விலைவாசி உயர்வின் விலை!

சென்னை. மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே செல்லும் மாநகரப் பேருந்து.
 ''ஏப்பா... கோயம்பேடு போவணும், தி.நகராண்ட எறக்கிவிடுறியா?"
''பெரிசு இன்னும் நாலு ரூவா குடு."
"ஏப்பா தி.நகருக்கு ஒம்பது ரூவாயா?"
அதிர்ச்சியில் உறையும் அந்தப் பெரியவர்  தனக்குள் முனக ஆரம்பிக்கிறார்.
"நாலு எட்டுல இருக்குற எடத்துக்கு ஒம்போது ரூவா. அப்ப டீ எட்டு ரூவா ஆயிடுமா? ஈபிக்காரன் யூனிட்டு ஒரு ரூவா போட்டப்பவே அஞ்சு ரூவா வாங்குனான் வீட்டுக்காரன். இப்பம் பத்து ரூவா கேட்பான்!"
-விலைவாசி உயர்வை அரசாங்கம் பைசாக்களில் கணக்கிடுகிறது. மக்களோ  அதை வலியால் கணக்கி்டுகிறார்கள்.

இந்தியாவில் எப்போது எல்லாம் விலைவாசி உயர்கிறதோ அப்போது எல்லாம் மாநில அரசுகள் மத்திய அரசையும், மத்திய அரசு மாநில அரசுகளையும் சாடி நாடகமாடுவது வழக்கம்.  'மத்திய அரசு மாநில அரசுகளை வஞ்சிக்கிறது' என்று முதல்வர் ஜெயலலிதா கூடுதலாக  ஓர் அத்தியாயத்தைச் சேர்த்திருக்கிறார்.
ஜெயலலிதா சொல்வது உண்மைதான்.
இந்தியாவில் கல்வி, சுகாதாரம் எனப் பெரும்பாலான மக்கள் நலப் பொறுப்புகள் மாநிலங்கள் மீதே சுமத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், வருவாயில் வெறும் 28.5 சதவிகிதத்தை மட்டுமே மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த ஒதுக்கீடும் ஜெயலலிதா சொல்வதுபோல, மத்திய அரசால் பாரபட்சமாகவே ஒதுக்கப்படுகிறது. உதாரணமாக, 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 2009-10 நிதியாண்டில் காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 35,958 கோடி. காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான தி.மு.க. ஆண்ட தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 17,500 கோடி. எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 14,100 கோடி!
இந்த ஒதுக்கீட்டையும் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வர் கிட்டத்தட்ட ஒரு நியமன அதிகாரி போன்ற திட்டக் குழுத் துணைத் தலைவரிடம் வேண்டிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவமானகரமான சூழலே இங்கு நிலவுகிறது. இன்று நேற்றல்ல; காலங்காலமாக!
இந்த இடத்தில் உங்களுக்கு நியாயமாக சில கேள்வி எழ வேண்டும்: இவ்வளவு மோசமாக, நயவஞ்சகமாக மத்திய அரசு நடந்துகொள்கிறது என்றால், அதை எதிர்த்து ஏன் இவ்வளவு காலமாக மாநில அரசுகள் போராடவில்லை? குறிப்பாக மாநிலச் சுயாட்சியைத் தங்கள் அடிப்படைக் கொள்கையாக அறிவித்த அண்ணா வழிவந்த தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறிமாறி மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், தங்களுடைய சுயலாபங்களுக்காக மிரட்டி மத்திய ஆட்சியையே ஆட்டிப்படைக்கும் வல்லமையைப் பெற்றிருந்தபோதும் ஏன் இதை ஒரு விவகாரமாக்கவில்லை?
இங்குதான் நம்முடைய அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் அம்பலமாகிறது. நம்முடைய அரசியல்வாதிகளுக்குத் தேவை உரிமை அல்ல; பதவி, அதிகாரம்!
