ரூ. 2.26 லட்சம் கோடி கேள்விகள்



          மெளனமாக மற்றொரு பிரளயத்துக்கு வித்திட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். 1991-ல் ஓர் அமைச்சராக இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் என்ற வார்த்தையை அவர் அறிமுகப்படுத்தினார். தேசம் முதல் பிரளயத்தைச் சந்தித்தது. தாராளமயமாக்கம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள் தனியார்மயம் என்று தேசம் முழுமையாக உணர்ந்துகொண்டது. சரியாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது அவருடைய அமைச்சரவை சகா இன்னொரு பிரளயத்துக்கு வழிவகுக்கும்போது வார்த்தையை நேரடியாகவே பிரயோகப்படுத்துகிறார்: "கல்வியைத் தனியார்மயமாக்குதல்.''
      
               ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இந்த ஆட்சியில் மனித வள மேம்பாட்டுத் துறை வழக்கம்போல குறைந்த கவனத்தை ஈர்க்கும் ஒரு துறையாக இருக்கப் போவதில்லை. அமைச்சர் கபில் சிபல் உறுதியாக இருக்கிறார்: ""1991-ல் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மாற்றம் 2009-ல் கல்வியில் நிகழ வேண்டும்.''
    
           கல்விச் சீரமைப்புகுறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் கபில் சிபல், அதீத கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக்கொள்வதிலிருந்தும் தனியார்மயமாக்குவதிலிருந்துமே கல்வித் துறை மாற்றங்களைத் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதையே கல்விச் சீரமைப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.பொருளாதாரச் சீரமைப்பைப் பற்றி மன்மோகன் சிங் பேசியபோது இருந்த சூழலைவிடவும் அவருடைய சகா கல்விச் சீரமைப்பைப் பற்றி பேசும்போது நிலவும் சூழல் அவருக்குச் சாதகமாக இருப்பதாகவே தோன்றுகிறது. 1990-களில் பெரும்பான்மை இந்திய அறிவுஜீவி வர்க்கம் மன்மோகனுக்கு சாதகமாக இல்லை. ஆனால், இப்போது அதுவே கபில் சிபலுக்கு சாமரம் வீசும்போது சொல்ல வேறென்ன இருக்கிறது?
               முதல்கட்டமாக இந்த அரசு உயர்கல்வியைக் குறி வைத்திருக்கிறது. இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 11 சதமாக இருக்கிறது. இதை 2012-க்குள் 15 சதமாக உயர்த்த 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்ட 1,500 பல்கலைக்கழகங்கள் நமக்கு வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் இப்போது ஏறத்தாழ 400 பல்கலைக்கழங்களே இருக்கின்றன. இதிலும் மூன்றில் ஒரு பகுதி தனியார் பல்கலைக்கழகங்கள். ஆகையால், இலக்கை எட்டும் தீர்வாக தனியார்மயமாக்கல் முன்வைக்கப்படுகிறது. 
            மேலும், வெளிநாடுகள் சென்று கல்வி கற்கும் மாணவர்களால் ஆண்டொன்றுக்கு ரூ. 35,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதால் கல்வித் துறையில் அந்நிய முதலீட்டை ஏன் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்கிறார்கள். நாம் கொஞ்சம் மாற்றி யோசிப்போம். உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை இந்த அளவுக்கு அதிரடியாக - அவசரமாக ஏன் உயர்த்த வேண்டும்? அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வியில் சேர முற்படும்போது போட்டி ஏற்படுகிறது. ஆகையால், அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதைத் தவிர்க்கவும் எல்லோரும் உயர்கல்வி கற்கவும் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியமாகிறது. நாம் கொஞ்சம் மாற்றி யோசிப்போம். எல்லோரும் ஏன் உயர்கல்வி கற்க வேண்டும்? தயவுசெய்து இந்தக் கேள்வியை கொஞ்சம் விரிவான தளத்தில் - மிக மோசமான நிலையில் நம்முடைய தொடக்கக் கல்வி இருக்கிறது என்ற உண்மையின் பின்னணியில்-நாட்டின் 93 சதம் பேர் அமைப்புசாரா வேலைகளிலேயே இருக்கின்றனர் என்ற உண்மையின் பின்னணியில் யோசியுங்கள். அதாவது, உயர்கல்வி என்பது உண்மையிலேயே எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாக இருக்கிறதா அல்லது திட்டமிட்டு ஒரு மாயையாக உருவாக்கப்படுகிறதா? தேசியத் தர மதிப்பீட்டுக் குழு (நாக்) என்ன சொல்கிறதென்றால், நம் நாட்டில் இப்போதுள்ள ஆகப் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தரமற்றவை என்கிறது. இதன் இயல்பான விளைவாக நம் நாட்டில் பத்தில் இருவரே வாங்கும் பட்டத்துக்கேற்ற கல்வித் தகுதியைப் பெறுகின்றனர். அதாவது, முக்கால்வாசிக்கும் மேலானோர் அரைகுறைப் பள்ளிப் படிப்பில் பெற்ற அறிவையும் பெயருக்குப் பெற்ற பட்டத்தையும் கொண்டே வேலைகளைப் பெறுகின்றனர்; அனைத்துத் துறைகளும் இப்படியானவர்களைக் கொண்டே காலம் கடத்துகின்றன.
   
