சச் கா சாம்னா

    ஒரு சராசரி இந்திய அரசியல்வாதிக்கும் மிகச் சிறந்த பிரெஞ்சு சமூகவியல் சிந்தனையாளருக்கும் முடிச்சு போடுவது நகைப்புக்குரியதாக இருக்கலாம். ஆனால், நடந்து முடிந்த மாநிலங்களவைக் கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் கமல் அக்தர் முன்வைத்த சில கருத்துகள், ழான் பால் சார்த்ருக்குப் பின்னர் பிரெஞ்சு சமூகத்தின் பெரிய அறிவுஜீவியாக மதிக்கப்படும் சமூகவியல் சிந்தனையாளர் பியர் பூர்தியுவின் கருத்துகளை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.
    கடந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் முடிந்தபிறகு பேசிய அக்தர், பார்வையாளர்களைக் கவருவதற்காக (டிஆர்பி) தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்கொள்ளும் அத்துமீறல்கள் குறித்து பிரச்னையைக் கிளப்பினார். இதற்கு உதாரணமாக தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் பிரபலமாகிவரும் 'சச் கா சாம்னா' (உண்மையை எதிர்கொள்) நிகழ்ச்சியை அக்தர் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்ச்சி ஓர் அசல் காட்சி (ரியாலிட்டி ஷோ) வகை நிகழ்ச்சியாகும். அண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண்ணிடம் அவருடைய கணவரின் முன்னிலையிலேயே நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்வி: ""உங்கள் கணவரைத் தவிர்த்து வேறு எவருடனும் நீங்கள் உறவு கொண்டிருக்கிறீர்களா?'' இதற்கு அந்தப் பெண் அளித்த பதில்: ""இல்லை.'' ஆனால், உண்மையைக் கண்டறியும் சோதனை (பாலிகிராஃப் டெஸ்ட்) அந்தப் பெண் பொய்யான பதிலை அளிப்பதாகக் கூறியது. இத்தனையும் தொலைக்காட்சியில் அந்தப் பெண்ணின் கணவரின் முன்னிலையிலேயே அரங்கேறியது. இந்நிகழ்ச்சி அந்தத் தம்பதியின் வாழ்வில் எத்தகைய மோசமான ஓர் அனுபவமாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. மாநிலங்களவையில் அக்தர் இதைக் குறிப்பிட்டார். சமூகத்துக்கு எதிரான பெரிய தீய சக்தியாக தொலைகாட்சி அலைவரிசைகள் மாறிவருவதைச் சுட்டிக்காட்டினார். இதற்கு அரசு எடுக்கப்போகும் எதிர் நடவடிக்கை என்னவென்று கேள்வி எழுப்பினார். இத்தகைய சூழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
    தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிலையும் ஏறத்தாழ இப்படித்தான் இருக்கிறது. தமிழ் நகைச்சுவைத் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் அண்மையில் இப்படி ஒரு காட்சியைக் காண நேர்ந்தது. சாலையில் செல்வோரையெல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் துடைப்பத்தால் அடிக்கிறார். அதாவது, கையில் துடைப்பத்துடன் செல்லும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சாலையில் வருவோர் - போவோர் மீதெல்லாம் அந்த துடைப்பம் படுமாறு செல்கிறார். இதற்கு அந்த அப்பாவிகள் காட்டும் எதிர்வினையைக் காட்டி எல்லோரையும் சிரிக்கச் சொல்கிறார்கள். தொலைக்காட்சி என்ற ஊடகம் தனி மனித வாழ்க்கையின் மீதும் சமூகத்தின் மீதும் செலுத்தும் அடையாள வன்முறைக்கு எளிய உதாரணங்களாக இந்நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இதற்கு முக்கியமான காரணம், தொலைக்காட்சி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் அதீதமான சுதந்திரமும் அதை நம் அரசும் சமூகமும் அனுமதிப்பதுமாகும். பொதுவாகவே, பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் தமக்கும் பொருந்தும் என்று தொலைக்காட்சி அலைவரிசைகள் (அவை பொழுதுபோக்கு அலைவரிசைகளானாலும்கூட) கற்பிதம் செய்துகொள்கின்றன. பெரும்பாலான அலைவரிசைகள் செய்திகளையும் கொஞ்ச நேரம் ஒளிபரப்புவதால் அல்லது கூடுதலாக ஒரு பிரத்யேக செய்தி அலைவரிசையையும் நடத்துவதால் இது நியாயமானதாகவும்கூட வாதிடப்படுகிறது. ஆனால், பொறுப்புணர்வு என்ற தளத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் எதையுமே பொருட்படுத்தத் தயாராக இல்லை. 
    இதன் மோசமான விளைவு என்னவென்றால், தொலைக்காட்சி அலைவரிசைகளின் அதே பொறுப்பற்றதனமும் வியாபாரப் போட்டியும் பத்திரிகைத் துறையையும் பீடிக்கத் தொடங்கியிருப்பதுதான். தேசிய அளவிலான பிரபல இதழொன்று சில மாதங்களுக்கு முன் பாலியல் சிறப்பிதழ் வெளியிட்டது. இதற்காக, "இந்தியாவில் அதிகமான ஆண்கள் உறவுகொள்ள ஏங்கும் பெண் பிரபலம் யார்'' என்ற ஆய்வை (?!) மேற்கொண்ட அந்த இதழ், ஆய்வின் முடிவாக ஐஸ்வர்யா (பச்சன்) பெயரை அவருடைய கவர்ச்சியான படத்துடன் வெளியிட்டது (எப்பேர்ப்பட்ட முற்போக்குப் பத்திரிகையாளரும் தன் மனைவியைப் பற்றி இப்படியொரு செய்தியை அனுமதிப்பார் என்று தோன்றவில்லை). அதாவது, போட்டியை எதிர்கொள்ள - சந்தையைக் கையகப்படுத்த எந்தவொரு நிலைப்பாட்டுக்கும் ஊடகத் துறை தயாராக இருக்கிறது. தொலைக்காட்சி அலைவரிசைகள் இதை முன்னெடுக்கின்றன; ஒட்டுமொத்த ஊடகத் துறையையும் தம்மோடு சேர்த்து இழுக்கின்றன. பூர்தியு இதைத்தான் சொன்னார்: "இதழியல் உலகம் ஒரு களம். ஆனால், தொலைக்காட்சிப் பார்வையாளர் கணிப்பின் வாயிலாக அது பொருளாதாரக் களத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இருக்கிறது'' என்றார். "பொருளாதாரத் தேவையின் சுமை தொலைக்காட்சி அலைவரிசைகளை அழுத்துகிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளின் சுமை மற்ற பத்திரிகைகள் மீதும் இதழாளர்கள் மீதும் அழுத்தப்படுகிறது'' என்றார். "ஜனநாயகத்தின் பெயரால் இத்தகைய சூழலுக்கு எதிராக நாம் போராட வேண்டும்'' என்றார். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பகுத்துப் பயன்படுத்தத் தெரிந்த ஐரோப்பிய சமூகத்தின் முன், உன்னதங்களைப் பற்றி அக்கறையோடு பேசும் பிரெஞ்சு சமூகத்தின் முன் நின்று இப்படி அறைகூவல் விடுத்தார் பூர்தியு. அக்தரோ, அரசியல் கனவு வந்த அடுத்த க்ஷணமே தொலைக்காட்சி அலைவரிசையையோ, பத்திரிகையையோ தொடங்கத் திட்டமிடும் இந்தியச் சமூகத்தின் முன் நின்று அறைகூவல் விடுக்கிறார். ஜனநாயகத்தின் பெயரால் நாம் போராடித்தான் ஆக வேண்டும்! 
2009 தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக