எனக்கு அவருக்கு இருக்கும் தெளிவும் சமன்பாடும் ஏன் இல்லாமல் போய்விட்டது? புத்தகம் முழுவதும் அவருக்கு நமது சாதாரண மக்களின் மீது இருக்கும் அக்கறை தெளிவாக வெளிப்படுகிறது. அந்த அக்கறையைத் தாரை தம்பட்டங்கள் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பதே சமஸில் வெற்றி என்று நான் கருதுகிறேன். அவரோடு ஒத்துப்போக முடியாத பல இடங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால் அவரிடம் பேசி அவரை மாற்ற முடியும் அல்லது அவரால் தெளிவு பெற்று நான் மாறலாம். என்ற எண்ணத்தை எனக்கு அவரது எழுத்து அளிக்கிறது.

அழியாக்குரல் - ஜெயமோகன்


செய்தி என்பதற்கும் வரலாறு என்பதற்கும் என்ன உறவு? நேற்றைய செய்திகளால் ஆனது வரலாறு. இன்றைய செய்தியோ நேற்றைய செய்தியின் மீதுதான் வந்து விழுகிறது. அதை மறக்கவைக்கிறது. பொருளற்றதாக்குகிறது. நாலைந்து நாள் பழைய செய்தித்தாள்கூட என்ன இது என்ற துணுக்குறலையே அளிக்கிறது. இந்தப் பெரும் சவாலை ஏற்றுக்கொள்கிறான் செய்தி ஆய்வாளன். இன்றைய செய்தியை அவன் நேற்றைய செய்திகளால் ஆன ஒரு பெரிய பரப்பில் கொண்டுசென்று பொருத்துகிறான். செய்தியின் உடனடித்தன்மையை, முன்பின்னற்ற நிகழ்காலத்தன்மையை, வரலாற்றின் தொடர்ச்சியாக மாற்றிக்காட்டுகிறான். அப்படி மாற்றப்படாத செய்தி என்பது வெறும் தகவல். அதிலிருந்து சிந்தனைகள் கிளைப்பதில்லை. கொள்கைகள் உருவாவதில்லை. வரலாற்றில் வைத்துப்பார்க்கப்படாத செய்தி என்பது பரிசீலிக்கப்படாத செய்தியே.

ஒரு செய்தியில் இருந்து வரலாற்றுக்குச் சென்று வலுவான கேள்விகளையும் ஐயங்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைக்கும் கூரிய கட்டுரைகள் சமஸுடையவை. இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையுமே அவ்வகையிலான வரலாற்று வாதத்தை உருவாக்குபவை என்று சொல்லலாம்.

தமிழின் palimpsest வரலாறு: சாரு நிவேதிதா


மிழ்ச் சமூகத்தை philistine சமூகம் என்று பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  தமிழ்ச் சமூகமே ஒட்டு மொத்தமாக சராசரிகளின், பாமரர்களின் உலகமாக மாறி விட்டது.  சென்ற மாதம் ஒரு கருத்தரங்கத்திற்குச் சென்றிருந்தேன்.  ஆயிரம் பேர் குழுமியிருந்தனர்.  ஒரு விஞ்ஞானி பேசினார். "அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் ரஷ்யர்களும் செய்ய முடியாத விண்வெளிச் சாதனையை நாம் நிகழ்த்தி விட்டோம்."  மங்கள்யான் பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி.  அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரம் பேரும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கோஷம் எழுப்பினார்கள்.  இப்படிப்பட்ட வெட்டிப் பெருமையிலேயே இன்பம் கண்டு  கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.  ஏன் வெட்டிப் பெருமை என்று சொன்னேன் என்றால், இங்கே நடப்பதற்கோ வாகனங்களில் செல்வதற்கோ சாலைகள் இல்லை.  பல்லாங்குழிச் சாலைகள் என்ற பதம் செய்தித்தாள்களில் பொது வழக்காகி விட்டது.  ஏதோ போர்க்கள பூமியைப் போல் காட்சி அளிக்கின்றன சாலைகள்.   ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடையாது.  கல்வி வசதி கிடையாது.  ஏழைகளுக்கு ஒரு கல்வி; மேட்டுக்குடிக்கு ஒரு கல்வி.  குப்பத்துக் குழந்தைகள் குப்பத்திலேயே இருக்க வேண்டியதுதான்.  மேலேறிச் செல்வதற்கான பாதை தரமான கல்வி மறுக்கப்படுவதன் மூலம் நான்கு வயதிலேயே அடைக்கப்பட்டு விடுகிறது.   இது எல்லாவற்றையும் விடக் கொடுமை, பெண்கள் தனியாக நடமாடவே முடியாத நிலை.  இப்படிப்பட்ட கொடூரமான ஏற்றத்தாழ்வுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் மலிந்த இந்த சமூகத்தைப் பற்றிய எந்தக் கவலையோ அக்கறையோ விழிப்புணர்வோ இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுவது பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி.  இதைத்தான் பாமரர்களின் உலகம் என்று சொல்லி வருகிறேன்.  எவ்வளவோ சாதனைகள் புரிந்திருந்தாலும், தங்கள் துறையில் எப்பேர்ப்பட்ட மேதைகளாகவே இருந்தாலும் சமூகப் பிரக்ஞை என்று வரும் போது ஒரு பாமரனைப் போலவே பேசுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பத்திரிகைத் துறை எப்படி இருக்கும்?  ஒட்டு மொத்த சமூகமே சராசரித்தனத்தால் மூடிக் கிடக்கும் போது பத்திரிகையில் எழுதுபவரிடம் மட்டும் நாம் எப்படி ஒரு சமூகப் பிரக்ஞையையும் பொறுப்புணர்வையும் கலாச்சார சுரணையுணர்வையும் எதிர்பார்க்க முடியும்?  அதனால்தான் ஆங்கிலப் பத்திரிகைகளின் நடுப்பக்கக் கட்டுரைகளோடு தமிழ்ப் பத்திரிகைகளால் போட்டி போட முடியவில்லை.  இந்த ஒட்டு மொத்த மொண்ணைத்தனத்துக்கு எதிராகத்தான் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக சிறுபத்திரிகைகள் நடத்திப் போராடி வருகிறார்கள் இலக்கியவாதிகள்.  இதே போன்றதொரு குரலைத்தான் சமஸின் கட்டுரைகளில் நான் காண்கிறேன்.   சமஸ் சிறுபத்திரிகைகளில் இயங்காமல் வெகுஜன இதழ்களிலும் நாளிதழ்களிலும் பணியாற்றியதால் இவரது கட்டுரைகள் லட்சக் கணக்கான மக்களைச் சென்று அடைந்தது ஒரு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

இடதுசாரிகள் ஒண்ணா சேரணும் - நல்லகண்ணு


சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், ரூ. 4,500 வாடகை வீட்டில் இன்முகத்தோடு வரவேற்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இன்றைக்கு 90-வது பிறந்த நாள். இந்த வயதிலும் ஆள் அசரவில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்துக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவர் நள்ளிரவு வரை நீண்ட நேர்காணலுக்கு நிதானமாகப் பதில் அளித்தார்.

எனக்குப் பிடித்த பத்திரிகை குமுதம்!- விகடன் பாலசுப்ரமணியன் கடைசிப் பேட்டி


மிழ் இதழியல் கண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர் எஸ்.எஸ்.பாலன் என்கிற எஸ்.பாலசுப்ரமணியன். பலரையும்போல சினிமா கனவோடு, பத்திரிகைக்கு வந்தவர் அல்ல அவர். பத்திரிகைக்காக சினிமாவை விட்டவர். 1969-ல் அவருடைய தந்தை எஸ்.எஸ்.வாசன் மறைந்தபோது, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் தலைமைப் பொறுப்பு மட்டும் அவரிடம் வரவில்லை; திரையுலகின் உச்சத்திலிருந்த ‘ஜெமினி ஸ்டுடியோ’வின் தலைமைப் பொறுப்பும் அவரிடம் வந்தது. வாசன் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் வெளியான ஜெமினி ஸ்டுடியோவின் ‘மன்சுலு மராலி’ தெலுங்குப் படம் பெரும் வெற்றி பெற்றது. பாலசுப்ரமணியன் தொடர்ந்து படங்கள் எடுத்தார், இயக்கினார். ஆனால், அவருக்குள் இருந்த பத்திரிகையாளன் விகடனைத்தான் முழுமையாக நேசித்தான். ஜெமினி ஸ்டுடியோவில் தொடங்கி, அவருக்குள் இருந்த எழுத்தாளன் சேவற்கொடியோன் வரை சகலமும் அந்தப் பத்திரிகையாளனுக்காக அவர் கொடுத்த விலைகள்.

கொண்டாடப் பல விஷயங்கள் உண்டு, பாலசுப்ரமணியனிடம். தொழிலாளிகள் காலம் முழுவதும் வாழ்த்திய பத்திரிகை முதலாளி அவர். தமிழ் இதழியலில் எழுத்தாளர்களுக்கு என்று ஒரு தனி இடம் பத்திரிகையில் இருந்தது அவருடைய காலத்தில்தான். 1950-களில் ஒரு பவுன் தங்கம் ரூ. 80 விற்ற காலத்தில், ‘முத்திரைக் கதை’களுக்கு ஒரு கதைக்கு அவர் கொடுத்த ரூ. 500 சன்மானம் இன்றைக்கும் எந்த நிறுவனத்துடனும் ஒப்பிட முடியாதது. தொழில்முறைப் பயிற்சி என்பது இன்னமும் கனவாக இருக்கும் தமிழ் இதழியலில், பெரும் புரட்சியை உண்டாக்கியது அவர் கொண்டுவந்த ‘மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’. சமூகநீதிக்கு முன்னுதாரணமாக, நாட்டிலேயே அதிகமாகப் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் - குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - தமிழ் ஊடகங்களில் இன்றைக்கு முக்கியப் பொறுப்புகளில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் பாலசுப்ரமணியன்.

கிட்டத்தட்ட 50 வருஷங்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் அவர் இருந்தார். தமிழில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக முதலிடத்தில் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை உட்காரவைத்துவிட்டு அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். அதோடு, முற்றிலுமாகப் பொது வாழ்விலிருந்தும் விலகிக்கொண்டார்.

அடுத்த ஞாயிறு டிச. 28 அன்று - அவருடைய 80-வது பிறந்த நாள் அன்று - வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட பேட்டியின் ஒரு பகுதி இது. அவரது மறைவையொட்டி இந்த ஞாயிறு வெளியாகிறது.

எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா?


நான் பிறந்த ஊரான மன்னார்குடியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரப் பயணத் தூரத்துக்குள் இருக்கிறது கீழவெண்மணி. கூலி உயர்வாக ஒரு படி நெல்லை இரு படி நெல்லாக உயர்த்திக் கேட்டுப் போராடினார்கள் என்பதற்காக 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட ஊர் அது (1968, டிசம்பர் 25). அவமானகரமான விஷயம் என்னவென்றால்,கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை கீழவெண்மணியைப் பற்றியோ, அங்கு நடந்த படுகொலையைப் பற்றியோ பெரிதாக அறியாதவன் நான். இத்தனைக்கும் திராவிட இயக்கப் பின்னணியைக் கொண்டது என்னுடைய குடும்பம். சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான உணர்வுகளுடனேயே நான் வளர்ந்தேன். ஆனால், பலரையும்போல ‘சாதி இல்லை’ என்று சொல்வதாலும் எல்லோருடனும் பரஸ்பரம் சகஜமாகப் பழகுவதாலும் மட்டுமே சாதி ஒழிந்துவிடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தேன். ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சந்திக்கச் சென்றேன். சாதியின் முழுக் கொடூர முகத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியது அவருடனான உரையாடல்தான்.

காலம் அள்ளிக்கொண்ட கலாரசிகர்!

படம்: ரா. செழியன்

“எங்க ஊர் வேற; கோயில் வேற இல்லை. எங்க ஊர் சாமிக்குப் பேர் சுவாமிநாத சுவாமி. எங்க ஊர்ல வந்து 'சுவாமிநாதன் வீடு எது?'ன்னு கேட்டா, ஆளாளுக்கு ஒரு வீட்டைக் காட்டுவாங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் குறைஞ்சது ஒரு சுவாமிநாதனாவது இருப்பார். பிள்ளைகளைக் கூப்பிடும்போதுகூட 'குமார் முருகா', 'சீனிவாச முருகா'ன்னு முருகனைச் சேர்த்துதான் கூப்பிடுவோம். பெரும்பாலும் எல்லா வீட்டுக் கல்யாணங்களும் கோயில்லதான் நடக்கும். அதனால முகூர்த்த காலத்துல, ஒரே சமயத்துல எழுபது, எண்பது கல்யாணங்கள் நடக்குறதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம். ஊருக்கும் கோயிலுக்கும் எப்படி ஒரு உறவு பாத்தீங்களா?”
- தன் சொந்த ஊரான சுவாமிமலையைப் பற்றி ஒருசமயம் பத்திரிகையில் தேனுகா சொல்லியிருந்தது இது.

சுவாமிமலையையும் முருகன் கோயிலையும் பற்றி மட்டும் அல்ல; தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் எதைப் பற்றியும் தேனுகாவால் பேச முடியும். அந்தக் கோயில்களின் வரலாறு, கட்டமைப்பு, ஓவியங்கள், சிற்பங்கள், கோயில் கலைகள், பிரத்யேக இசைக் கருவிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அவரால் சொல்ல முடியும். வழூவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஐம்பொன் சிலையின் தாள, லய முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே கஜசம்ஹாரமூர்த்தியின் ஆனந்த தாண்டவப் புராணத்துக்கு அவரால் செல்ல முடியும். தேவாரத்தில், கஜசம்ஹாரமூர்த்தியைக் கரி உரித்த சிவன் என வர்ணிக்கும் பாடலைப் பாட முடியும். அங்கிருந்து நேரே பின்நவீனத்துவக் கோட்பாட்டுக்குத் திரும்ப முடியும். ஃபிராய்டின் கோட்பாடுகள், ஆந்த்ரே பிரதோன் கவிதைகள், டாலி, மாக்ஸ், மெஸ்ஸான் ஓவியங்கள் என்று போக முடியும். அப்படியே நேரே நம்மூரில் நவீன ஓவியங்களுக்கு வந்து இங்கே அவற்றின் தாக்கத்தைப் பொருத்திப் பேச முடியும். தமிழ்ச் சமூகத்தின் அற்புதமான பண்பாட்டு வரலாற்றாய்வாளர். கலை விமர்சகர். இன்று இல்லை.

இந்தியாவில் உருவாக்கி விற்கப்போகிறோமா, இந்தியாவை அறுத்து விற்கப்போகிறோமா?

கோஷங்களை உருவாக்குதலில் உள்ள பெரிய அனுகூலம், கோஷங்கள் அவற்றுக்குப் பின்னுள்ள உண்மைகளை முழுக்க மறைத்து, ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிவிடும் என்பதுதான்.

‘இந்தியாவில் உருவாக்குவோம்!’
- நல்ல கோஷம். எதை உருவாக்கப்போகிறோம்? யாருக்காக உருவாக்கப்போகிறோம்?

உடல் முழுவதும் இயந்திரப் பாகங்கள் சுழலும் சிங்கம் படத்தை ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (மேக் இன் இந்தியா) கொள்கையின் சின்னமாக அறிமுகப்படுத்திய மோடி, “இது சிங்கம் எடுத்துவைக்கும் முதல் அடி” என்றார். அதாவது, இந்தியா எனும் சிங்கம் இப்போது தான் தன்னைச் சிங்கமாக உணர்ந்து, முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது என்பது அவர் சொல்ல விரும்பியது. உண்மையில், எதற்காக மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று இந்தியப் பெருநிறுவனங்களின் உலகம் அவரை முன்நிறுத்தியதோ, அந்த நோக்கத்தை நோக்கி மோடி எடுத்துவைத்திருக்கும் முதல் அடி இது!

சிவப்பு நாடாவும் சிவப்புக் கம்பளமும்

முன்னதாக, ஜப்பான் பயணத்தின்போதே இந்தியாவின் புதிய தொழில் கொள்கை எப்படி இருக்கும் என்பதை மோடியின் பேச்சு உணர்த்தியது. “உங்கள் அதிர்ஷ்டத்தை இந்தியாவில் வந்து சோதித்துப் பாருங்கள். இந்தியாவில் குறைந்த செலவில், உற்பத்தியில் பல அதிசயங்கள் நிகழும். எந்தத் தொழிலதிபருமே குறைந்த செலவிலான உற்பத்தியைத்தானே விரும்புவார்? இந்தியாவில் ஏராளமான உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்; வாருங்கள்!” என்று ஜப்பான் தொழிலதிபர்கள் இடையே அவர் தொடங்கிய உரையே சுரண்டலுக்கான அப்பட்டமான அழைப்பு.

சட்டை 50 ரூபாய் என்றால், கூலி எவ்வளவு?
நம்முடைய மக்கள்தொகையையும் வறுமைச் சூழலையும் பயன்படுத்திக்கொண்டு 50 ரூபாய் விலையில் ஒரு சட்டையை நாம் உலகத்துக்கு உருவாக்கிக்கொடுத்துவிடலாம். அப்படி 50 ரூபாய் அடக்கத்தில் ஒரு சட்டையை உருவாக்கு பவருக்கு அந்தச் சட்டையிலிருந்து என்ன வருமானம் கிடைக்கும்? அவருக்கு மூலப்பொருட்களை இத்தனை மலிவாகக் கொடுப்பவருக்கு என்ன கிடைக்கும்? ஒரு நாள் கண்ணியமான வருமானத்தைப் பெற இவர்களெல்லாம் எத்தனை நேரம் உழைக்க வேண்டும்? ஒரு நுகர்வோரோ வியாபாரியோ இதை யோசிக்காமல் போகலாம். அறவுணர்வும் தொலைநோக்கும் கொண்ட ஒரு பிரதமர் நிச்சயம் யோசிக்க வேண்டும்.

எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?


ந்தியா முழுவதும் எல்லாத் தொலைக்காட்சிகளும் வெவ்வேறு மொழிகளில், தங்களுக்கு வசதியான தொனியில் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. “இந்திய வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் பதவியில் இருக்கும்போதே நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, பதவியைப் பறிகொடுத்தார் ஜெயலலிதா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை. தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தண்டனையைத் தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை தொடரும் என்பதால், 10 ஆண்டுகள் அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.”

சிரிப்புதான் வருகிறது. போன வருஷம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தண்டனையோடு சிறைக்குச் சென்றார். ஞாபகம் இருக்கிறதா? 17 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுக்க முடியுமோ அப்படியெல்லாம் வழக்கை இழுத்தடித்தார். இடையிலேயே மனைவி ராப்ரி தேவியை முதல்வர் ஆக்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ரயில்வே அமைச்சர் ஆனார். சிறைக்குப் போனார். இப்போது என்ன செய்கிறார்? வழக்கு மேல் விசாரணையில் இருக்கிறது. பிணையில் வெளியே வந்த லாலு, பாட்னாவில் தன் வீட்டுக் கொல்லையில், ரம்மியமான சூழலில், எதிரே கிடக்கும் மேஜையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, அப்போதைக்கு அப்போது கறந்த எருமைப் பாலில் மலாய் தூத் குடித்துக்கொண்டு பிஹார் அரசியலைத் தீர்மானிக்கிறார். சமீபத்திய தேர்தலில் மக்கள் லாலுவின் கரத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள்.

பிஹார் கதை போகட்டும், நம்மூருக்கு வருவோம். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று அறிவித்ததன் மூலம், 1991-1996 அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது, சரி. 1996 - 2001 திமுக ஆட்சியின் கதை என்ன? 2001-2006 அதிமுக ஆட்சியின் கதை என்ன? 2006-2011 திமுக ஆட்சியின் கதை என்ன? இப்போது 2011-2014 ஆட்சியின் கதை என்ன? நம் எல்லோருக்கும் தெரியும்!

நீரிலிருந்து நிலத்துக்கு...


நீர்ப் பயணம் நிறைகிறது. பயணத்தை எங்கே முடிப்பது? கொற்கை அழைக்கிறது. “கொற்கை பண்டைய தமிழரோட பெருந்துறைமுக நகரம். பாண்டியர்களோட கடல் தலைநகரம். முத்துக்குளிப்புக்குப் பேர் போன எடம். ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே தமிழ்க் கடலோடிங்க வெறும் மீன்பிடியில மட்டும் இல்ல; கடல் வாணிபத்துலயும் எவ்வளவு வல்லமையோட இருந்தாங்கங்கிறதுக்கான சாட்சியங்கள்ல ஒண்ணு” என்கிற நண்பர்களின் வார்த்தைகள் கொற்கையை நோக்கி மேலும் நகர்த்தின. கொற்கைக்குப் பயணமானேன்.

ஆழ்கடல் சூரர்களும் ஊர் காதலர்களும்

சுறா வேட்டைக்குத் தயார்!

நீர்ப் பயணத்தில் பார்த்த இரு ஆச்சரிய ஊர்கள் இவை. ஒன்று, சர்வதேச அளவில் ஆழ்கடல் மீன்பிடியில் சவால் விடும் சூரர்களைக் கொண்ட ஊர். சுறா வேட்டையில் எவ்வளவு ஈடுபாடோ, அதே அளவுக்குக் கால்பந்தாட்டத்திலும் வேட்கை கொண்டவர்கள். ஊரில் சந்தோஷ் டிராபி வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 19. இன்னொன்று, தனக்கெனத் தனிக் கலாச்சாரத்தையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் ஊர். பெண்களுக்குத் திருமணச் சீராகத் தனி வீடு கட்டிக்கொடுக்கும் ஊர். இங்கே காவல் நிலையமும் கிடையாது, மதுக்கடைகளும் கிடையாது. முக்கியமாக, இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ மத நல்லிணக்கத்துக்கு வழிகாட்டி.

இரு ஆச்சரிய மனிதர்கள்!


நீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.

மொதல்ல இங்க ஒத்துமை வேணும்ய்யா... - ஜோ டி குரூஸ்


சென்னை, ராயபுரத்தில் நெரிசலான வீடுகளில் ஒன்றின் சின்ன அறை. சரக்கு மற்றும் கப்பல் போக்குவரத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்றின் தலைவரின் அறை அது என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். “இதுதாம் நம்ம எழுத்துலகம், வர்றீயளா கடக்கரைக்குப் போய்ப் பேசலாம்?” - சிரிக்கிறார் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ நாவல்களின் மூலம் தமிழ்க் கடலோடிகளின் பல்லாயிரமாண்டு வரலாற்றையும் வாழ்க்கையையும் ரத்தமும் சதையுமாகத் தந்தவர். கடலோடி, படைப்பாளி என்பதைத் தாண்டி, உலகெங்கும் தான் சார்ந்த தொழில் நிமித்தம் சுற்றியவர். கடலோடிகளின் நேற்று, இன்று, நாளைபற்றிப் பேசச் சரியான ஆள்.

எண்ணூர் கடற்கரை. “வசதி வரும் போவும்... மனுசம் பழச மறக்கக் கூடாது. அதாம் ராயபுரத்துல இருக்கம். இங்க வீட்டப் பூட்டற பழக்கமில்லய்யா. சுத்தி நம்ம சனம். எதுக்குப் பயம்? உவரியில எங்காத்தா கடல் பக்கம் புள்ளயள வுட மாட்டா. ஆனா, எத அவ செய்யக் கூடாதுன்னு சொன்னாளோ, அதத்தாம் செஞ்சம். விடியப் பொறுக்காம ஓடிப் போயி கடக்கரயில நிப்பம். வலயோட கட்டிக்கிட்டுக் கட்டுமரத்தக் கர வுடுவாறு தாத்தா தொம்மந்திரை. கோவண ஈரம் சொட்டச் சொட்ட நிக்கிற அவுரு காலக் கட்டிக்கிட்டு நிப்பம். காத்துக் காலமா இருந்தா, ஆழிமேல உருண்டு அடிபட்டு வருவாங்க. பருமல் முறிஞ்சி, பாய் கிழிஞ்சி, நெஞ்சில அடிபட்டு, பேச்சிமூச்சி இல்லாம, கை கால் ஒடிஞ்சி, பாக்க பரிதாவமா இருக்கும். காலம் எவ்வளவோ ஓடிட்டு. எஞ் சனத்தோட நெலம மாறலீயே?” - கடற்கரையில் கிடக்கும் கட்டுமரம் ஒன்றில் உட்காருகிறார்.

திடீரென்று எழுத்துலகில் நுழைந்தீர்கள். எடுத்த எடுப்பில் எழுதிய நாவலே தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றானது. அடுத்த நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றுத்தந்தது. பெரிய வாசிப்புப் பின்னணியும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எது இதைச் சாத்தியமாக்கியது?


மொதல்ல, ஒரு கவிதைத் தொகுப்பக் கொண்டுவர்றதுக்காகத்தாம் ‘தமிழினி பதிப்பகம்’ போறம். அங்க ஒரு மேல்தட்டுக் கும்பல் கேலி பண்ணிச் சிரிக்கிது. அவமானம் தாங்க முடியல. அடிக்கணும்போல இருக்கு. தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொல்றார், ‘கன்னத்துல கையால அடிக்காத, அடிக்கிறத உன்னட எழுத்தால நெஞ்சுல அடி’ன்னு. பா. சிங்காரத்தோட ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைக் கொடுக்குறார். ரெண்டே நாள்ல படிச்சி முடிச்சிட்டு எழுதறம், எங்காத்தா குமரியே எனக்குள்ள வந்து புகுந்திற்றமாரி இருந்திச்சி. நிக்க, நடக்க, சாப்புட, தூங்க நேரமில்ல. எங்கெல்லாம் உக்கார்ந்து எழுதினம் தெரியுமா? வீடு, ரயிலடி, தொறைமுகம், கடக்கர... ஒலகம் முழுக்க எங்கெல்லாம் சுத்துறேனோ, அங்கெல்லாம். கங்காரு குட்டியத் தூக்கிக்கிட்டே திரியுமாமே அப்பிடி, எழுதுனத எந்நேரமும் சட்டைக்குள்ளயே வெச்சிக்கிட்டு அலைஞ்சம். என்னமோ ஒரு நெனப்பு, இது உன்னிது இல்லடா, பல்லாயிரம் வருஷமா பேசாத ஒரு சமூகத்தோடதுன்னு. இப்பவும் அதே நெனப்பாத்தாம் ஓடுறம்.

கடலோடிகள்கிட்ட கடலை ஒப்படைங்க! - வறீதையா கான்ஸ்தந்தின்

முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர். கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். சமூக ஆய்வாளர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உரக்கப் பேசும் ‘அணியம்’, ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். வறீதையா தான் எழுதுவதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்கிறார். கடற்கரைச் சமூகத்தின் குரல்களைப் பேசும் 30-க்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னுடைய ‘நெய்தல் வெளி’ பதிப்பகம் மூலம் கொண்டுவந்திருக்கிறார். கடல், கடலோடிகளின் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்திலும் விஞ்ஞான அடிப்படையிலும் நேர்மையாக அணுகுகிறார் வறீதையா.

ஒரு சாதாரணப் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து உங்கள் சமூகத்துக்காகச் செயல்படுபவராக உங்களை மாற்றிய தருணம் எது?


ஊருல நல்ல சேலாளின்னு பேர் வாங்கினவரு எங்கப்பா. கடல் வாங்கலா, கொந்தளிப்பா இருக்குறப்போகூட பள்ளத்துலேர்ந்து ரெண்டு மரம் கடலுக்குப் போகுதுன்னா ஒண்ணு கான்ஸ்தந்தினோடதா இருக்கும்பாங்க. அப்பிடிப்பட்ட மனுஷனா இருந்தாலும், என்னோட சின்ன வயசுல பல நாள் பசியைப் பார்த்திருக்கேன். பஞ்ச காலம் கடல்புறத்தோட கூடப் பொறந்ததா இருந்துச்சு. பஞ்ச காலத்துல ஒரு நாளைக்கு ஒரு வேளை சமைக்கிறதே வீட்டுல பெரிய விஷயமா இருக்கும். எத்தனையோ அப்பாமார்கள் ஆழ்கடலுக்குத் தங்கலுக்குப் போய் மீன் கெடைக்காம, அவங்க சாப்பிடக் கொண்டுபோன கட்டுச்சோத்தைச் சாப்பிடாமத் திரும்பக் கொண்டுவந்து பிள்ளைங்களுக்குச் சாப்பிடக் கொடுக்குறதைப் பார்த்திருக்கேன்.

இந்த வறுமையெல்லாம் சின்ன வயசுல, ஏதோ நம்ம குடும்பச் சூழல்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். பின்னாடி கொஞ்சம் கொஞ்சமாத்தான் புரிஞ்சுது நம்மளோட சகல கஷ்ட நஷ்டங்களும் நாம சார்ந்திருக்குற சமூகத்தோட, அரசியலோட, அரசாங்கத்தோட பின்னிப் பிணைஞ்சதுன்னு. கல்லூரி நாட்கள்ல என்னோட பேராசிரியர் சோபணராஜ் சொல்வார், ‘மனுஷன்னா சமூகத்துக்காக எதாவது செய்யுணும்டா’னு. சுனாமி என்னைத் தள்ளுற அந்தத் தருணமா அமைஞ்சுது.

கடல்புறத்தில் ஒரு ஷூட்டிங்!



பிலோமினாக்கா கேரளப் புகழ் பழரோஸை ஒரு கையிலும் (பழரோஸ் அறியாதவர்கள் கேரளத்து வாழைப்பழ பஜ்ஜி என்று அறிக!) இஞ்சி டீயை ஒரு கையிலும் திணித்தபோது, செல்பேசியில் மணி இரவு மணி 12-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. கூடவே சுடச்சுட இஞ்சி டீ. இடம்: கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்.

“யக்கா, எத்தனை மணிக்குக்கா இங்கெ வருவீங்க?”

“சாயங்காலம் நாலஞ்சு மணி வாக்குல வருவன் தம்பி. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் வியாவாரம். ஆனா, பலகாரம் போட்டு எடுத்தாற நேரத்தையும் சேர்த்துக்கணுமில்ல? பக சாப்பாடு முஞ்சதுமே வேலையைத் தொடங்கணும். எப்படியும் பன்னெண்டு மணி நேர வேலையின்னு வெச்சிக்கயேன்...”

“எவ்ளோவுக்குக்கா ஓடும்?”

“அது ஓடும், நாளைப் பார்த்தாப்புல... அஞ்சாயிரம் வரைக்கும் ஓடும் தம்பி. ஆயரூபா மிஞ்சும்னு வெச்சிக்கோயேன்...”

பிலோமினாக்காவை அடுத்து வரிசையாக உட்கார்ந்திருப்பவர்களில் பாப்பாக்கா வெற்றிலை, பாக்கு விற்கிறார். செஸ்மியக்கா பீடி, சுருட்டு விற்கிறார். ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகும் என்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு பேர் இப்படிச் சில்லறை வியாபாரிகள் மட்டும் இருக்கிறார்கள்.

குடி சுனாமி!


பூம்புகார். பண்டைக்காலச் சோழப் பேரரசின் பொலிவான காவிரிப்பூம்பட்டினம். கடல் கொண்ட புகார் நகரம். நிச்சலனமாக இருக்கிறது. கடல், அலைகள், இரைச்சல் எல்லாமே அந்த இரவில் கண் முன்னே நிலைத்து நிற்கும் ஒரு ஓவியம்போல இருக்கின்றன. மனம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோடி எங்கோ ஒரு இடுக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறது. கடல் மிகப் பெரிய வரலாற்றுக் கிடங்கு. ஏதோ ஒரு தருணத்தில் அது வரலாற்றினூடே நம்மை இழுத்துக்கொள்கிறது. அந்தக் கணங்களில் பேச முடிவதில்லை. யோசிக்க முடிவ தில்லை. மனம் நிச்சலனமாக இருக்கிறது. திடீரெனக் கடலில் கண்ணகியும் கோவலனும் கடந்து போகிறார்கள். திடீரெனக் கடலில் சுனாமி கொண்டுசென்ற உயிர்கள் படபடவென்று மீன் கூட்டம்போலத் தவ்வி எழுகின்றன. திடீரென எதுவும் அசைவற்று சூனியமாய் மாறுகிறது.

பூம்புகார் வருவதற்குச் சில நாட்கள் முன்பு நாகப்பட்டினம் சென்றிருந்தேன். அங்கு மனம் நிலைகொள்ளாமல் அடித்துக் கொண்டிருந்தது. திடீரென சுனாமி நினைவுகள் பேரலை எடுத்து அடித்துத் துவைக்க ஆரம்பித்தன. நாகப்பட்டினம் கடற்கரை ஒருபோதும் மறக்க முடியாத 2004 டிசம்பர் 26 காட்சிகள் கண் முன்னே ஓடுகின்றன. 6,065 உயிர்கள். யார் அழுவதென்றும் தெரியவில்லை. யார் தேற்றுவதென்றும் புரியவில்லை. கடற்கரை முழுவதும் சிதறிக் கிடந்தன பிணங்கள். பெருங்குழிகள் தோண்டி கொத்துக்கொத்தாகப் போட்டுப் புதைத்தார்கள். குழந்தை, பெண், ஆண், ஏழை, பணக்காரர், சாதி, மதம், மொழி, இனம் என்று நாம் பிரித்துவைத்திருக்கும் எல்லாப் பாகுபாடுகளையும் அருகருகே கோத்து, மண்ணோடு மண்ணாக்கி மூடியது மண். அப்போதும் சரி, அதற்குப் பின் ஒவ்வொரு டிசம்பர் 26 அஞ்சலி நிகழ்ச்சியிலும் கடற்கரையில் நின்று கண்ணீர் பொங்க கடலில் பால் குடத்தைக் கவிழ்க்கும் பெண்களைப் பார்க்கும்போதும் சரி, கடல் மரணத்தின் மாபெரும் குறியீடாக மாறி மறையும். எவ்வளவு அற்பமானது இந்த வாழ்க்கை?

இருட்டைக் கிழித்த நான்குருக்கள்
எங்கெங்கோ ஓடும் எண்ணங்களை ஒரு குரல் அறுத்து வீசுகிறது. பெண் குரல். திரும்பிப் பார்க்கும் முன் இரு உருவங்கள் கடக்கின்றன. ஓட்டமும் நடையுமாக. பின்னாடியே இரண்டு சின்ன உருவங்கள். அழுகையும் விசும்பலுமாகத் தடதடவென்று ஓடுகின்றன. என்னவென்று ஊகிக்கும் முன்னே இருட்டில் அந்த முதல் உருவம் கீழே விழுகிறது. அனேகமாக ஆண். தட்டுத் தடுமாறி எழுகிறது. பின்னால், துரத்திச் சென்று தூக்கும் பெண் உருவத்தைத் தள்ளிவிடுகிறது. மிதிக்கிறது. மறுபடியும் கீழே விழுந்து எழுந்து மீண்டும் ஓங்கி ஓங்கி உதைக்கிறது. அலறல். இனம் காண முடியாத அலறல். இதற்குள் பின்தொடர்ந்து ஓடிய இரு சின்ன உருவங்கள் உதைக்கும் கால்களைக் கட்டிக்கொள்கின்றன. அவையும் சேர்ந்து ஓலமிட்டு அழுகின்றன. ஆண் உருவம் அவற்றைப் பிய்த்தெறிய முற்படுகிறது. ஒரு சின்ன உருவத்தைப் பிடித்துத் தூக்கி மணலில் வீசி எறிகிறது. திடுக்கிடும் ஏனைய இரண்டு உருவங்களும், வீசியெறியப்பட்ட சின்ன உருவத்தை நோக்கி ஓட, ஆண் உருவம் தான் ஏற்கெனவே ஓடிய திசையில் மறுபடியும் ஓட ஆரம்பிக்கிறது. ஓடி... ஓடி இருட்டில் கரைகிறது. ஓடிப்போய் அருகில் நெருங்கினால், அடிபட்ட குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு, மண்ணை உதறிவிட்டு அழுதுகொண்டிருக்கிறார் ஒரு பெண். மூவரும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அடித்து உதைத்துவிட்டு ஓடியது சாந்தியின் கணவர். சாந்தியின் பிரச்சினை தமிழகக் கடற்கரைப் பெண்கள் பெரும்பாலானோரைக் கதறவைக்கும் அதே பிரச்சினை. குடி!

அரசியல் விழுங்கிய உரிமைக் கடல்



நாம் அறிந்திருக்கும் இலங்கையைவிட, தமிழகக் கடலோடிகள் அறிந்திருக்கும் இலங்கை நெருக்கமானது. பல்லாண்டு காலமாக அவர்கள் இலங்கையோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக, இரு பக்கக் கடலோடிகளுக்குமே பக்கத்து நாடு ஒரு நாடாக இல்லை; பக்கத்து ஊராக இருந்திருக்கிறது, தொலைவில் மட்டும் அல்ல; கலாச்சார உறவிலும்.

“எங்க முன்னோருங்க சொல்லுறது இது. பல ஆயிர வருஷங் களுக்கு முன்ன இந்த நெலப்பரப்பு முழுக்க ஒண்ணாதாம் இருந்திருக்கு. அப்புறம் கடக்கோளுல ஒடைஞ்சு இலங்கை தனியாவும் இந்தியா தனியாவும் ஆயிருக்கு. எடயில உள்ள சனம் முழுக்க கடல்ல போயிருக்கு. என்னைக்கா இருந்தாலும், தாயா புள்ளையா இருந்தவங்க நம்மல்லாம்பாங்க.”
- இது நாகப்பட்டினத்தில் கேட்டது.


“இங்கெ உள்ள தெதல், ஓட்டுமா, வட்டளாப்பம், பனை ஒடியக்கூழ் இப்பிடிப் பல சாப்பாட்டு அயிட்டங்கள் இலங்கையிலேர்ந்து இங்கெ வந்து ஒட்டிக்கிட்டதுதாம். அந்தக் காலத்துல ரெண்டு பேருல யார் பெரிய ஆளுன்னு நிரூபிக்க வுட்ற சவால்ல ஒண்ணு, மன்னார் ஓட்டம். தனுஷ்கோடிலேந்து தலைமன்னார் வரைக்கும் நீந்திப் போய்ட்டு வரணும். அந்தத் தலமுறையில கடைசி மனுஷன் நீச்சல் காளி. சில வருஷங்களுக்கு முன்னாடிதான் காலமானாரு. இங்கெ உள்ளவங்களுக்கு அங்கெ ஒரு வூடு இருக்கும், அங்கெ உள்ளவங்களுக்கு இங்கெ ஒரு வூடு இருக்கும். சும்மா வந்து ஒரு வாரம் தங்கி சினிமா பாத்துட்டுப் போற வழக்கமெல்லாம் இருந்துச்சு.”
- இது ராமேசுவரத்தில் கேட்டது.

“கடல் வியாபாரத்துல எப்பவுமே நமக்குத் தனி மரியாத அங்கெ இருக்கும். நம்மூர்லேந்து போற எதுவும் தரமா இருக்கும்ண்டு நம்புவாங்க. அவங்க ஊரு சாமானையேகூடக் கேலி பேசுவாங்க. கொழும்பு மக்களோட உபசரிப்ப வேற எந்த ஊரோடயும் ஒப்பிட முடியாது.”
- இது காயல்பட்டினத்தில் கேட்டது.

“அந்தக் காலத்துல கொழும்புன்னாலே நம்ம கடக்கரயில தனி மவுசு. அது எப்படின்னா, கொஞ்சம் வசதி ஏறிப்போச்சுன்னா, ‘என் பரம்பரயெல்லாம் குடிக்கிற தண்ணியக்கூட வள்ளத்துல கொழும்புலேந்து எடுத்தாந்து குடிச்ச பரம்பரயிடா’ன்னு பேசுவாங்க பாத்தீயளா, அப்பிடி.”
- இது குமரியில் கேட்டது.

இவையெல்லாம் அந்தக் காலத்தைப் பற்றிய குரல்கள். இன்றைய நிலவரம் என்ன?

“படகுல ஏறும்போது ஆழிய நெனச்சுக் கடலம்மாவ வணங்குற நாளெல்லாம் போச்சுங்க. ‘அம்மா... தாயீ... சிலோன் நேவிக்காரன் கண்ணுல படாமக் காப்பாத்து தாயி’ன்னு வேண்டிக்கிட்டுதாம் ஏறுறோம்.”
- இது வேதாரண்யத்தில் கேட்டது.

“கண்ணுல பட்ட வாக்குல தொரத்திச் சுத்தி வளைப்பாங்க. கையத் தூக்கச் சொல்லுவாங்க. அந்தப் படகுலேந்து ஒருத்தம் இந்தப் படகுக்கு வருவாம். தேவைப்பட்ட மீனுங்களை எடுத்துப்பாம். மிச்ச சொச்ச மீனுங்கள அப்பிடியே கடல்ல வாரி வீசி எறிவான். வலய அறுத்துடுவாம். கண்ணுல பட்டது எல்லாத்துக்கும் இதுதாம் கதி. எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சதுக்கு அப்புறம் எங்கள அப்படியே முட்டிப்போடச் சொல்லுவாம். பொரடியிலயே கையில கெடக்கிறத வெச்சு இருக்குவாம். தலையில, பொரடியில, முதுவுல. நாங்க தலய தொங்கப்போட்டுக்கிட்டே இருக்கணும். தல நிமிந்தா மூஞ்சிலயே அடிப்பாம். கீழ தடுமாறி வுழுந்தா, மூஞ்சிலயே பூட்சு காலால மிதிப்பாம். மூஞ்சிலயே துப்புவாம். இஸ்டத்துக்கு அடிச்சுட்டு, படகையும் நாசம் பண்ணிட்டு, அவம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பாம்.”
- இது கோட்டைப்பட்டினத்தில் கேட்டது.

“கண்ட வாக்குல சுடுவாங்க. படகைச் சுத்திச் சுடுவாங்க. ஈரக்கொலையெல்லாம் நடுங்கும். ஒரேயொருத்தம் உள்ள வருவான். ‘ஏய், நீ அந்தக் கம்பியக் கையில எடு... நீ, இந்தக் கட்டயக் கையில எடு... ஒருத்தனுக்கொருத்தன் மாத்தி மாத்தி அடிச்சுக்குங்கடா’ம்பாம். ‘மூஞ்சில மாறி மாறித் துப்பிக்கிங்க’ம்பாம். ஏய்க்க முடியாது. ‘உனக்கு அடிக்கத் தெரியாதாடா? அடின்னா இப்பிடி அடிக்கணும்’னு ஓங்கி ஓங்கி அறைவான். இதுக்குப் பயந்துக்கிட்டே இப்பம்லாம் அவங்க வர்றது கண்ணுல பட்டாலே படகுல இருக்குற எல்லாத்தையும் நாங்களே கடல்ல வீசியெறிஞ்சுர்றது. அப்பம்லாம் எங்க வேண்டுதல ஒண்ணே ஒண்ணுதாம். ‘ஆத்தா... எங்களை அடிச்சித் துவைக்கட்டும், அப்பிடியே புடிச்சிக்கிட்டுப் போயி ஜெயிலுக்குள்ள அடைக்கட்டும், என்னா சித்திரவதை வேணும்னா செய்யட்டும், சுட்டுடணும்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு வந்துராமப் பாத்துக்கம்மா’ன்னு வேண்டிக்குவோம்.”
- இது ராமேசுவரத்தில் கேட்ட குரல்.

“இப்பிடித்தாம் சுடுவான்லாம் இல்லீங்க. பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி இங்கேருந்து போன சூசைராஜோட படகை எப்படி அடிச்சாங்க தெரியுமா? ஹெலிகாப்டர்ல பறந்து சுட்டான். ஆறு உசுரு. போச்சு. நாலு வாரம் தேடித் திரிஞ்சோம் பொணம்கூடக் கிடைக்காம. பொஞ்சாதி புள்ளைங்க பரிதவிச்சு நிக்குது. பார்க்கச் சகிக்க முடியாமத் திரும்பத் திரும்ப ஓடுறோம். கொடும. கேவலம் பொழப்புக்கு மீன் புடிக்கப்போயி, அந்நிய நாட்டுப் படைக்காரனால சாவுறதைவிட இந்த நாட்டுல கொடும, அந்தப் பொணத்தைக் கொண்டாந்து அடையாளம் காட்டுனாத்தான் அரசாங்க இழப்பீடு கெடைக்கும். இல்லாட்டி ஏழு வருசம் வரைக்கும் இழப்பீடு வாங்கக் காத்துக் கெடக்கணும். பொணத்தை மீட்டோம். அழிஞ்சு செதைஞ்ச அந்தப் பிண்டங்களப் பாத்து வூட்டுல உள்ளவங்க கதறுனது இருக்கே... நாங்க கட்டையில போறவரைக்கும் மறக்காதுங்க...”
- இது பாம்பனில் கேட்டது.

இரு நாட்டு மக்களிடையே இருந்த அழகான ஓர் உறவு எப்படி நாசமானது? 1984-ல் முனியசாமியில் தொடங்கி இலங்கை ராணுவத்தால், இதுவரை சுடப்பட்டிருக்கும் கடலோடிகள் எத்தனை பேர்? அவர்களுடைய விதவைகள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள்? அவர்களுடைய குழந்தைகளெல்லாம் எப்படி இருக்கின்றனர்? உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றின் கடலோடிகளை, ஆசியாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றின் குடிமக்கள் இப்படிக் கொல்லப்பட்டக் காரணம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் ராஜாங்க சங்கதிகள் என்னென்ன?

இது ஆசிரியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல!


“ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”
புது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன? அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன. எல்லோருடைய பதில்களையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, பின் நிதானமாக ஆசிரியர் கேட்கிறார்: “அப்போ உங்கள்ல ஒருத்தருக்கும் உங்களை ரொம்பப் பிடிக்காதா? உங்களை உங்களுக்கே பிடிக்கலைன்னா, வேற யாருக்குப்பா ரொம்பப் பிடிக்கும்?”

மாணவர்களின் கண்கள் விரிகின்றன. வகுப்பறையில் துணியால் மூடப்பட்ட கரும்பலகையின் ஒரு பகுதியை அவர் திறக்கிறார். “பள்ளிக்கூடத்தைத் தாண்டாத காமராஜர் தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர், படிப்பைப் பாதியில் விட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் சாதுர்யமான முதல்வர். மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்துக்கு ஒதுங்கிய கி.ராஜநாரா யணன் பின்னாளில், பல்கலைக்கழகக் கவுரவப் பேராசிரியர். எதற்கும் கலங்காதே... உலகிலேயே முக்கிய மானவன் நீ... உன்னால் முடியும்!”

அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் தங்களை மீறி கைதட்டு கிறார்கள். ஆசிரியரும் கைதட்டிக்கொள்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இடம்: தமிழ்நாட்டின் பழமையான பள்ளிக் கூடங்களில் ஒன்றான மன்னார்குடி பின்லே பள்ளி (வயது 169). ஆசிரியர்: வீ. ஜெகதீசன்.

பாக் நீரிணைக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் நடுவே...


ந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்...  என் ராசாவுக்காக...
டொடொடொட்டன் டொடொடொட்டன் டொடொடொட்டன் டொடொடொட்டய்ங்...
டொடொடொட்டன் டொடொடொட்டன் டோ டொடொட்டடொட்டடொட்டடொய்ங்...
- அப்படியே கிறக்கிப்போடுகிறார் இளையராஜா. இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்... இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்!

மக்களின் ராஜா

நம்மிடத்தில் வீடுகளில் ஒலிக்கும் இளையராஜா வேறு. உழைக்கும் மக்களிடத்தில், அவர்கள் புழங்குமிடத்தில் ஒலிக்கும் இளையராஜா வேறு. கடலில் பல மைல் தொலைவு வந்துவிட்டு, வலையை இறக்கிவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில், ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, அப்படியே வள்ளத்தின் ஓரத்தில் கை மீது தலை சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறார் சேசண்ணா. அதிகாலையில் எழுந்து மீன் கூடை சுமந்து, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக அலைந்து மீன் விற்றுவிட்டு, வீடு திரும்பும்போது, இரு பக்கமும் பனை மரங்கள் மட்டுமே துணையாக இருக்கும் பாதையில், கூடையில் பாலிதீன் பையில் பத்திரமாகச் சுற்றிவைத்திருக்கும் ரேடியோவில் ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு நடக்கிறார் ரோஸக்கா. படகுத் துறையிலிருந்து நடு ராத்திரியில் குட்டி லாரியில் கூட்டம் கூட்டமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகும்போது தனக்கு மட்டுமல்லாமல், பின்புறம் உட்கார்ந்திருப்பவர் களுக்கும் சேர்த்து ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, வண்டியை விரட்டுகிறார் ராமலிங்கம். அந்தத் தருணங்களில், அந்தச் சூழல்களில், இளையராஜாவின் பாடல்கள் கொண்டுசெல்லும் உலகமே வேறு. அமைதியான தனி அறையில், நுண்ணிய அதிநவீன சாதனங்களின் துணையோடு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போதுகூட இளையராஜா இத்தனை நெருக்கமாகவில்லை. இந்தப் பயணங்களின்போது, மக்களோடு மக்களாகச் செல்லும்போது அப்படி ஒன்றிவிட்டார். அதுவும் கடலோரக் கிராமங்களுக்குச் செல்லும் பஸ்ஸில், ஜன்னலோர இருக்கையில், வெயில் தணிந்த சாயங்கால வேளையில்... வாய்ப்பே இல்லை. அன்றைக்கு இறைவனின் பரிபூரண ஆசி வாய்த்திருந்தது என்று சொல்ல வேண்டும். சரியாக, பாம்பன் சாலைப் பாலத்தில் பஸ் ஏற ஆரம்பிக்கிறது. காற்றில் கரைந்து வருகிறார் மனிதர். ‘அந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...’

ஜன்னலோரத்தில் கீழே வானமும், மேலே கடலும்போல நீலம். மேலே சர்ரெனப் போகிறது ஒரு விமானம். கீழே வரிசையாகச் சென்றுகொண் டிருக்கின்றன படகுகள். பாம்பன் ரயில்வே பாலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறது ரயில். பாம்பன் சாலைப் பாலத்தில், பஸ்ஸில் காதுக்குள் நிலா பிடித்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அடடா, அடடா... சாலைகள், பாலங்கள், தண்டவாளங்களுக்கெல்லாம் உயிர் இல்லை என்று யார் சொன்னது? பாம்பனில் வந்து பாருங்கள். எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. பாம்பன் அழகு, பேரழகு. அந்த அழகு அங்குள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அழகாக்கிவிடுகிறது. இந்தியாவின் மிக ரம்மியமான இடங்களில் ஒன்றான பாம்பனைக் கடந்து பஸ் ராமேசுவரம் நோக்கிச் செல்கிறது.

தமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்!

ரசாயனக் கழிவுகள் கலந்து செங்கடலாகக் காட்சியளிக்கும் நீலக்கடல்.

சென்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாயில்; மாபெரும் கல்வி, தொழில், கலாச்சார மையம். 1688-ல் மாநகராட்சியான சென்னை, இன்றைக்கு 200 வட்டங்கள், 426 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருக்கிறது. 86 லட்சம் மக்களுக்கு அது உறைவிடம். புதிய புறநகர்ப் பகுதிவாசிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 89 லட்சம் ஆகும். மிக விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும்.

அஸ்ஸாம் சென்றிருந்தபோது, அங்கிருந்து வந்து இங்கு வேலை செய்யும் இளைஞர்களுடன் ரயிலில் பேசிக்கொண்டுவந்தேன். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை விடவும் பாதுகாப்பான நகரம், இன துவேஷம் காட்டாத நகரம், வருபவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் நகரம் என்று சென்னையைக் கொண்டாடினார்கள் அந்த இளைஞர்கள். உண்மை. நாட்டின் கடைக்கோடி கிராமத்து இளைஞர்களின் நம்பிக்கைக்கும் கை கொடுக்கும் நகரம் இது. தவிர, நாட்டிலேயே மும்பை, டெல்லிக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நகரமும் இதுதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இன்னும் சென்னையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த மண்ணின் பூர்வகுடிகள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள்? அவர்களை இந்த ஊர் எங்கே வைத்திருக்கிறது?

வணக்கம் வைகுண்டராஜன்!


பத்தில்லாத வேலைகள் உண்டா?
‘நீர், நிலம், வனம்!’ தொடரைத் தொடங்கும்போதே அபாயகரமான சில பயணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன். கடல் மக்கள் வாழ்வை அருகிலிருந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் அவர்களை நெருங்கியபோது, கடல் பயணங்களுக்குத் தயாரானேன். அலைகள் அற்ற கடலில், சௌகர்யமான சுற்றுலாப் படகில் உல்லாசப் பயணம் போவது வேறு; அடித்துத் தூக்கும் மாசாவில் ஏறி, பறந்து, விழுந்து செல்லும் கட்டுமரத்தில் போகும் தொழில் பயணம் வேறு. நீச்சல் தெரியாதவனுக்கு, கடல் பயணங்கள்தான் அபாயகரமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். தமிழகத்தில் கடல் பயணத்தைவிடவும் கரைப் பயணங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைக் கனிம மணல் கரைப் பயணங்கள் உணர்த்தின.

தனி உலகத்துக்கு நல்வரவு
இந்தியாவின் நீளமான கடற்கரையைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. நாட்டின் கடற்கரையில் 13% இது. கடற்கரை என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வரும் மெரினா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய கடற்கரைகளின் முகங்களையும் அங்கு காணப்படும் ஜன நெருக்கத்தையும் இதில் மிகச் சொற்ப இடங்களில், மிகச் சொற்பமான தூரத்திலே காண முடியும். நீரோடியில் புறப்பட்டு, பழவேற்காடு வரை கடற்கரை வழியாக வந்தால் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் நகரங்கள், 591 கடலோடிகளின் கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்கள் யாவும் மர்மப் பிரதேசங்கள். மனித நடமாட்டம் அற்ற இந்தப் பிரதேசங்கள் ஒருபுறம் இணையற்ற அழகு கொண்டவை; மறுபுறம் குற்றங்களுக்கேற்ற களங்கள். ஆலா கத்தும் காடுகளும் சவுக்குத் தோப்புகளும் நாட்டுக் கருவை மரங்களும் நிறைந்த இந்தப் பகுதிகளில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது.

விடை தர முடியவில்லை பி.கே. சார்!

பால கைலாசம்

நான் இதழியல் படித்து வேலைக்கு வந்தவன் அல்ல. நான் இன்றைக்குக் கற்றிருக்கும், பெற்றிருக்கும் பல விஷயங்கள் என்னுடைய ஆசிரியர்களிடமிருந்தே கற்றவை. முதன்முதலில் தினமலரில் சேகர் சார், தினமணியில் பாண்டியராஜன் சார், குருசாமி சார், அப்புறம் வைத்தியநாதன் சார், விகடனில் கண்ணன் சார், இப்போது தி இந்துவில் அசோகன் சார்...

எல்லா நல்லது கெட்டதுகளையும் தாண்டி - பணிப் பெயரால் அல்ல - உண்மையாகவே என்னுடைய ஆசிரியர்கள் இவர்கள். நான் அப்படித்தான் என்றைக்கும் பார்க்கிறேன்.

இந்த ஆசிரியர்களின் வரிசையிலேயே மிக முக்கியமான, நான் மிகக் குறைவான காலம் பணியாற்றிய, பேராசிரியர் திரு. பால.கைலாசம். சுருக்கமாக, பி.கே. சார்.

கரும் பிசாசு!


ன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி. உயரமான சுற்றுச்சுவர்களால் வளைக்கப்பட்டிருக்கும் அந்த வளாகத்தில், ‘இந்திய அரிய மணல் ஆலை' எனும் பெயர் பலகையைத் தாண்டி, உள்ளே ஒரு ஆலை இயங்குவதற்கான எந்த அடையாளமும் வெளியே இல்லை. உள்ளே மலை மாதிரி குவிக்கப்பட்டிருக்கும் மணலைப் பார்க்கும் வெளியூர்க்காரர்கள் எவருக்கும் அவர்களுடைய சிறு பிராயத்து மணல் ஆட்டம் ஞாபகத்துக்கு வரும். கடற்கரை யோர மக்களோ அதைக் கரும் பிசாசு என்கிறார்கள்.

கனிம மணல் என்றால் என்ன?
தமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் மணலைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன. சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட தொழில் இது.

இந்தக் கருமணல் இயல்பிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டது. அதைத் தோண்டிக் கையாளும்போது, அதிலுள்ள கதிரியக்கம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய்க்கான முக்கியமான காரணிகளில் கதிரியக்கமும் ஒன்று என்பதுதான் கருமணலைக் கரும் பிசாசு என்று கடற்கரை மக்கள் அழைக்கக் காரணம்.