        இந்த உண்மை கண்கூடாக இருக்கும் நிலையில், போலித்தனமாக எல்லோருக்கும் உயர்கல்வி அளிப்பதாலும் பட்டங்கள் அளிப்பதாலும் இடைத்தரகர்களைத் தவிர்த்து யாருக்கு லாபம்? அல்லது பள்ளிப் படிப்பே போதுமான ஒரு வேலைக்கு எதற்காக பட்டம்?

   
       யோசித்துப் பாருங்கள். இப்போதெல்லாம் கல்வித் துறை ஏன் மதிப்பெண்களை வாரிவாரி வழங்குகிறது? போலியாகத் தேர்ச்சி பெற வைக்கிறது? போலியான போட்டியை உருவாக்குகிறது? போலியாக எண்ணிக்கையை உயர்த்த முயல்கிறது?
    
      இந்தக் கேள்விகளின் மதிப்பு சாதாரணமானதல்ல. ரூ. 2.26 லட்சம் கோடி. ஆமாம். 2012-க்குள் இந்தியாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15 சதமாக வேண்டுமானால், 11-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையின்படி அதற்கு இத்தனை தொகை தேவை. இத்தனை பணம் அரசிடம் இல்லாததால்தான் கல்வியைத் தனியார்மயமாக்குகிறோம் என்கிறார்கள். ஆகையால், சீரமைப்பு குறித்து பேசுகிறவர்கள் - ரூ. 2.26 லட்சம் கோடியைப் பற்றி பேசுகிறவர்கள் அதே மதிப்பைக் கொண்ட இந்தக் கேள்விகளையும் தங்களோடு பேச அனுமதிக்கலாம்; பதிலளிக்க முயலலாம்: உண்மையாகவே நாம் நம் மாணவர்களை மேம்படுத்த விரும்பிகிறோமா அல்லது போலிக் கௌரவத்தின் பின்னணியில் மேலும் சில ஆயிரக் கல்விப் பெருச்சாளிகளை உருவாக்க முயல்கிறோமா?
2009 தினமணி 

1 கருத்து:

  1. எனக்கு இது குறித்து பல நாட்களாக ஒரு கேள்வி உண்டு. அடிப்படை வசதிகளான கல்வி, உணவு சுகாதாரம் போன்றவற்றில் ஏற்படும் நிதி மட்டும் உள் கட்டமைப்பு பற்றாக்குறையால் இவை தனியார்மயம் ஆக்கப்படுவதை அரசு வரவேற்கிறது. சரி. பொது நிறுவனங்கள் தங்கள் முதலீட்டிற்காக மக்களிடம் இருந்து பணத்தை பங்குகள் அடிப்படையில் பெற்று செயல் படுகிறதல்லவா? அவ்வாறு ஏன் அரசாங்கமே இதுபோன்ற தேவைகளிலும் செய்யக்கூடாது? இப்பொழுதும் government bond/shares உள்ளது. ஆனால் நான் கேட்பது, ஒரு தனியார் யூனிவர்ஸிடி தொடங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அதை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்காமல், குறந்தது 51% பங்கை அரசாங்கம் தன் வசம் வைத்திருந்து மீதியை தனியாரிடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது அரசாங்கத்தின் தலையீடும் இருக்கும், தனியாரின் அராஜகங்கள் மட்டுப்படும். அரசாங்கம் தங்களுக்குத் தேவையான நிதியை பொது மக்களிடம் இருந்து ஷேர் அல்லது பாண்டின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் லாபத்தில் இருந்து முழுவதும் தனியார் வசம் செல்லாமல், அரசாங்கத்தின் பங்கிற்கேற்ப அவை பிரிக்கப்பட்டு அதில் முதலீடு செய்பவர்களுக்கும் சென்றடையுமல்லவா? இது போன்று ஒரு ஏற்பாட்டை கல்வி மற்றும் மருத்துவமனை முதலியவற்றில் அரசாங்கம் ஒரு கட்டாயமாக தொடங்கும் பொழுது அதில் நடக்கும் முறை கேடுகளும், தனியாரின் பேராசைகளும் கேள்விக்குறியாகும். ஏனெனில் அரசாங்கத்தின் பங்கு என்பது வெறும் பெயரளவில் இல்லாமல் மக்களின் முதலீட்டுடன் இணைந்திருப்பதால், அவர்களுக்கு லாபத்தின் பங்கு தரப்பட வேண்டிய கட்டாயமும் இருப்பதால் ஊழலும் மட்டுப்படும், பொதுமக்களும் பயனடைவர். இது சில விஷயங்களை உற்று நோக்கும் பொழுது எனக்குள் எழுந்த கேள்வி. இதன் சாதக பாதகங்களை உங்களைப் போன்ற சமூக ஆரவலர்கள் எடுத்துரைக்க வேண்டும். நன்றி!

    பதிலளிநீக்கு