குறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
முதலாவது காலகட்டத்தில், அது பண்டைத் தமிழ்நாட்டின் முத்து நகரமாக இருந்தது. நம் ஞாபகங்களின் நினைவடுக்குகளில் ஒரு தொன்மமாகப் பதிந்திருக்கும் அந்த முத்து நகரமானது, அரேபியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று உலகளாவிய ஒரு பெரும் வாணிப பட்டாளத்துடனான உறவில் திளைத்திருந்தது. தூத்துக்குடிக்கு அந்தப் பக்கத்திலுள்ள காயல்பட்டினம் போன்ற பாரசீகக் கலாச்சாரத்தின் மிச்சங்கள் தங்கிய ஊரும், ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் எச்சங்கள் நிறைந்த ஊரும் பண்டை தூத்துக்குடியின் வாணிப மரபின் எல்லை கடந்த வேர்களுக்கான அத்தாட்சிகள்.
இரண்டாவது காலகட்டத்தில், அது இந்திய சுதந்திரப் போராட்டக் குரல்களை எதிரொலிக்கும் எழுச்சி மிக்க சுதேசி நகரமாக உருமாற முனைந்தது. இங்கிருந்து இலங்கைக்குக் கப்பல்களை இயக்கியது ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’. பிரிட்டிஷாரின் வியாபார ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சிதம்பரனாரின் ‘சுதேசி நாவாய் சங்கம்’ இங்குதான் பிறந்தது. அவருடைய ‘எஸ் எஸ் காலியோ’, ‘எஸ் எஸ் லாவோ’ கப்பல்கள் இங்கிருந்தே கொழும்புக்குப் புறப்பட்டன. தொழிற்சங்கம் எனும் சொல் சாமானியர்களின் புழக்கத்தில் வந்திராத நாட்டில் 1908-ல் பிரிட்டிஷாரின் ‘கோரல் நூற்பாலை’க்கு எதிராக ஊரே திரண்டு தொடர் வேலைநிறுத்தம் நடத்தி, தொழிலாளர் உரிமையை நிலைநாட்டிய நகரமும் இது. அந்தக் காலகட்டத்திய தூத்துக்குடியின் வாணிபச் செல்வாக்கை சொல்லும் சின்னங்கள் நகரின் பழைய துறைமுகம் பகுதியில் இந்தோ சார்சனிக் கட்டிடங்களாக நிற்கின்றன. கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் செழுமையை தூத்துக்குடிக்கு இந்தப் பக்கத்திலுள்ள மணப்பாடு கிராமத்துக்குச் சென்றால், தேவாலயங்கள், மாளிகை வீடுகள், ஸ்தூபிகளில் பார்க்கலாம்.
மூன்றாவது காலகட்டத்தில், இன்று அது பின்காலனிய யுகத்தின் தொழில் நிறுவனங்களுடைய வேட்டை நகரமாகி சிதைவை எதிர்கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தொழில் கொள்கைக்கான பரிசோதனைக் களங்களில் ஒன்றாக தூத்துக்குடியையும் சொல்லலாம். அனல் மின் நிலையங்கள், தொழிற்பேட்டைகள், தனியார் – அரசு கூட்டுறவில் உருவாக்கப்பட்ட முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்பிக்’, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்டெர்லைட்’, உள்ளூரிலிருந்து சர்வதேசம் நோக்கி விரியும் ‘விவி மினரல்ஸ்’ என்று இந்திய அரசுக்கு சாத்தியப்பட்ட எல்லாத் தொழில் கற்பனை வகைமையிலும் தொழிற்சாலைகளை உள்வாங்கி அது நிற்கிறது.
இங்கு ஒரு கேள்வி. இன்று நாம் பார்க்கும் தூத்துக்குடிதான் ஒரு வாணிப நகரம் என்றால், முந்தைய இரு காலகட்டத்திய தூத்துக்குடியை என்ன பெயரிட்டு அழைப்பது?