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஜெயலலிதாவோ கருணாநிதியோ விமர்சிக்கலாம். ஆனால், இவர்களிடம் மாற்றுக் கொள்கை  என்ன இருக்கிறது? உதாரணமாக, தாராளமயமாக்கல்பற்றி தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன? அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?
கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி; பெட்ரோல் விலை உயரும்போதெல்லாம் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால், பெட்ரோல் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரியில் 27 சதவிகிதத்தை மாநிலத்தின் பங்காக வாங்கிக்கொள்வதில் இரு கட்சிகளுக்குமே தயக்கம் இல்லை.  தமிழக அரசு கடந்த மாதம்கூட பெட்ரோல் விற்பனையில் மாநிலத்தின் பங்காக ரூ. 260 கோடியைப் பெற்றிருக்கிறது.
பொதுத் துறை நிறுவனங்களின் நஷ்டத்தை இந்த உயர்வுக்கு ஒரு காரணமாகக் கூறி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 
அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 6,150 கோடி கடன் சுமையில் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். இதற்குக் காரணம் டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு மட்டும்தானா? அப்படி என்றால், தமிழ்நாட்டில் தனியார் பேருந்து நிறுவனங்கள் அத்தனையும் இந்நேரம் நஷ்டத்தில் அழிந்திருக்க வேண்டுமே?
மின் வாரியம் ரூ. 42,175 கோடி கடன் சுமையில் இருப்பதாகக் கூறுகிறார்  முதல்வர். நாட்டிலேயே அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறியதற்கு இரு கழக ஆட்சிகளுமே காரணம். தமிழகத்தின் 70 சதவிகித மின்சாரத்தை 2.1 கோடி பேர் பகிர்ந்துகொள்ள  10 ஆயிரத்துக்கும் குறைவான பெருநிறுவனங்கள் 30 சதவிகித மின்சாரத்தை எடுத்துக்கொள்கின்றன. இந்தக் கணக்குக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஊழியர் பற்றாக்குறை, அரதப்பழசான இயந்திரங்களால் ஏற்படும்  மின் விரயம், மின் திருட்டு என 30 சதவிகித மின்சாரம் காணாமல்போகிறது.
விலைவாசி உயரும்போதெல்லாம் அரசுக்கு இருக்கும் கடனையும் நிதித் தட்டுப்பாட்டையும் சுட்டிக்காட்டுவது நம்முடைய பிரதமருக்கும் முதல்வர்களுக்கும் வழக்கம். தமிழக அரசுக்குக்கூட இப்போது ரூ. 1.18 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொருளாதார மீட்சி நடவடிக்கை என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு விட்டுக்கொடுத்திருக்கும் தொகை மட்டும் ரூ. 25,95,023 கோடி. அதாவது ஒரு நாளைக்கு ரூ. 1,421 கோடி. தமிழக அரசும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக, பெருநிறுவனங்களுக்காக ஏராளமான சலுகைகளை வாரி இறைத்திருக்கிறது. அரசுக்கு வர வேண்டிய நியாயமான வரி வருவாயைத் தாரை வார்த்துவிட்டு, கடனில் முழ்கி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்?
தொலைநோக்கின்மை, தவறான பொருளாதாரக் கொள்கை, நிர்வாகச் சீர்கேடு, ஊழல்... எப்போதுமே விலைவாசி உயர்வின் அடித்தளம் இவற்றால்தான் கட்டமைக்கப்படுகிறது.
அரசாங்கம் ஆயிரம் விளக்கங்களைச் சொல்லலாம். மக்களின் கேள்வி ஒன்றுதான்: நாங்கள் செய்த குற்றம் என்ன?
ஆனந்த விகடன் 2011

1 கருத்து:

  1. மக்களின் கேள்வி ஒன்றுதான்: நாங்கள் செய்த குற்றம் என்ன?

    பதில்: ஜனநாயகம் வேண்டுமென நினைத்தது..

    பதிலளிநீக்கு