கடலில் பாவிய பூதக்கால்கள்!


டலுக்கும் கடற்கரைக்கும் அழகான ஒரு நிறம் உண்டு. அது இயற்கையைச் சிதைத்துவிடாத, பாரம்பரியக் கடலோடிகளின் எளிமையான வாழ்க்கைக் கலாச்சாரத்தால் விளைந்த நிறம். இப்போது அந்த நிறம் வெளிரி புதிதாக வெளியிலிருந்து ஊடுருவும் நிறம் கடலையும் கடற்கரையையும் ஆக்கிரமிக்கிறது. பண வேட்கையும் சுரண்டும் வெறியும் நுகர்வுக் கலாச்சாரமும் சூழ்ந்த நிறம். பாரம்பரியக் கடலோடிகளை அவர்களுடைய பூர்வீகச் சொத்தான கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் அடித்து விரட்டத் துடிக்கும் நிறம்.

கடல்புறத்தில் ஒரு பெண்

ரு இளம்பெண். கல்யாணமாகி மூன்று ஆண்டுகள். இரண்டு குழந்தைகள். இரண்டு வயதில் ஒன்று, ஒரு வயதில் ஒன்று. ஒரு நாள் கடலுக்குப் போன கணவன் திரும்பவில்லை. ஊர் தேடிப் போனது. ஆள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல் துறையும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கிய ஒரு உடலைக் காட்டுகிறார்கள். உடல் என்று அதைச் சொல்ல முடியுமா? மீன் தின்ற மிச்சம். நீரில் ஊறி வெடித்த பிண்டத்தின் எச்சம். உயிர் உடைந்து, கதறித் துடிப்பவள் அப்படியே உறைந்து சரிகிறாள் சுவரோரம். சோறு இல்லை, தூக்கம் இல்லை. பித்துப் பிடித்தவளாய் உறைந்திருக்கிறாள்.

கடல்புறத்தில் ஒரு பெண் தனித்துப் பிழைப்பது அத்தனை எளிதல்ல. ஒரு ஆண் தினமும் கடலோடும்போதே, பெண் வீட்டு வேலையோடு ஆயிரம் கரை வேலைகளையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஜீவனம் சாத்தியம். இந்த நடைப்பிணம் இனி என்ன செய்யும் என்று ஊரும் குடும்பமும் கூடிப் பேசுகிறது. அவளை நோக்கி, கடல் கொன்றவனின் தம்பியைக் கை காட்டுகிறது. உடனிருக்கும் இரண்டு உயிர்களைக் காட்டி வற்புறுத்துகிறது. உலுக்குகின்றன பிள்ளைகளின் பார்வைகள். அவள் கரம் பிடிக்கிறாள். ஓராண்டு ஓடுகிறது. இப்போது இன்னொரு பிள்ளை அந்தக் குடும்பத்தில்.

மேலும் ஓராண்டு ஆகிறது. கடலுக்குச் சென்றவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். வீடு திரும்புகிறான் அவன். அதிர்ந்துபோகிறாள். வீடு திரும்பியவன் பிந்தையவன் அல்ல; முந்தையவன். எவன் செத்தவன் என்று ஊர் நினைத்து எரித்ததோ அவன். கொஞ்ச நேரத்தில் பிந்தையவன் வருகிறான். மூவரும் வாய் பொத்தி நிற்கிறார்கள். மூவரின் முன்னே மூன்று குழந்தைகள். முடிவெடுக்க வேண்டியவள் அவள். இப்போது அவள் என்ன செய்வாள்?

சம்மாட்டியார்: ஒரு கடல் கனவு!

ம்மாட்டியார். கடல்புறத்தில் இந்த வார்த்தை தரும் அங்கீகாரத்துக்கு இணையாக, சந்தோஷத்துக்கு இணையாக, போதைக்கு இணையாக ஒரு வார்த்தை தருமா என்று சொல்லத் தெரியவில்லை. ஒரு மனிதனின் பெயருக்குப் பின் சம்மாட்டியார் என்ற வார்த்தை சேரும்போதுதான் அவன் வாழ்க்கை முழுமை அடைகிறது என்றும்கூடச் சொல்லலாம். சம்பான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை சம்மாட்டியார். சம்பான் என்றால், வள்ளம். சம்மாட்டியார் என்றால், வள்ளத்தின் உரிமையாளர் என்று அர்த்தம்.

எம்ஜிஆரின் உயிரக்காரர்!



சென்னை சைதாப்பேட்டை. கலைஞர் கருணாநிதி வளைவை நெருங்கும்போதே மீன் வாடை தூக்குகிறது. அங்கிருந்து நூறடி தூரத்தில் இருக்கிறது திருக்காரணீஸ்வரர் மீன் சந்தை. சந்தைக்குள் கால் எடுத்துவைத்து நுழையும் முன்னரே, காதுக்குள் நுழைந்துவிட்டார் டி.எம்.சௌந்தரராஜன்.

‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, ஆடும் மனதினிலே ஆறுதல் காணீரோ, ஆடும் மனதினிலே ஆறுதல் காணீரோ...’

வரிசையாக மீன் கடைகள், எதிர்ப்படும் இட்லி தோசை ஆயாக்கள், டீ பையன்களைத் தாண்டி ‘ஆயிரத்தில் ஒருவ’னை நூல் பிடித்துக்கொண்டே சென்றால், ஒரு சின்னக் கடையில் மீன் வெட்டிக்கொண்டிருக்கிறார் கண்ணாடி போட்ட பெரியவர் சேகர்.

“இங்கே எம்ஜிஆருக்கு மீன் அனுப்பியது...” வாக்கியத்தை முடிப்பதற்குள், “ஆமா, இங்கதான். அதுக்கு இன்னாபா?” என்கிறார்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

சென்னையில் உள்ள கடற்கரைகள், மீன் சந்தைகள் அத்தனையிலும் இவரைத் தேடிக்கொண்டிருந்தேன். விசேஷம் ஒன்றும் இல்லை. அவரிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அந்தக் கதை நான் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கான பதிலைத் தரலாம் என்று சொன்னார் ஒரு நண்பர்.

நீவாடுகளுடன் ஓர் ஆட்டம்!


டல் நீரோட்டம் என்பது எவ்வளவு பெரிய சக்தி, அதைப் புரிந்துவைத்திருப்பது எவ்வளவு பெரிய அறிவியல் என்பதை தோமையர் மூலமாக அறிந்துகொண்டேன். குமரியில் கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி நடந்துகொண்டிருந்தபோது, நான் தோமையரைச் சந்தித்தேன். கடலில் மீனவர்கள் இப்படித் தவறும்போது, அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில், நம்முடைய கடலோரப் பாதுகாப்புப் படையினர் முழு அக்கறையோடு ஈடுபடுவதில்லை என்று குற்றம்சாட்டினார் தோமையர்.

“பேரு என்னவோ மீட்புப் பணின்னு பேரு. நடத்துறது என்னவோ நாடகம். குமரியில ஒருத்தன் வுழுந்தா பாகிஸ்தான் கடக்கரை வரைக்கும் தேடணும். அதான் அசலான அக்கறை. நீவாடுன்னா சும்மா இல்ல பாத்தியளா...” என்றார்.

நான் கேட்டேன்: “ஐயா, ஒருத்தரை எங்கே தவற விட்டோமோ, அந்தப் பகுதியைச் சுத்திதானே தேடணும்? தவிர, தமிழ்நாட்டுல தவறின ஒருத்தரை பாகிஸ்தான் கடற்கரையில ஏன் தேடணும்?”

“தம்பி... நெலத்துல ஒருத்தரைத் தவற விட்டோம்னா, அந்தப் பகுதியைச் சுத்தித் தேடறது முறையா இருக்கலாம். இது கடல்லோ? மனுஷன் பொழைச்சுக் கெடந்தா, இங்கேயே சுத்துப்பட்ட எதாவது கரையில ஏறியிருக்கலாம். இல்லேன்னா, சவத்தைக் கடல் கரையில தள்ளியிரும். கடலம்மா தேவையில்லாத எதையும் உள்ளே வெச்சுக்க மாட்டா, பாத்தியளா...

இதுவரைக்கும் நூத்தியம்பது பக்கம் பேரு குமரி மாவட்டக் கடக்கரையில மட்டும் காணாமப்போயிருக்கான். ஊர்க்காரங்க தேடயில, சுத்துப்பட்டு கடலைச் சலிச்சுடுவாங்க. பெறகும், வருஷக் கணக்கா சவம் கூடக் கெடைக்கலையின்னா, என்ன அர்த்தம்? நாம தேடுற மொறை சரியில்லேன்னுதானே அர்த்தம்? நீவாடு தெரியாதவன் மீனவனில்லே. இந்தக் கடல் பாதுகாப்புப் படையில எத்தனை பேருக்கு நீவாடு தெரியும்? நீங்க கடல் பாதுகாப்புப் படையில, ஒவ்வொரு எடத்துலேயும் பாதிக்குப் பாதி மீனவனைப் போடச் சொல்லுங்கங்கிறேன். பெறவு, ஒரு மீனவன் இங்கே காணாமப் போக மாட்டான்.”

“ஐயா, நீங்க எப்படி நீவாடு பார்ப்பீங்க? எனக்குக் கொஞ்சம் காட்டுவீங்களா?”

காற்றில் எத்தனை காற்று?


கோவளம் சென்றிருந்தபோது, ரெமிஜியூஸைச் சந்தித்தேன். ரொம்பவும் வெள்ளந்தியான மனிதர். கோவளத்தில் அன்றைக்குக் கடலடி அதிகமாக இருந்ததால், யாரும் கடலுக்குப் போகவில்லை. அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் கடலடியில் ரெமிஜியூஸின் வள்ளம் சிக்கியிருந்தது. மனிதருக்குக் காலில் பலத்த அடி. ஊமைக்காயம். கடலுக்குப் போகக் கூடாது என்று சொல்லி, வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருந்திருக்கிறார் மருத்துவர். அப்படியும் மனிதருக்குக் கடலைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடற்கரையை விட்டுக் கொஞ்ச தூரத்தில் இருக்கும் வீட்டிலிருந்து விந்திவிந்தி நடந்து கடற்கரைக்கு வந்துவிட்டார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், நெடுநாள் நண்பர்போல ஆகியிருந்தார். ஒருகாலத்தில் தொளுவைப் போட்டியில் முதலிடம் வந்து பரிசு வாங்கியிருக்கிறார். காலில் அடிபட்டது அவர் மனதைப் பெரிய அளவில் உலுக்கியிருந்தது.

ஆறுனபாட்டன் என் பாட்டன்!


வாள்முனிக்கு, இப்படி அவருடைய முழுப் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருப்பது தெரிந்துபோனால், என்னைச் சபித்துப்போடுவார். கையில் கிடைத்தால் அடிக்கவும் செய்யலாம். “கும்புடுற சாமி பேரை முழுசா சொல்லுவாகளா? சாமி கோச்சுகிட்டா என்னா செய்யுறதாம்? மனுசம்னா ஒரு பணிவு, மரியாதி இருக்க வேண்டாமா?” என்பார்.


முனி முதல் அஜித் வரை

அந்தக் காலத்தில் பெரும்பாலான கடலோடிகளுக்கு அவரவர் வணங்கும் தெய்வங்களின் பெயர்களே பெயர்கள். வாள்முனி, கபாலி, அஞ்சாப்புலி, உமையா, குமரி, மாரியம்மா... இந்தப் பெயர்களை முழுவதுமாகக் குறிப்பிட்டு அழைப்பதைக் கடவுளுக்குச் செய்யும் அவமரியாதையாக நினைக்கிறார்கள். முனீஸ்வரன் என்றால் முனி என்றும், மாரியம்மா என்றால் மாரி என்றும் அழைப்பது மரபு.

கடலோரச் சமூகத்துடன் வாணிபத்துக்கு வந்த அரேபியர்கள் மண உறவு கொண்டபோது, தமிழகக் கடல்புறத்தில் மதமாற்றத்தோடு, இஸ்லாமியப் பெயர்கள் அறிமுகமாயின. எனினும், ஏனைய பகுதிகளைப் போல, கடலோர முஸ்லிம்கள் சமூகம் தங்கள் முழு அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள வில்லை. தாங்கள் கடலோடிகள் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள பெயர்களிலும் இன அடையாளத்தைக் கலந்தார்கள். உதாரணமாக, கடலோரத்தில் உள்ள முஹம்மதுவுக்குத் திருமணமானால், அவர் பெயர் முஹம்மது மரைக்காயர். அதேபோல், கதீஜாவுக்குத் திருமணமானால், அவர் பெயர் கதீஜா நாச்சியார்.

கடலோரத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றிய பின், கிறிஸ்தவப் பெயர்கள் உலவ ஆரம்பித்தன. அதேசமயம், கடலோர மொழிக்கேற்ப இந்தப் பெயர்கள் மருவின. ஜோசப் சூசையப்பர் ஆனார். பாரடைஸ் பரதேசி ஆனார். ரோஸ்லின் ரோஸம்மா ஆனார்.

எம்ஜிஆர் வருகைக்குப் பின் இந்த எல்லாப் பெயர்களையும் தாண்டி நம்முடைய சினிமாக்காரர்கள் கடல்புறத்தில் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டார்கள். கோதண்டராமர்கோவில் சென்றிருந்தபோது சந்தித்த ஓர் இளைஞரின் பெயர் அஜித் குமார். வயது எத்தனை என்று கேட்டேன். பதினேழு என்றார். அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அஜித் கடலோர மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.

கட்டுமரக்காரர் எனும் சாகசக்காரர்!


ந்த உலகையே சூழ்ந்திருக்கும் கடலை, ஒரு மரத் துண்டைக் கொண்டு கையாள முடியுமா? முதன்முதலில் கட்டுமரத்தை அத்தனை நெருக்கமாகப் பார்த்தபோதும், அதில் ஏறியபோதும் ஆச்சரியமாக இருந்தது. நான்கு மரத் துண்டுகள் இணைத்துக் கட்டப்பட்ட ஒரு கலம். எவ்வளவு எளிமையான ஒரு கருவி இது. மீனவர்கள் வேகவேகமாகத் தொளுவை (துடுப்பு) போட்டபோதும், கரையிலிருந்து நீரில் தளும்பித் தளும்பி முன்னேறியபோதும்கூட, கட்டுமரத்தை ஒரு மிதவைக் கலனாக மட்டுமே நினைத்திருந்தேன். அலைகள் மீது ஏறி, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் நுழைந்தபோதுதான் தெரிந்தது, கட்டுமரம் என்பது மிதவைக் கலன் மட்டும் அல்ல; காற்றின் கலன். ஒரு கட்டுமரத்தின் இயக்கம் எளிமையானது மட்டும் அல்ல; நுட்பமானதும்கூட!

கடல் அல்ல; உயிர்!

ஒரு கி.மீ. தூரம் நடந்து வந்து ஊற்றில் தண்ணீர் எடுக்கும் தனுஷ்கோடி பெண்கள்.
படங்கள்: முஹம்மது ராஃபி

“ஆடைக்கும் கோடைக்கும் காத்துக்கும் மழைக்கும் இங்கேதான்... இன்னும் எத்தனை புயல் வந்தாலும் சரி; பூகம்பம் வந்தாலும் சரி; செத்தாலும் இங்க கிடந்து சாவோமே தவிர, எங்க கடலை விட்டு அகல மாட்டம்...”
- தனுஷ்கோடியில் கேட்ட இந்த வார்த்தைகள்தான் ‘நீர், நிலம், வனம்' தொடரின் மிக முக்கியமான வார்த்தைகள் என்று சொல்லலாம். இன்னமும் கடலோடும் வயலோடும் வனத்தோடும் ஒட்டி வாழும் நம்முடைய ஆதி சமூகங்களைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கான அடிப்படையும்கூட இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்றும் சொல்லலாம்.

ஒரு வாழ்க்கையை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பது வேறு. அதற்கு உள்ளிருந்து வாழ்ந்து பார்ப்பது வேறு. இந்த வேறுபாடு தனுஷ்கோடியில் கொஞ்சம் வாழ்ந்து பார்த்த தற்கும் அங்குள்ள கடலோடிகளிடம் பேசிப் பார்த்ததற்கும் பின்புதான் புரிபட ஆரம்பித்தது.

தனுஷ்கோடியில் வாழ்தல்
தனுஷ்கோடி வாழ்க்கைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. இன்னமும் அழிந்துவிடாத ஒரு பாரம்பரிய மீனவக் கிராம வாழ்க்கைக்கான உதாரணம் அது. ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையை ஜீப்புகள் வழியாகத்தான் கடக்க வேண்டியிருக் கின்றன என்று எழுதியிருந்தேன் அல்லவா? இப்படி ஜீப்புகளிலோ, வேன்களிலோ தனுஷ்கோடிக்குச் செல்வதும் கூட வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மட்டுமே சாத்தியம். புரட்டாசி தொடங்கிவிட்டால், அடுத்த நான்கு மாதங்களுக்கு இப்படி ஜீப்புகளில் செல்லும் பாதையையும் கடல் சூழ்ந்துவிடுகிறது. திரும்ப, தைக்குப் பின்தான் கடல் உள்வாங்கி, பாதை தெரிகிறது.

அப்படியென்றால், எப்படி வெளியுலகோடு தொடர்புகொள்கிறார்கள்? ஒரு அமயஞ்சமயம் என்றால், எங்கே செல்கிறார்கள்? எப்படிச் செல்கிறார்கள்?

ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது - ஜெயகாந்தன்


ஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். முதுமை நிறைய தளர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால், எந்தச் சூழலிலும் சிங்கம் சிங்கம்தான். எண்பதாவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்துக்குத் தாயாராகிவிட்டது ஜெயகாந்தனின் உடல்நிலை.  “ம்...” என்று கனைத்துவிட்டு, மீசையை வருடியதும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன்.

இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?
காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

தனுஷ்கோடி புயல்: ஒரு கண்ணீர் சாட்சியம்!

புயலில் சிக்கிய ரயிலை அனுப்பிவைத்த அப்போதைய
ராமேஸ்வரம் ரயில் நிலைய அதிகாரி ராமச்சந்திரன்.

னுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார். புயலோடு மறைக்கப்பட்ட வரலாற்றின் இன்னொரு பக்கத்தை ராமச்சந்திரனின் சின்ன பேட்டி தருகிறது.

மக்களின் ஆவணங்கள் வரலாறு இல்லையா?

பாம்பன் பால மறுக்கட்டமைப்புப் பணியைப் பார்வையிடும் ஸ்ரீதரன் (நடுவில்).

பாம்பன் பால மறுகட்டுமானப் பணியைத் தம் சொந்த வீட்டு வேலைபோல,
இழுத்துப்போட்டு செய்த மீனவ மக்கள்.

யிரோட்டமான தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை? இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை?”

நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். எது வரலாறாக வேண்டும் என்பதையும் எதுவெல்லாம் வரலாறு ஆகக் கூடாது என்பதையும் அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பது ஒரு காரணம்.  அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம்.  பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.