அழியாக்குரல் - ஜெயமோகன்


செய்தி என்பதற்கும் வரலாறு என்பதற்கும் என்ன உறவு? நேற்றைய செய்திகளால் ஆனது வரலாறு. இன்றைய செய்தியோ நேற்றைய செய்தியின் மீதுதான் வந்து விழுகிறது. அதை மறக்கவைக்கிறது. பொருளற்றதாக்குகிறது. நாலைந்து நாள் பழைய செய்தித்தாள்கூட என்ன இது என்ற துணுக்குறலையே அளிக்கிறது. இந்தப் பெரும் சவாலை ஏற்றுக்கொள்கிறான் செய்தி ஆய்வாளன். இன்றைய செய்தியை அவன் நேற்றைய செய்திகளால் ஆன ஒரு பெரிய பரப்பில் கொண்டுசென்று பொருத்துகிறான். செய்தியின் உடனடித்தன்மையை, முன்பின்னற்ற நிகழ்காலத்தன்மையை, வரலாற்றின் தொடர்ச்சியாக மாற்றிக்காட்டுகிறான். அப்படி மாற்றப்படாத செய்தி என்பது வெறும் தகவல். அதிலிருந்து சிந்தனைகள் கிளைப்பதில்லை. கொள்கைகள் உருவாவதில்லை. வரலாற்றில் வைத்துப்பார்க்கப்படாத செய்தி என்பது பரிசீலிக்கப்படாத செய்தியே.

ஒரு செய்தியில் இருந்து வரலாற்றுக்குச் சென்று வலுவான கேள்விகளையும் ஐயங்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைக்கும் கூரிய கட்டுரைகள் சமஸுடையவை. இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையுமே அவ்வகையிலான வரலாற்று வாதத்தை உருவாக்குபவை என்று சொல்லலாம்.


ஓர் உதாரணம் ‘ரூ. 2.26 லட்சம் கோடி கேள்விகள்’ கட்டுரை. கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின் முடிவு குறித்த கட்டுரை இது. இந்தியாவின் பொருளாதாரம் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில், தனியார்மயம் நோக்கித் திரும்பி, நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங்கால் அப்போக்கு முழுமைப்படுத்தப்பட்ட கடந்த கால வரலாற்றில், இந்தியக் கல்வி அமைச்சரின் சமீபத்திய கல்வியைத் தனியார்மயமாக்கும் அறிவிப்புச் செய்தியைப் பொருத்திப் பார்க்கிறது இக்கட்டுரை.

சாதாரணமாக ஒரு செய்தியை வாசிக்கும்போது நாம் அதை அப்படி ஒரு பின்புலத்தில் கொண்டுவைப்பதில்லை. அப்படி வைக்கும்போது கடந்த காலத்தில் தனியார்மயம் இங்கே என்னென்ன விளைவுகளை உருவாக்கியது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அது நுகர்வுத் தளத்தில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியது. அதே சமயம், மக்கள் நலத்தின் தளத்தில் உதாசீனத்தைக் கொண்டுவந்தது. கல்வியை ஒரு நுகர்பொருளாக ஆக்கவே தனியார்மயம் வழிவகுக்கும் என்ற இடம் நோக்கி நம் சிந்தனை செல்கிறது.
இந்தக் கட்டுரையுடன் இயல்பாக இணைந்துகொள்கிறது ‘நேற்று நீ; நாளை நான்’ கட்டுரை. “மக்கள் நுகர்வைப் பெருக்கி உற்பத்தி வளர வழிவகுக்க வேண்டும்” என்று அன்றைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கொடுத்த அறைகூவலுக்கு சமஸின் எதிர்வினை இக்கட்டுரை. நுகர்வுக்கு எதிரான பெரும் தரிசனமான காந்தியம் உருவான மண்ணில் எழும் ஓர் அறைகூவல் அது என்று பார்க்கையில் அதன் அர்த்தமே மாறுபடுகிறது.
இவ்வாறு வலைக்கண்ணிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி வரலாறாக விரியும் அனுபவத்தை அளிக்கிறது என்பதனால், இந்நூல் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுதியாக அல்ல; சமகாலத்தையே வரலாறாகப் பார்க்கும் அனுபவத்தை அளிக்கின்றது. நம்மைச் சூழ நிகழ்வனபற்றிய ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கித் தருகிறது.

சமஸை ஒரு தாராளவாத இடதுசாரி என்று சொல்ல முடியும். இடதுசாரிகளின் மூர்க்கமான பொருளியல் குறுக்கல்வாதம் நோக்கி அவர் செல்வதில்லை. அனைத்தையும் ஏகாதிபத்தியச் சதி என்று நோக்கும் ‘போபியா’வும் அவரிடம் இல்லை. நேரு யுகத்தில் இந்திய லட்சியவாதத்தின் ஒளிமிக்க முகமாக இருந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட சோஷலிச கொள்கை கொண்டவராகவே சமஸை இக்கட்டுரைகள் காட்டுகின்றன. ஆகவே அவை வளர்ச்சியை ஐயத்துடன் நோக்குகின்றன. அவ்வளர்ச்சி மக்கள் நலமாக ஆகாதவரை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. சர்வதேச அரசியலில் எப்போதும் மனிதாபிமானக் கொள்கையை முன்னிறுத்துகின்றன. மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களை உறுதியாகச் சார்ந்திருக்க முயல்கின்றன.

ஒருமுறை யூ.ஆர். அனந்தமூர்த்தி சொன்னார். “நான் நேருவியன். அழியும் உயிர். அழியும் உயிராக இருப்பதில்கூட ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது”. மேலும்மேலும் வணிகமயமாகி, நுகர்வுமயமாகிவரும் உலகில் ஜனநாயகம், மனிதாபிமானம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் இடமென்ன என்கிற கேள்வியையும் ஐயத்தையும் சமஸின் கட்டுரைகள் எழுப்புகின்றன. அவை இல்லாமலாகிவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தையும்!

புத்தகத்தை வாங்க, தொடர்புக்கு:
thuliveliyeedu@gmail.com
samasbooks@gmail.com
9444204501

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக